Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 செப்டம்பர், 2018

வாழ்வை மாற்றிய ஒரே ஒரு வாசகம்..!


ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது. அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு, அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்? என்பதே அந்த சிந்தனை.

உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னார். வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவரை காப்பற்றக்கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள். நமசிவாய என்றார் ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தார்.

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து மன்னா, நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்கவேண்டாம். பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பணிவாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது. சில வருடங்களுக்குப் பின், திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் உண்டானது. தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.

நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினார். அச்சமயம் தூரத்தில் ஒரு மலையினை கண்டார். அங்கு தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்து இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி உரக்க கத்தினார்.

அப்போது அவர் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டார். அப்போது மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தார். மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது.

அது இந்த நிலையும் மாறும்... என்ற வாசகமே..

அந்த வாசகத்தை படித்த பிறகு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டார். உடனே மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினார். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினார். அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனார்.

இதனால் மக்கள் மிகவும் மகிழ்ந்தனர். இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்தவரை பறையறிவித்து வரவழைத்தார். நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. மோதிரம் கொடுத்தவர் வந்ததும் மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றார். தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவரும், வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மை என்றால், அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றார்.

மன்னரும் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தார். அதில் இந்த நிலை மாறும் என்றிருந்தது. இதுதான் மன்னா வாழ்க்கை, இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள், நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.