Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 6 ஜனவரி, 2021

சசிகலா விடுதலை: பாஜக போடும் பிளான், டென்ஷனில் எடப்பாடி

 கை நழுவிப் போன ரஜினி.. மனம் தளராத பாஜக.. சசிகலாவை வைத்து அடுத்த  ஆட்டத்துக்கும் ரெடி? | BJP' next Political game with Sasikala to target  AIADMK? - Tamil Oneindia

சசிகலா விடுதலை நெருங்கி வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக்கு உள்ளாகியிருப்பதாக கூறுகிறார்கள்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சசிகலா விடுதலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரது வருகை அதிமுகவுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா தலைமை வகித்த அதிமுகவை உடைத்த டெல்லி தற்போது அதே சசிகலாவை கொண்டே அதிமுகவை இணைக்க முயற்சிக்கிறது.

இரு வாரங்களில் சசிகலா விடுதலை!

எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்று நான்கு ஆண்டுகள் முடிவடையப் போகிறது. ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலையாக உள்ளார். சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நடத்திய முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் விடுமுறை நாள்களிலிருந்து பரோலில் இரு முறை வெளியேவந்த நாள்களை கழித்தால் ஜனவரி 27ஆம் தேதி அவர் வெளியாவது உறுதியானது. சிறை நிர்வாகமும் இதை உறுதி செய்தது.

வரவேற்புக்கு ஏற்பாடு!

இந்த மாதம் விடுதலையாக உள்ளதால் மாத தொடக்கத்திலிருந்தே தினகரன், திவாகரன் உள்ளிட்ட அவரது சொந்தங்கள், அதிமுக, அமமுகவைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் என பலர் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கர்நாடக சிறைத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சசிகலா விடுதலையாகும் நாளில் அவருக்கு பெங்களூரிலிருந்து தி.நகர் இல்லம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர்.

இணைப்புக்கு தயாராகும் கட்சிகள்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ரஜினி அரசியல் வருகையை கைவிட்ட நிலையில் சசிகலாவின் விடுதலை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சசிகலா வந்த பின் கட்சிக்குள் எந்த வித பாதிப்பும், தாக்கமும் இருக்காது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் கட்டாயம் மாற்றம் இருக்கும் என்பதால் உருவான பதற்றமே அவரை இவ்வாறு பேசவைக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். சமீபத்தில் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அமமுக தினகரன் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். இனி அதிமுகவை விமர்சிக்க வேண்டாம், திமுகவை மட்டும் விமர்சியுங்கள் என்பதுதான் அது. இதனால் அதிமுக, அமமுக இணைப்பு ஏற்படும் என பேசப்பட்டது.

எடப்பாடியை மறுக்கும் டெல்லி

பாஜகவின் தற்போதைய திட்டமும் அதுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். “எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் முதல் டெல்லி தலைமை வரை அதிருப்தி காட்டுகின்றனர். இதனாலே ஒரு இடத்தில் கூட எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்று அவர்கள் கூறவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பட்சத்தில் பாஜகவுக்கு வேறு ஆப்ஷன் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில் அதிமுகவை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜகவுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அதிமுகவை பலப்படுத்தி அதன் பின்னர் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யலாம் எனற முடிவில் உள்ளது” என்கின்றனர்.

எடப்பாடிக்கு உருவான பயம்!

சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுகவுடன் அவர்களையும் இணைத்து கட்சியைப் பலப்படுத்தினால் திமுகவுக்கு பலமான எதிர்ப்பு கொடுக்கலாம் என பாஜக திட்டம் போடுகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு காட்டும் என்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக முதல்வராக பதவி வகிப்பதோடு, முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா வந்தால் தனது தற்போதைய செல்வாக்கும் அதிகாரமும் குறையும் என எடப்பாடி தரப்பு பயப்படுவதாக கூறுகிறார்கள். தர்மயுத்தம் நடத்தி பின்னர் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார். எனவே எடப்பாடிக்கு எதிரான ஆபரேஷனை யார் முன்னெடுத்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.

மீண்டும் இரட்டை இலை முடக்கம்!

சசிகலா உள்ளே வந்து அமமுக, அதிமுக இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி மீண்டும் எழும். இணைப்பிற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் கட்சியை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவையும் அமமுகவையும் இணைக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். கட்சியை உடைப்பது, சின்னத்தை முடக்குவது ஆகியவற்றில் பாஜகவுக்கு ஏற்கெனவே அனுபவம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. இதனாலேயே செல்லுமிடங்களிலெல்லாம் கட்சியை உடைக்க சதி நடப்பதாக பேசிவருகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சூடாகும் தேர்தல் களம்!

பாஜகவின் இந்த திட்டங்களுக்கு சசிகலா எந்த அளவு ஆதரவு கொடுக்கப் போகிறார், எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுப்பாரா, முரண்டுபிடிப்பாரா, சின்னம் முடக்கப்படுமா, ஒருவேளை முடக்கப்பட்டால் அது யாருக்கு சாதகமாக முடியும் என்றெல்லாம் பல கேள்விகள் தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவைச் சுற்றி வலம் வருகின்றன. இந்த மாத இறுதியில் சசிகலா வெளியே வந்தபின் அதற்கான பதில்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!