இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா தனது நிலுவை தொகை மற்றும் கட்டணங்களை அரசுக்கு செலுத்த முடியாத காரணத்தால், மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களைக் காப்பாற்றும் நோக்கில் நிலுவை கட்டணங்களுக்கு இணையாக நிறுவனப் பங்குகளை அளிக்க ஒரு வாய்ப்பை கொடுத்தது.
வோடபோன் ஐடியா நிர்வாகம் மத்திய டெலிகாம் துறைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இந்நிறுவனத்தின் நிலுவை தொகைக்காக மத்திய அரசுக்கு 35.8 சதவீத பங்குகளை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு முதல் முறையாக ஒரு தனியார் டெலிகாம் நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகம் மத்திய அரசுக்கு 35.8 சதவீத பங்குகளைக் கொடுக்க முடிவு செய்துள்ள நிலையில், அதன் தாய் நிறுவனங்களான வோடபோன் குரூப் 28.5 சதவீத பங்குகளும், ஆதித்யா பிர்லா குரூப் 17.8 சதவீத பங்குகளும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியா நிர்வாகக் குழுவில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மத்திய அரசு அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில் மத்திய அரசு இந்நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள், வர்த்தக முடிவுகளில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும். இதன் மூலம் வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் அரசு அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அறிவிப்பு மொத்த கதையையும் மாற்றியுள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளைப் பெற்ற காரணத்தால் அரசு நிறுவனமாக மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், Vi நிர்வாகக் குழுவில் பங்கு பெறவும் ஆர்வம் இல்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் மட்டும் அல்லாமல் பிற டெலிகாம் நிறுவனங்கள் நிலைபெற்றவுடன் பங்குகளைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) விரைவில் நிதி அமைச்சகத்துடன், வோடபோன் நிர்வாகம் வழங்குவதாக அறிவித்துள்ள 35.8 சதவீத பங்குகளை அரசு பங்குகளாக மாற்றுவதற்கான பணிகள் மற்றும் நடைமுறை பற்றி ஆலோசனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. தற்போது வோடபோன் ஐடியா-வின் வட்டி மற்றும் நிலுவை தொகையைப் பங்குகளாக மாற்றி அரசுக்கு கொடுத்துள்ள காரணத்தால் VI மீது அரசுக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக