இந்திய அரசு சீனா மீது விதித்திருந்த முதலீட்டு கட்டுப்பாடுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் இந்திய வர்த்தகச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இயங்கி வந்த சீன செயலிகள் தடை செய்யப்பட்டது மீண்டும் சேவையைத் துவங்க அனுமதிக்கப்படுமா என்பதில் துவங்கி சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது வரையில் அனைத்து பிரிவினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய - சீனா எல்லை பிரச்சனை வெடித்த இதேவேளையில் கொரோனா காரணமாக இந்தியாவில் பல நிறுவனங்கள் நிதிநெருக்கடியில் சிக்கியது. இந்தச் சூழ்நிலையில் இந்திய முதலீட்டுச் சந்தையில் சீனா-வின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிவு செய்தது.
இதற்காக மோடி அரசு இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் நாடுகளின் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்களின் முதலீடுகள் விண்ணப்பம் அனைத்தையும் நிராகரிப்பு செய்தது மட்டும் அல்லாமல் தடையும் செய்தது. இதனால் சீன முதலீடுகள் இந்திய சந்தையில் கடந்த 2 வருடம் பெரிய அளவில் குறைந்தது.
தற்போது மோடி அரசு இந்தியாவின் அன்னிய முதலீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இப்புதிய தளர்வுகள் மூலம் சீனா மட்டும் அல்லாமல் இந்திய எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனத்தில் அதிகப்படியாக 10 சதவீத பங்குகளைக் கைப்பற்ற அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தளர்வு மூலம் ஒரு சீன நிறுவனம் அல்லது முதலீட்டாளர் இந்திய நிறுவனத்தில் அதிகப்படியாக 10 சதவீத பங்குகள் வரையில் கைப்பற்ற முடியும், இதனால் இந்திய சந்தையில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உடன் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மிக முக்கியமான காரணம் உண்டு. மோடி அரசு விதித்த தடையின் காரணமாகச் சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் நிலுவையில் உள்ளது, இதைக் கருத்தில் கொண்டு தற்போது சீன முதலீடுகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
நவம்பர் 2021 நிலவரத்தின் படி மத்திய அரசிடம் சுமார் 100 முதலீட்டுக் கோரிக்கைகள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. இதில் 25 சதவீத முதலீடுகள் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும் அல்லாமல் பல சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்து இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையைச் சீனா-வின் கிரேட் வால் மோட்டார்ஸ் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துவிட்டு ஒப்புதலுக்காகப் பல மாதங்களாகக் காத்திருக்கிறது.
சீன நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுவதன் மூலம் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் பெறும். மேலும் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் நிலையில் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தகத்தை இழக்க அதிக வாய்ப்பு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக