Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூலை, 2019

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

 Image result for கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஈரோட்டில் பிறந்த இவர் கணிதத்துறையில் உச்சத்தை தொட்டவர்.

கணிதத்தில் உச்சம் தொட்ட இவர் ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றவர்.

ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை இவருக்கு உண்டு.

இவர் தமிழனின் புகழை உலகுக்கு உயர்த்திய உன்னதமேதை.

20ஆம் நூற்றாண்டில் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணிதமேதையாக திகழ்ந்தவர்.

இவரது கணிதத்தின் மீதான அறிவின் முதிர்ச்சி காலத்தால் அழிக்க முடியாத வரலாறு ஆகும்.

எளிமையாகவும், விரைவாகவும் கணித செய்முறைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.

யார் இவர்?.....

அவர்தான் அன்றும்... இன்றும்... என்றும்... கணிதத்தின் உயிர்நாடியாய் இருக்கும்...

கணிதமேதை சீனிவாச இராமானுஜன் !!

இவர் கணிதத்தின் மீது கொண்ட ஆர்வமிகுதி காரணமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தேற்றங்களை எழுதி தெறிக்கவிட்டார்.

எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்து கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல்துறை முதல் மின்தொடர்பு பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவரின் கணித அறிவிற்கு மதிப்பெண் கொடுத்தால் அதற்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன் என்று பிரிட்டன் கணிதமேதை ஹார்டி கூறியுள்ளார்.

கணிதத்தின்மீது மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்ததால்தான் இவர் இன்றுவரையிலும் போற்றப்படுகிறார்.

சீனிவாச இராமானுஜனின் இளமைக்காலம் :

சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் நாள் ஈரோட்டில் சீனிவாச அய்யங்கார், கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

இராமானுஜன் பிறந்தது முதலே வறுமை அவரது நிழல் போல், ஒட்டி உறவாடி வாட்டி வதைத்து கொண்டிருந்தது.

இராமானுஜனின் குடும்பம் சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது.

இராமானுஜன் தனது ஐந்தாம் வயதில், கும்பகோணத்திலுள்ள ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். 1898ல், தனது 10ஆம் வயதில், அவர் கும்பகோணத்திலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இராமானுஜன், உயர்நிலை கல்வியில் சிறந்த மாணவனாக விளங்கி பல பரிசுகள் வென்றார்.

இராமானுஜத்தை வகுப்பறையில் பார்ப்பது கடினம். கோவில் மண்டபங்களில் சாக்பீஸ்கள் மூலம் பலவித கணக்குகளை போட்டு அதற்கு விடை காண்பார். விடையே கிடைக்காத பல கணக்குகளுக்கு தூங்கும்போதும் விடை கண்டுபிடிப்பார். அந்த அளவுக்கு கணிதத்தை நேசித்தவர்.

கணிதத்தின் மீது இராமானுஜருக்கு ஏற்பட்ட பற்று :

தனது பதினொறாம் வயதில், தன் வீட்டில் குடியிருந்த இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்து எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்தார். அப்புத்தகத்தை, அவர் தன் பதிமூன்று வயதிலேயே முற்றும் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

ஒருமுறை இராமானுஜத்தின் நண்பர் சாரங்கபாணி கணித பாடத்தில், அவரை விட மதிப்பெண் கூடுதலாக பெற்றுவிட்டார். இதனால், அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் இராமானுஜன். அந்த அளவுக்கு எதிலும் முதலிடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 9-ம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளுக்கு தீர்வுகண்டதால், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவே பின்னாளில் அவர் கணிதமேதையாக உயர ஊக்கம் அளித்தது என்றால் மிகையல்ல.

சீனிவாச இராமானுஜனின் வறுமை :
தனது பதினாறவது வயதில் அவர் பெற்ற 'எ சினாப்சிஸ் ஆஃப் எலமெண்டரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதேமேட்டிக்ஸ்" (யு ளுலnழிளளை ழக நுடநஅநவெயசல சுநளரடவள in Pரசந யனெ யுppடநைன ஆயவாநஅயவiஉள) என்ற புத்தகமே கணிதத்தின் மீது இராமானுஜன் அவர்கள் வைத்திருந்த ஆர்வத்தை இன்னும் மேம்படுத்தியது. அவர், அப்புத்தகத்தில் பல கணித முடிவுகளை ஆய்வு செய்து அப்பாற்பட்ட விளைவுகளை வெளிக்கொண்டு வந்தார்.

இராமானுஜன் இளமைக்காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார்.

நோட்டு வாங்கக்கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.

 இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரூ.20 ஆகும். இராமானுஜனின் தாயார் கோவில்களில் பஜனை பாடல்களை பாடுவதன் வாயிலாக மாதம் 10 ரூபாய் சம்பாதித்து வந்தார். குடும்பமே போதிய வருமானமின்றி தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றி தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்.

 ஒருநாள் இராமானுஜன் பள்ளிக்கு செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிட அமர்ந்தார். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி (இராமானுஜன்)..! அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன். இரவு சாப்பிடலாம், அதுவரை பொறுத்துக்கொள் என வேண்டினாள். அதன்பின் இராமானுஜனோ மறுவார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா நான் பள்ளிக்கு சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்கு சென்றுவிட்டான்.

 ஆனால், அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்பவில்லை. கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் காணவில்லை.

 அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனை காணவில்லை எனக் கூறினார். தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள். கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டு அனந்தராமனும், அனந்தராமனின் தாயாரும் ஆளுக்கொரு பக்கமாக இராமானுஜனை தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் இராமானுஜனை தேடி அலைந்தான். எங்கும் அவரை காணவில்லை. திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை சாரங்கபாணி கோவிலுக்கு சென்றிருப்பானோ? என்று யோசித்தான்.

உடனடியாக கோவிலுக்கு சென்று தேடினான். கோவிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக்கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தார். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன. அனந்தராமன் அவரை தட்டி எழுப்பினான்.

திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா...! அதற்குள் எழுப்பிவிட்டாயே! நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்க தெரியாத அந்த கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே! என்றவன், இரு... கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதி வைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுத தொடங்கினார்.

எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனை தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றான். இராமானுஜனை காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியை கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்.

சீனிவாச இராமானுஜனின் ஆராய்ச்சி :

1904ல், இராமானுஜன் அவர்கள் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர், தொடர் (1ஃn)-ஐ ஆய்வு செய்து, 15 தசம இடங்களுக்கு ஆய்லரின் மாறிலியை கணக்கிட்டார். பெர்னோலியின் எண்கள் அவரது சொந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை தொடர்ந்து படிக்கத் தொடங்கினார்.

கும்பகோணம் அரசு கல்லூரி, அவருக்கு 1904ஆம் ஆண்டில் உதவித்தொகை வழங்கியது. ஆனால், அவர் கணிதத்தின் மீது வைத்திருந்த பற்றால், மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறாமல் கல்லூரி தேர்வில் தோல்வியுற்றார். இதன் காரணமாக அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

நண்பர்களின் உதவியாலும், கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்தும், தனது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு கோரியும் அவர் தன் வாழ்க்கையை நடத்தினார். 1906ல், இராமானுஜன் அவர்கள் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்ததால், முதல் கலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டிருந்தார்.

தனது கணித வேலையின் தொடர்ச்சியாக இராமானுஜன் அவர்கள் 1908ல் தொடரும் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரைப் படித்தார். இச்சூழ்நிலையில் அவரது உடல்நிலை குன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டதால், 1909ல் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து மீண்டு வர அவருக்கு குறுகிய காலம் தேவைப்பட்டது.

இல்லற வாழ்க்கை :

பத்து வயது பெண்ணான எஸ்.ஜானகி அம்மாள் அவர்களை, ஜூலை மாதம் 14ஆம் தேதி, 1909ல் தனது 22வது வயதில் இராமானுஜன் திருமணம் செய்துகொண்டார். இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துகொண்டே தனது முதல் படைப்பான 'பெர்னோலியின் எண்கள்" என்ற கணிதத்துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டார். இது 1911ல், 'இந்திய கணித சங்கம்" என்ற இதழில் வெளியானது. இதனால் உலகமே தமிழ் இளைஞனின் அறிவாற்றலை கண்டு வியந்தது.

ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதி வைத்தார். அதுவே பிற்காலத்தில் 'ராமானுஜன் கணிதம்" என்ற புகழ்பெற்ற நூலானது.

இராமானுஜர் மேற்கொண்ட பணிகள் :

1910ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திரராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ், இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு காண ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அணுகாதிருந்தது.

1911ல் இந்திய கணிதமேதை ராமச்சந்திர ராவ் உதவியதால், இராமானுஜனுக்கு சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. சென்னை பொறியியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பேராசிரியராக இருந்த சி.எல்.டி. கிரிப்பித் என்பவர் இராமானுஜன் அவர்களின் திறமைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

சி.எல்.டி. கிரிப்பித், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்றதால், அங்குள்ள கணித பேராசிரியர், எம்.ஜே.எம். ஹில் என்பவரை அவருக்கு தெரியும். அதனால், அவர் 1911ல் வெளியான இராமானுஜன் அவர்களின் பெர்னோலியின் எண்களின் சில நகலை நவம்பர் 12ஆம் தேதி, 1912ஆம் ஆண்டு ஹில்லுக்கு அனுப்பி வைத்தார். ஹில் அவர்கள், அதை ஊக்குவிக்கும் வகையில், இராமானுஜத்தின் 'வேறுபட்ட தொடர் முடிவுகள் (சுநளரடவள ழுn னுiஎநசபநவெ ளுநசநைள) புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை" என்று பதிலளித்தார்.

1910ல் வெளியான இராமானுஜன் அவர்களின் 'முடிவிலியின் வகைமுறை" (ழுசனநசள ழுக ஐகெinவைல) புத்தகத்தின் நகலையும், அத்துடன் ஒரு கடிதத்தையும் ஜி.ஹெச்.ஹார்டி என்பவருக்கு அனுப்பினார்.

ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார். இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.

இராமானுஜன் அவர்கள் கடிதத்துடன் இணைத்த மெய்ப்பிக்கப்படாத தேற்றங்களின் நீண்ட பட்டியலை, ஹார்டி, லிட்டில்வுட் என்பவருடன் இணைந்து படித்தார். இராமானுஜன் அவர்களின் தேற்றங்கள் தெளிவாக புரிந்ததால், ஹார்டி அவருடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாக பதில் கடிதம் எழுதினார்.

இதை ஏற்ற இராமானுஜன்;, 1914ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணிதமேதைகளுடன் உரையாடினார். அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார். அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிர செய்தார்.

சீனிவாச இராமானுஜனின் சாதனைகள்!!

ஹார்டி மற்றும் இராமானுஜன் அவர்களின் கூட்டணி பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது.

ஹார்டி அவர்களுடனான கூட்டு அறிக்கையில், இராமானுஜன் அவர்கள் 'ப(n) என்ற அணுகுமுறையின் சூத்திரத்தை" (யுளலஅpவழவiஉ குழசஅரடய கழச p(n)) கொடுத்தார். இந்த ப(n) சரியான மதிப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டது. பின்னர், ரேட்மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தார்.

லண்டனில் குடியேற இராமானுஜன் அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தது. அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு உணவு பிரச்சனைகளும் இருந்தது. இராமானுஜன் அவர்களுக்கு நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் மிகவும் அவதிப்பட்டார்.

1916ஆம் ஆண்டு இராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார்.

இராமானுஜத்தின் ஏழு ஆவணங்களை கொண்ட உயர் கலப்பு எண்களின் (ர்iபாடல ஊழஅpழளவைந ரேஅடிநசள) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

ஐந்து வருடம் லண்டனில் தங்கி உலகையே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டற கலந்ததுபோல் காசநோயும் வந்தது. காசநோயால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை.

1917ல், இராமானுஜன் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஆகவே, அவரது மருத்துவர்கள் அவர் இறந்துவிட கூடும் என்றும்கூட அஞ்சினர். அதன்பின் அவருடைய உடல்நிலை சிறிதளவு மேம்பட்டாலும், அவர் தனது பெரும்பாலான நேரத்தைப் பல்வேறு மருத்துவமனைகளிலேயே செலவிட்டார். இராமானுஜன் 1918ல், கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1918ஆம் ஆண்டு இறுதியில் இராமானுஜன் அவர்களின் உடல்நிலை பெரிதும் மேம்பட்டது. பின்னர், அவர் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 1919ஆம் ஆண்டு கடல்வழியாக இந்தியா புறப்பட்டு மார்ச் 13ஆம் தேதி வந்து சேர்ந்தார்.

சீனிவாச இராமானுஜனின் மறைவு!!

1920ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ஹார்டிக்கு தனது இறுதி கடிதத்தை எழுதினார், இராமானுஜன். இந்தியாவிற்கு திரும்பியபின் இதுநாள்வரை தங்களுக்கு கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினை கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்.

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணிதமேதை சீனிவாச இராமானுஜன். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த போதிலும், அவரது உடல்நலம் குன்றியதால், தனது 33வது வயதில் 1920ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் தேதி மறைந்தார்.

33 வயதை கடப்பதற்குள்ளேயே அவரை காலன் கவர்ந்து சென்றுவிட்டான். கணிதமேதை இராமானுஜன் மறைந்தாலும், அவருடைய புகழ் காலத்தை வென்று சரித்திரம் படைத்து கொண்டு இருக்கிறது.

இராமானுஜன் கண்டுபிடித்த கணிதத்தின் ஆழ் உண்மைகள் தான் இன்றைய ஆன்ராய்டு யுகத்தின் அனைத்து துறையிலும் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட னுளைஉழஎநசல ழுக ஐனெயை எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார், 33 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர், தூய கணிதத்தின் கருவூலம்.

இராமானுஜன் தன் குறுகிய வாழ்க்கை காலத்திலேயே 3,900க்கும் அதிகமான புதுக்கணித தேற்றங்களை கண்டுபிடித்தவர். சிறுவயதிலேயே யாருடைய உதவியும், வழிகாட்டுதலும் இன்றி வியப்பூட்டும் வகையில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுபிடித்தவர்.

உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக்காட்டிய கணிதமேதை சீனிவாச இராமானுஜனை போற்றுவோம்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக