Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 மார்ச், 2020

அன்று கொன்ற காமம்..... நின்று கொன்ற நிர்பயா!!

samayam tamil

 ரசன் அன்று கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும். இது மனிதன் குற்றங்கள் செய்யாமல் இருக்க நம் சான்றோர் சொல்லி வைத்துள்ள வேதவார்த்தைகள்.

ஆனால், இன்றைய நாகரீக சமுதாயத்தில் கொலை, கொள்ளை என குற்றங்கள் குறைந்த பாடில்லை. அதுவும் பெண்கள், பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளன.

இந்தக் கூற்றை மெய்பிக்கும் விதமாகதான் தலைநகர் டெல்லியில் அந்த பெரும் துயரச் சம்பவம் நடைபெற்றது. ஆம்... 2012 டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவு, மருத்துவம் சார் பட்டம் பயின்ற மாணவியான நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அந்த இருவரை தவிர்த்து யாருமற்ற அந்த பேருந்தில் காமுகரக்ள் ஐந்து பேர் ஏறியுள்ளனர். உடன்பிறவாத சகோதரியாக மதிக்கப்பட வேண்டிய இளம்பெண் நிர்பயாவை, பேருந்து ஒட்டுநருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செயது சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றது அந்தக் கும்பல்.


நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா், வினய் சர்மா, முகேஷ் சிங் , ஒரு சிறுவன் என ஆறு பேர் அடுத்த நாளே கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, குத்துயிரும், குலையுயிருமாக உயிருக்கு போராடி கொண்டிருந்த நிர்பயா, டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.

தன் மகளின் கொடூரமான மரணத்தைக் கண்டு கொதித்தெழுந்தார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி. மகளின் மரணத்துக்கு நீதிக் கேட்டு அவர் சட்டப்போராட்டத்தில் இறங்க, பேருந்து ஓட்டுநரான ராம் சிங், 2013, மார்ச் 11 ஆம் தேதி, திகார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவே அவரது கதை முடிந்தது.


அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்டிருந்த வினய் சர்மா உள்ளிட்ட நான்கு பேருக்கும், நிர்பயா தரப்புக்கும் இடையேயான சட்டப் போராட்டம் தீவிரமடைந்தது, இந்த போராட்டத்தின் முடிவில், நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து, 2013 செப்டம்பர் 10 ஆம் தேதி, டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கதிகலங்கி போன நிர்பயா குற்றவாளிகள், தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க, மேல்முறையீடு என்ற அஸ்திரத்தை பயன்படுத்தினர். டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அவர்கள் மாறி, மாறி அப்பீல் செய்து, தங்களுக்கு உயிர் பிச்சைக் கேட்டு கொண்டிருந்தனர்.

அவர்களின் முயற்சி பலிக்கவில்லை என்றாலும், வழக்கு விசாரணையை காரணங்காட்டி, மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலத்தை அவர்களால் ஒத்திப்போட்டு கொண்டே வர முடிந்தது.

இதனால், பொறுமையிழந்த நிர்பயாவின் பெற்றோரின் குமுறலை கேட்ட டெல்லி நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி , குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கிலிட உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவால், நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் உயிர் பயம் துரத்த ஆரம்பித்தது. இந்தப் பயத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் கருணை மனு, மறுசீராய்வு மனு என சட்டரீதியான அடுத்தடுத்த அஸ்திரங்களை பயன்படுத்தினர்.

நிர்பயாவின் ஆன்மாவின் முன் அனைத்து அஸ்திரங்களும் எடுப்படாமல் போகவே, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 20 ஆம் தேதி தூக்கிலிட நான்காவது முறையாக, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

தூக்குக் கயிறை முத்தமிட்டே ஆக வேண்டும் என்ற நிலையில், எப்படியாவது தண்டனையிலிருந்து தப்பித்துவிடமாட்டோமா என்ற நப்பாசையில் உயிர் பிச்சைக் கேட்டு, குற்றவாளிகள் இறுதியாக சர்வதேச நீதிமன்றத்தின் கதவை தட்டினர்.

அதேசமயம்,, குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்விரு வழக்குகளை காரணங்காட்டி, தங்களுக்கான தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் முறையிடப்பட்டது.

தூக்குதண்டனைக்கு வரவேற்பு

நேறறு நள்ளிரவு தொடங்கி, விடிய விடிய நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தண்டனையை மீண்டும் உறுதிசெய்யவே, இன்று காலை, நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஏழாண்டு கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள குற்றவாளிகள் நான்கு பேருக்கும் அவர்களது வாழ்நாளின் கடைசி 11 மணி நேரம், இவர்களால் சின்னாபின்னம் ஆக்கப்பட்டு உயிரிழந்த நிர்பயா, தனது வாழ்நாளின் கடைசி 11 நாள்கள் பட்ட அவஸ்தை, மனவேதனை நிச்சயம் கண்முன் வந்து சென்றிருக்கும் என்பது மட்டும் உண்மை. ஏனென்றால் அரசன் அன்று கொல்வான்.... தெய்வம் நின்று கொல்லும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!