Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 6 மே, 2020

நரை முதல் வழுக்கை வரையான தீர்வுக்கு ஆயுர்வேதம் தரும் சிறந்த தீர்வு நீலிபிருங்காதி தைலம்!


மருத்துவத்தில் ஆயுர்வேத மருத்துவத்துக்கு தனி இடம் உண்டு. அது அழகு பராமரிப்புக்கும் பொருந்தும்...

எத்தனை மருத்துவம் வந்தாலும் முடியாத பிரச்சனை முடி பிரச்சனைதான். கூந்தல் வளர்ச்சியிலோ, அடர்த்தியிலோ பிரச்சனை வருவதும் பிறகு உரிய பராமரிப்புக்கு பிறகு சரி செய்வதும் அவ்வபோது நடப்பதுதான். கூந்தல் உதிர்வு கூட சத்தான உணவு மற்றும் பராமரிப்பின் மூலம் சரிசெய்துவிடகூடியதே. 

ஆனால் இளநரையும், வழுக்கையும் சரி செய்வது சற்று கடினமானது. ஆனால் சிறந்த பராமரிப்பை தேர்வு செய்து அதை பொறுமையாக விடாமல் பின்பற்றும்போது அதற்கென்று நிச்சயம் பலன் இருக்கவே செய்யும். ஆயுர் வேத மருத்துவ முறையில் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடி வளர உதவும் எண்ணெயில் நீலிபிருங்காதி தைலத்துக்கு தனி இடம் உண்டு. அப்படி என்னவெல்லாம் நன்மைகள் செய்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

நாட்டு மருந்து கடைகளில் நீலிபிருங்காதி தைலம் கிடைக்கிறது. இதை வீட்டிலும் தயாரித்து பயன்படுத்தலாம். இது குறித்து தனியாக பார்க்கலாம்.பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இதில் நீலி என்பது அவுரி பொடியையும், பிருங்காதி என்பது கரிசலாங்கண்ணி கீரையையும் குறிக்கும். இந்த இரண்டு பொருள்களோடு மேலும் சில பொருள்களை சேர்த்து இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது.

இவை கூந்தல் பராமரிப்பின் ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் தீர்க்க உதவுவதால் இதை தினமும் தலைக்கு தேய்த்து வரலாம். ஆண்கள், பெண்கள் இருபாலருமே இதை பயன்படுத்தலாம். குளுமையான எண்ணெய் என்றாலும் இவை உடலுக்கு குளிர்ச்சி தராது. முடியின் வேர்வரை ஊடுருவி கூந்தலை காக்க கூடியது. இவை வெளிப்புற உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வழுக்கை தலை

வரும் முன் காப்போம் என்பது போல வழுக்கை வந்த பிறகு முடி வளர வைப்பது நிச்சயம் சிரமமானது தான். ஆனால் வழுக்கைக்கு முந்தைய அறிகுறிகளை தெரிந்துகொண்டால் வழுக்கை விழாமல் காக்கலாம். வழுக்கையை தடுக்கும் அளவுக்கு நீலிபிருங்காதி தலைம் செயல்படுகிறது. இவை காலங்காலமாக கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வழுக்கை ஏற்படுவதற்கு முன்பு கூந்தலில் பொடுகு அதிகப்படியாக இருக்கும். பொடுகை உருவாக்கும் பாக்டீரியாக்கள் முடியை சுற்றி அரிக்க தொடங்கும். நாளடைவில் தலையின் மேற்பரப்பில் செதில் செதிலாக உருவாகி அரிப்பை உண்டாக்கும். இந்த நிலை நீடித்தும் அதிகமாகவும் இருந்தால் வழுக்கை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை உணரலாம்.

பயன்படுத்தும் முறை

தினமும் காலையில் எழுந்ததும் கூந்தலை சிக்கில்லாமல் சீவி, பிறகு முடிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நீலி பிருங்காதி தைலத்தை எடுத்து விரல்களால் கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் தவறாமல் செய்துவர வேண்டும். தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை செய்துவந்தாலே வழுக்கை விழுவது தவிர்க்கப்பட்டு முடி வளர்வதை பார்க்கலாம்.


உடல் உஷ்ணம் தணியவே தலைக்கு எண்ணெய் குளியல் அவசியம். உஷ்ணத்தால் கூந்தல் உதிர்வும் சகஜமாகிறது. தலைக்கு குளிக்கும் போது நீலிபிருங்காதி தைலத்தை கூந்தலில் தேய்த்து ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவி நன்றாக ஊறவிடவேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் உதிர்வு நிற்கும்.

கணினி துறையில் இருப்பவர்கள் நிச்சயம் கண் எரிச்சல், கண் வலி பிரச்சனையை கொண்டிருப்பார்கள். இந்த எண்ணெய் குளியலால் கண் சூடு, கண் எரிச்சலும் குறையும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கும். கூந்தலை கருமையாகவும் பொலிவாகவும் வைக்க உதவும்.

இளநரைக்கும் இவை தீர்வாகிறது. கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் இயற்கை ஹேர் டை விரும்புபவர்கள் இதையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

மருதாணி இலை பொடி - 2 டீஸ்பூன்,

டீ அல்லது காபி டிகாஷன் - தேவைக்கு,

கரிசலாங்கண்ணி பொடி - 1 டீஸ்பூன்,

நெல்லி முள்ளி பொடி - 1 டீஸ்பூன்,

அனைத்தையும் கலந்து இதில் நீலி பிருங்காதி தைலம் 3 டீஸ்பூன் விட்டு 8 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு இளநரை மட்டுமல்லாமல் முடி இருக்கும் அனைத்து இடங்களிலும் இதை தடவி 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவரவேண்டும். முதலில் நரையின் நிறம் இளஞ்சிவப்பாக மாறும். பிறகு படிப்படியாக இவை கருமை நிறம் வரும். வாரத்துக்கு மூன்று முறை செய்தால் 10 முதல் 12 முறைக்குள் முடியின் நிறம் மாறுவதை ஆச்சரியத்தோடு காணலாம்.

எல்லோரும் உபயோகப்படுத்தலமா?

கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எல்லோருமே பயன்படுத்தலாம். கூந்தலில் பிரச்சனையே வராமல் இருக்க இவை உதவும். ‘தினமும் சிறிதளவு எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் தடவி ஸ்கால்பில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தாலே போதும். எண்ணெய் வைக்க பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெயை விரல்களில் தொட்டு கூந்தலின் வேர்க்கால்களில் மசாஜ் செய்தாலே போதுமானது.

கூந்தல் அடர்த்தியாக கருமையாக இருக்க இவை உதவும். கூந்தல் உதிர்வு அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும். முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கொடுக்கும். மிக முக்கியமாக இளவயதில் இதை பயன்படுத்தி வருவதன் மூலம் இளநரை மற்றும் வழுக்கை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். இதில் குறைபட வேண்டிய விஷயம் எண்ணெயில் ஒரு வித வாடை இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!