Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஆகஸ்ட், 2020

பழங்களை அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்குமா? இல்ல ஜூஸாக்கி குடிக்கலாமா?

தினமும் ஒன்று அல்லது இரண்டுவிதமான பழங்கள் அவசியம் சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

விலை உயர்ந்த பழங்கள் மட்டும் தான் உடலை உறுதி செய்யும் என்பதில்லை. விலை குறைந்த கொய்யா, வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு வகையறாக்கள் உயர்வகை பழங்களுக்கு இணையான சத்தையும், சுவையையும் கொண்டிருப்பவையே.

உணவை போன்றே பழங்களை சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு. பழங்களின் குணங்களை பொறுத்து அதை காலை நேரத்தில், வெறும் வயிற்றில், உணவு இடைவேளையில், இரவு நேரங்களில் என்று எடுத்துகொள்கிறோம். ஆனால் பழங்களை எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்ற முறையும் உண்டு.

பழங்களில் இருக்கும் சத்துகள் உடலுக்கு தேவை என்று தான் பழங்களை அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால் அதை அப்படியே சாப்பிட்டால் நல்லதா இல்லை சாறாக்கி குடித்தால் நல்லதா என்று தெரிந்துகொள்வதும் அவசியம்.

பழங்கள்
பழங்களில் இருக்கும் உயர்தர ஊட்டச்சத்துகள் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலில் எதிர்ப்பு சக்திக்கு வலு சேர்க்கிறது. பழங்களில் உள்ள ஃபைடோ கெமிக்கல்ஸ் நமது திசுக்களை பாதுகாக்கிறது.

அதனால் தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து கடைபிடித்தாலே நோய் தாக்கும் அபாயத்திலிருந்து பெருமளவு பாதுகாத்து கொள்ளமுடியும். நீரிழிவு, இதய நோய் அதிகபட்சமாக புற்று நோய் வரையான நோய்களை வராமல் தடுக்கும் குணம் பழங்களுக்கு உண்டு. 

ஆனால் அந்த குணங்களை சிதைக்காமல் உடலுக்கு சென்றால் மட்டுமே முழுமையான பலனை நம்மால் பெறமுடியும். இதை எப்படி எடுத்துகொள்ளலாம் பார்க்கலாம்.
எப்படி சாப்பிடலாம்

தினம் ஒரு பழம் என்று சாப்பிட வேண்டும். அனைத்து பழங்களையும் கலந்து பழ சாலட் சாப்பிடுவதை காட்டிலும் ஒரே வகையான பழத்தை சாப்பிட வேண்டும். பழங்களை நறுக்கி அலங்கரித்து சாப்பிடுவது பிடிக்கும் என்பவர்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே தோலோடு கடித்து சாப்பிட வேண்டும். (சாப்பிடுவதற்கு முன்பு இளஞ்சூடான நீரில் பழத்தை நன்றாக கழுவி எடுப்பது அவசியம்) வளரும் குழந்தைகளுக்கு பழக்கும் போது சிறூ துண்டுகளாக நறுக்கி கொடுக்கலாம்.

அப்படி கொடுப்பதையும் உடனடியாக சாப்பிட வைத்து பழக்க வேண்டும். பெரிய பழங்கள் பப்பாளி, முலாம் பழம், தர்பூசணி, பலாப்பழம் போன்றவற்றை தோல் நீக்கி தான் சாப்பிட முடியும். ஆனாலும் சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது
ஏன் கடித்து சாப்பிட வேண்டும்
பழங்களை கடித்து சாப்பிடுவதன் மூலம் பழங்களில் இருக்கும் சத்துகள் முழுமையாக கிடைக்கும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாறாக்க அரைத்து வடிகட்டும் போது அதில் இருக்கும் நார்ச்சத்துகள் வெளியேறிவிடுகிறது. உடலுக்கு ஃப்ளேவனாய்டு அதிகம் தேவை.
இவை புற்றுநோய் தவிர்ப்பது முதல் சருமம், கூந்தல் வரை அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இந்த ஃப்ளேவனாய்டுகள் பழங்களில் அதிகமாகவே உண்டு. சாறாக்கி வடிகட்டும் போது இதன் அளவு குறைகிறது. அடுத்தது பழங்களில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் பழங்களை முழுமையாக சாப்பிடும் போது முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது. இதை சாறாக்கி சாப்பிடும் போது இது 20% முதல் 25% வரை சத்துகள் குறைவாக பெறமுடிகிறது.

அதோடு பழங்களை சாப்பிடும் போது நார்ச்சத்து நிறைவாக இருப்பதால் தேவைக்கு அதிகமாக நம்மால் சாப்பிடமுடியாது. ஆனால் பழச்சாறை சற்று கூடுதலாக சாப்பிடுவோம். அதனால் இயன்றவரை பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.
பழச்சாறு தவிர்க்க வேண்டுமா
எல்லா பழங்களையும் அப்படியே சாப்பிட முடியுமா என்று கேட்கலாம். அப்படியே கடித்து சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பப்பாளி, கொய்யா, வாழைப்பழம், மாதுளை, தர்பூசணி, திராட்சை, அன்னாசி, செர்ரி,பலாப்பழம் இவற்றை சாப்பிடலாம்.

பழங்களை சாப்பிட நேரம் இல்லாத போது, பழச்சாறாக்கி குடிக்கலாம். அதிக அளவு பழங்கள் இருக்கும் போது அவை வீணாகாமல் இருக்க சாறாக்கி குடிக்கலாம். அப்படி பழச்சாறாக்கினாலும் அதில் பழங்களில் இருக்கும் இனிப்பே போதுமானது. அதில் கூடுதலாக சர்க்கரை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்
என்ன செய்யலாம்
சில பழங்களை சாறாக்கி தான் குடிக்க முடியும். எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஆரோக்கியமான பழ வகை என்றாலும் சாறாக்கி தான் குடிக்க முடியும். அதே நேரம் குழந்தைகளும் வயதானவர்களும் பழங்களை சாப்பிடுவதை விட பழச்சாறுகளை தான் விரும்புவார்கள். அப்படி கொடுக்கும் போது கண்டிப்பாக இனிப்பு சேர்க்க கூடாது.

பழங்களை அப்படியே சாறாக்கி குடிக்கும் பழங்கள் சரி. உதாரணத்துக்கு பப்பாளி, தர்பூசணி, ஆப்பிள் போன்றவற்றை அப்படியே சாறாக்கி குடிப்போம். ஆனால் மாதுளை அப்படி அல்ல சாறாக்கி வடிகட்டும் போது அவை நார்ச்சத்து இல்லாமல் போகிறது.

அதனால் இயன்ற அளவு பழங்களை அப்படியே சாப்பிட பழகுங்கள். நேரமில்லாமல் பிஸியாக இயங்கும் நேரத்தில் பழச்சாறாக குடிக்கலாம். அதிலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் மட்டுமே. மற்ற நேரங்களில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக