Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

அனுமன் இலங்கை அடைதல்!

சுரசை, என்னை ஒருவரும் கடந்து செல்ல முடியாது என்றாள். அவளின் வாய் மெதுவாக திறந்து கொண்டிருப்பதை கண்ட அனுமன் சிறிய வடிவம் எடுத்து சுரசையின் வாயில் புகுந்து வெளியே வந்தான். அனுமன் நொடியில் உள் புகுந்து வெளி வந்ததால் அவளால் அனுமனை உட்கொள்ள முடியவில்லை. 

அனுமனின் வலிமையை அறிந்த சுரசை தன் பழைய வடிவம் எடுத்து, அனுமனிடம் இனி உனக்கு வெற்றி உண்டாகட்டும் என வாழ்த்தி அனுப்பினாள். அனுமன் இன்னும் வேகமாக வானில் பறந்து சென்றான். அவனின் வேகத்தை கண்ட தேவர்கள், கருடன் தான் வேகமாக செல்கிறான் என நினைத்தனர்.

அனுமன் வானில் வேகமாக பறந்து கொண்டு இருந்தபோது, அனுமனின் நிழலை யாரோ பிடித்து இழுத்ததால் அனுமனின் வேகம் தடைப்பட்டது. பிறகு அனுமன் தன் வேகத்திற்கு தடையாக வருபவர் யார் என பார்த்தார். அப்போது சிம்மிகை என்னும் அரக்கி தன் வாயை குகை போல திறந்து அனுமனை விழுங்க முன் வந்தாள். 

உடனே அனுமன் சிறிய உருவம் எடுத்து அரக்கியின் வாயில் புகுந்து வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். இதனால் அவள் மாண்டு போனாள். பிறகு அனுமன் எவ்வித தடையும் இன்றி, சமுத்திரராஜாவும், வாயு பகவானும் துணைபுரிய கடலின் அக்கரையை அடைந்தான். அங்கு பவளமலை என்னும் இடத்தில் இறங்கினான். அனுமன் இறங்கிய வேகத்தில் பவளமலை நடுநடுங்கியது.

பின்பு அங்கிருந்து இலங்கை நகரை சுற்றி பார்த்தான். இலங்கை நகரின் அழகை கண்டு அனுமன் வியந்தான். இலங்கை மாநகரின் மாட மாளிகைகள், கோபுரங்கள், குளங்கள், நந்தவனங்கள் நவரத்தினங்கள் போல் ஜொலித்தது. பிறகு அனுமன், இவ்வளவு அழகு வாய்ந்த இலங்கையை காக்க எத்தனை அரக்கர்கள் வேண்டும்? இப்பொழுது நான் இங்கு வந்தது போல் வானர வீரர்களான அங்கதனும், தளபதியான நளனும், அரசனான சுக்ரீவனும் மட்டுமே வர முடியும். 

மற்ற வானர வீரர்கள் எவ்வாறு இங்கு வர முடியும்? சீதையை எப்படி மீட்பது? சீதை எங்கே இருப்பாள்? நான் சீதையை எவ்வாறு காண்பேன்? நான் சீதையை அரக்கர்களுக்கு தெரியாமல் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது பகலாக இருக்கிறது.

நான் செய்யும் வேலையை தடங்கல் இல்லாமல் ஆராய்ந்து தான் செய்ய வேண்டும். இரவில் சீதையை தேடிச் செல்லலாம் என மனதில் நினைத்துக் கொண்டான். அனுமன் இருள் சூழும் வரை காத்திருந்தான். 

அனுமன் தன் சிறிய உருவத்தினை எடுத்தான். இருளும் மெல்ல மெல்ல சூழ்ந்தது. அரக்கர்களான இராவணனின் ஏவலர்கள் இந்திரலோகத்திற்கு சென்றனர். தேவர்களும், நாகர்களும், வேந்தர்களும் தங்களது பணியை முடித்துக் கொண்டு வானவழியில் சென்றனர். இரவும் முழுவதும் சூழ்ந்தது. சந்திரன் தோன்றினான். இராம தூதனான அனுமன் வந்ததை பார்த்து சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் பிரகாசமான ஒளியை தந்தது.

அனுமனுக்கு இலங்கை நகரம் புதிதான நகரம். ஆதலால் அனுமனுக்கு எவ்வழியில் செல்வது என்று தெரியவில்லை. அவனின் உணர்வு வழிகாட்ட, நகரத்திற்குள் சென்றான். இலங்கை மதில்சுவரை அடைந்தான். 

மதில்சுவரின் உயரத்தை கண்டு வியந்து நின்றான் அனுமன். மதில் சுவரை அரக்கர்கள் காவல் புரிந்து கொண்டு இருந்தனர். இதனை கண்ட அனுமன், அரக்கர்களிடம் போரிட்டால் நம் காரியம் தடைபடும் அதுமட்டுமில்லாமல் நேரமும் வீணாகும். 

ஆதலால் மரங்கள் மீதும், மதில் மீதும் ஏறி உள் நுழைய தீர்மானித்தான். அனுமன் மதில் மீது ஏறி தாவ முயன்றார். அப்போது இலங்கையை காவல் புரியும் இலங்கா தேவி அவன் முன் தோன்றினாள்.

தேடல் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக