Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

நம்பிக்கையை கைவிடக்கூடாது !

நம்பிக்கை இருந்தால்தான் கடின உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடல் போன்றவை கைகூடும். எனவே எல்லாவற்றிற்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும்.

நம்பிக்கையை இறுதிவரையில் கைவிடாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி அடையலாம். இங்கு ஒரு சிறுகதையின் மூலம் நம்பிக்கையை பற்றி உங்களுக்கு விவரிக்கிறோம்.

ஒரு ஊரில் ராஜ் என்பவன் மிகவும் நற்குணம் உடையவனாகவும், எப்பொழுதும் தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவனாகவும் இருந்தான். ஒரு நாள் ராஜ் சுற்றுலா சென்றான். அங்கு படகில் பயணம் செய்யும்போது அவன் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. கடல் நீரினால் அடித்து செல்லப்பட்ட ராஜ், யாருமே இல்லாத தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான்.

ராஜ் கண் விழித்து பார்த்தப்போது தான் ஒரு தீவில் இருப்பதை கண்டு திகைத்துப் போனான். அதன்பின் தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்ய தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடியாக கட்டி வைத்தான்.

மூன்று மாதங்கள் கழிந்தது. அவனை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை. அவனின் நம்பிக்கை சிறிது குறைந்தாலும், அந்த தீவில் வாழ தன்னால் இயன்ற அளவு முயன்றான். அங்கே இருக்கும் விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள சிறு குடிசை ஒன்றை அமைத்துக் கொண்டான். அங்கே கிடைத்த சிறு சிறு உணவுப் பொருட்களை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு பசியாறினான்.

இவ்வாறு ஒருநாள் ராஜ் உணவு தேடிவிட்டு திரும்பியபோது அவனது அந்த குடிசை மொத்தமாக எரிந்து சாம்பலாகி இருப்பதை பார்த்து திகைத்துப் போனான். குடிசை இருந்த இடத்தில் வெறும் புகை மட்டுமே வந்து கொண்டிருந்தது. நல்லது செய்த தனக்கு எல்லாமே தீங்காகவே நடப்பதை நினைத்து அழுது புலம்பினான்.

அப்போது ஒரு பெரிய கப்பல் ஒன்று அவன் இருந்த தீவின் திசையில் வருவதைக் கண்டான். கைகளை வேகமாக அசைத்து அவன் கத்த, அந்த கப்பல் மெல்ல அந்த தீவின் அருகே இருந்த கரையோரம் வந்து நின்றது. அவனால் இதை நம்பவே முடியவில்லை. கப்பலில் இருந்து இறங்கி வந்த மாலுமியிடம், எப்படி இந்த தீவிற்கு வந்தீர்கள் என ஆவலுடன் கேட்டான் ராஜ்.

மாலுமி, 'எங்கள் கப்பல் தலைவன் எங்கிருந்தோ புகை வருவதை கவனித்து என்ன என்று தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்தப்போது நீங்கள் நட்டிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு இந்த பக்கம் கப்பலை திருப்பி வந்தோம்" என்றார்.

தத்துவம் :

நம் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் நம்பிக்கையோடு இருந்தால் கட்டாயம் ஏதேனும் பாதை தெரியும். நம்பிக்கை தான் வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!