Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 அக்டோபர், 2024

முருகனின் 16 வகைக் கோலங்கள்


1. ஞானசக்திதரர் : 
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர்

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

5. கஜவாகனர்

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர்

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர்

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

8. குமாரசாமி

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர்

இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி :

தாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி :

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. 

12. பிரம்மசாஸ்தா

இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோவில் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர் :

இவரை வழிபட்டால் திருமண தடைகள் விரைவில் அகலம், கன்னிப் பெண்களுக்கு கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி :

இவர், உடல் ஊனங்களையும் குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோவில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர் :

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மன சஞ்சலம் அகலம். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.

16. சிகிவாகனர் :

மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!