Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 அக்டோபர், 2020

இந்த காரணத்திற்காக கூட வாகனங்களை திருடுகிறார்களாம்... போலீஸ் அதிகாரிகள் சொன்ன பரபரப்பு தகவல்...

 இந்த காரணத்திற்காக கூட வாகனங்களை திருடுகிறார்களாம்... போலீஸ் அதிகாரிகள் சொன்ன பரபரப்பு தகவல்...

வாகனங்களை கொள்ளையர்கள் எந்த காரணத்திற்காக எல்லாம் திருடுகிறார்கள்? என்பது தொடர்பான தகவல்களை காவல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற வாகன திருட்டு தொடர்பான புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், பஞ்சாப் மாநிலத்திலேயே, லூதியானா காவல் ஆணையர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான், கடந்த 2019ம் ஆண்டு மிக அதிகப்படியான ஆட்டோ/மோட்டார் வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

லூதியானா காவல் ஆணையர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன திருட்டு தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு மொத்தம் 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகன திருட்டு வழக்குகளின் எண்ணிக்கையில் இது 25.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

லூதியானா காவல் ஆணையர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2017ம் ஆண்டு வாகன திருட்டு தொடர்பாக 490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதன்பின்னர் வந்த 2018ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 711 வழக்குகளாக உயர்ந்தது. அதாவது வாகன திருட்டு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்தது.

இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டில் 850 வழக்குகளாக மேலும் உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு வாகன திருட்டு தொடர்பாக மொத்தம் 3,282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், லூதியானா காவல் ஆணையர் அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மிகவும் அதிகபட்சமாக 850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து லூதியானா காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''பெரும்பாலான வழக்குகளில், கொள்ளையர்கள் வாகனங்களை திருடி, அவற்றை தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர். காவல் துறையினரிடம் சிக்கி கொள்ளாமல், அவர்கள் எளிதாக பணம் சம்பாதிக்க இது உதவுகிறது.

அதே சமயம் ஒரு சில வாகன கொள்ளையர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. போதை மருந்து தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், இரு சக்கர வாகனங்களை திருடி அவர்கள் விற்பனை செய்கிறார்கள். கொள்ளையர்கள் தாங்கள் திருடிய விலை உயர்ந்த வாகனங்கள், எஸ்யூவி ரக கார்களையும், சில சமயங்களில் குற்ற செயல்களை அரங்கேற்ற பயன்படுத்துகின்றனர்.

செயின் பறிப்பு, கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற குற்ற செயல்களை அரங்கேற்ற, குற்றவாளிகள் பெரும்பாலும் திருடப்பட்ட வாகனங்களைதான் பயன்படுத்துகின்றனர். நாங்கள் நடத்திய விசாரணையில், பெரும்பாலும் திருடப்பட்ட வாகனங்கள் தனித்தனி பாகங்களாக பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன.

அதே சமயம் திருடப்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை, ஏழை மக்களுக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாமல் விற்பனை செய்வதும் சில வழக்குகள் மூலமாக தெரியவந்துள்ளது'' என்றனர். வாகன திருட்டில் ஈடுபடும் கும்பல்கள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை விற்பனை செய்கின்ற டீலர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இது போன்ற கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வாகனங்களை பாதுகாத்து கொள்ள மிகவும் கவனமாக இருப்பது அவசியம். வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதுடன், வாகனம் திருடப்பட்டால், அவற்றின் இருப்பிடத்தை கண்டறியும் சாதனங்களை பொருத்தி வைப்பதும் நல்லது. அதேபோல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும்போது கவனமாக இருப்பதும் அவசியம்.

இல்லாவிட்டால் வேறு யாரிடமாவது இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்களை உங்கள் தலையில் கட்டி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது பின் நாட்களில் உங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே


 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!