Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 அக்டோபர், 2020

பொறாமையால் ஏற்பட்ட இழப்பு

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

 

 ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.

 

 மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

 

 இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

 

 ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.

 

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

 

நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!