காரில் சைக்கிளை ஏற்றிச் சென்றதற்காக காரின் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மிதிவண்டி இயக்குவதுமிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று. அதிலும், அதிகாலையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது நல்ல உடல் ஆரோக்யத்தை வழங்கும். எனவேதான், உடல் பருமன் மற்றும் குறிப்பிட்ட சில வியாதியஸ்தர்களை ரெகுலராக சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சைக்கிள் பழக்கம் வியாதியுடையவர்களுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் உகந்த உடற்பயிற்சியாகும். இதனால்தான் மக்கள் மத்தியில் சைக்கிளிங் பழக்கம் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சமீப காலமாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் காரணம் காட்டியும் ஒரு சிலர் சைக்கிளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் பயணங்களுக்கும், கடை வீதிக்கு செல்வதற்கும் அதிகம் சைக்கிளையேப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
இம்மாதிரியான சூழ்நிலையில் இளைஞர் ஒருவர் சைக்கிளிங் செய்வதற்காக மிதிவண்டியை காரின் பின் பகுதியில் ஏற்றிச் சென்றதற்காக போலீஸார் உச்சபட்ச அபராதத்தை விதித்திருக்கின்றனர். காரின் பின் பகுதியில் சைக்கிளை ஏற்றிச் செல்ல ஆர்டிஓ சான்று காட்டயம் என கூறி, அது இல்லாத காரணத்தினால் ரூ. 5 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெப்பல் பகுதியிலேயே இந்த விநோத அபராத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இது சைக்கிளிங் பிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் சுகுமாறன். இவரே சைக்கிளை காரின் பின் பகுதியில் ஏற்றிச் சென்றதற்காக ரூ. 5 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணைப் பெற்றவர்.
சுகுமாறனுக்கு 8 வயதில் தனுஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர், பல சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர் என கூறப்படுகின்றது. எனவே, தனுஷ் மற்றும் சுகுமாறன் அவ்வப்போது சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. குறிப்பாக, விடுமுறை போன்ற நாட்களில் இருவரும் சைக்கிளிங் செய்வதற்காக அவதி ஹில்ஸ் அல்லது அவளஹல்லி பகுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், கடந்த ஞாயிறன்று சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதற்காக இருவரும் தங்களின் இரு சைக்கிள்களையும் காரின் பின் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் பொருத்தியபடி புறப்பட்டிருக்கின்றனர். அப்போது, மடக்கிப் பிடித்த ஹெப்பல் பகுதி போலீஸாரே அவர்களுக்கு உச்சபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழங்கினர்.
இதுகுறித்து சுகுமாறன் போலீஸாரிடத்தில் கேட்டபோது, "காரில் ஒரு சைக்கிளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி இருக்கின்றது. ஆனால், இரு மிதிவண்டிகள் காரில் ஏற்றப்பட்டிருக்கின்றன" என காவலர்கள் காரணம் கூறியிருக்கின்றனர். பெங்களூருவில் அரங்கேறிய இந்த சம்பவம் சுகுமாறனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சைக்கிளிங் பிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம்குறித்து பெங்களூரு மிதிவிண்டி மேயர் சத்ய சங்கரன் கூறியதாவது, "இந்த அபராத சம்பவம் மிகவும் விநோதமாக இருக்கின்றது. இதற்கு முன்பு இதுபோன்ற அபராத நிகழ்வை நான் கேள்விப் பட்டதே இல்லை. பல ஆண்டுகளாக சைக்கிள் பிரியர்கள் தங்களது சைக்கிளை காரின் பின்பக்கத்தில் ஸ்டாண்டில் பொருத்தியபடிதான் வந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்கூட இதுவரை அபராதம் பெற்றதில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 52 (1)இல் இதுகுறித்த நிரந்தரமாகவே அல்லது தற்காலிகமாகவோகூட எந்த விதிகளும் இல்லை என அவர் தெரிவித்தார். பொதுவாக கார்களில் இந்த ஸ்டாண்ட் போன்ற ரேக்குகள் தற்காலிகமாக அம்சமாக மட்டுமே பொருத்தப்படுகின்றன. அவை நிரந்தரமானவை அல்ல.
மேலும், காரில் சைக்கிள்களைப் பொருத்தி எடுத்துச் செல்வது, பிறருக்கு தீங்கு விளைவிக்காத வரை குற்றமாகக் கருதப்படாது என போலீஸார்கள் சிலரே தெரிவத்திருக்கின்றனர். இது சைக்கிளிங் பிரியர்கள் மத்தியில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், பெங்களூரு ஏடிஜிபி வெளியிட்ட தகவலின்படி, சைக்கிளை காரின் மேற்கூரை அல்லது பின்பகுதியில் எடுத்துச் செல்வது குற்றமாகாது. ஆனால், வாகனத்தின் பக்கவாட்டில் வைத்து எடுத்துச் செல்லும்போது குற்றமாகக் கருதப்படும். இந்த செயல் சக வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்" என கூறினார்.
காரில் எப்படி சைக்கிளை எடுத்துச் சென்றாலும் அது பிறருக்கு இடையூறாகவே இருக்கும் என அனுஜ் பிரதாப் சிங் எனும் சமூகநல ஆர்வளர் தெரிவித்திருக்கின்றார். அதாவது, சைக்கிளின் நீளம் கார்களின் அகலத்தைவிட பெரியது. அதை சிறிய ரக கார்களின் பகுதியில் பொருத்தும்போது, நிச்சயம் இடையூறை ஏற்படுத்தும். சைக்கிளின் இருமுனை இருபுறமும் நீண்டிருக்கின்ற வேலையில், இதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு கருத்துகள் ஒவ்வொரு கோணத்திலும் வெளி வந்துக் கொண்டிருக்கின்ற வேலையில், இந்த சர்ச்சையான சம்பவம் அரங்கேற காரணம் இருந்த போக்குவரத்து காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் பெங்களூரு மிர்ரர்சுக்கு அளித்த பேட்டியில், "இது ஆர்டிஓ அளித்த தகவலின்படி தெளிவான விதிமீறல்" என கூறினார்.
வாகனத்தில் எந்தவொரு கூடுதல் பாகத்தையும் பொருத்துமுன் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத கூடுதல் அணிகலன்களுக்கே ரூ. 5000 வரை அபராதம் செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே காரின் பின் சைக்கிளை ஏற்றி வந்தவர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது என அவர் கூறினார்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக