Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கொத்து கொத்தாக பறிபோகும் பணம் : கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துளீர்களா? அப்போ இதை படிங்க..

கிரெடிட் கார்டு பயனர்களே அலட்சியம் கொள்ளாதீர்கள்.. உஷார்!

இந்தியாவில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டில் மடமடவென உச்சத்திற்குச் சென்றுவிட்டது. தியேட்டர் வாசலில், ஷாப்பிங் மாலில் என்று பல இடங்களில் நம்மைத் துரத்திப் பிடித்து கிரெடிட் வாங்க வந்துவிட்டார்கள். கிரெடிட் கார்டு வழங்கும் போதே இதில் ஏகபோக நன்மை இருக்கிறது, ரிவார்டு புள்ளிகளை வைத்து நீங்கள் அதிகம் மிச்சப்படுத்தலாம், ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எக்ஸ்டரா சலுகை இருக்கிறது என்று பல விஷயங்களைச் சொல்லி நம் மனதை மாற்றி நம்மையும் கிரெடிட் கார்டு வாங்க வைத்துவிடுவார்கள்.

கிரெடிட் கார்டு பயனர்களே அலட்சியம் கொள்ளாதீர்கள்.. உஷார்!

குறிப்பாக, ஆதார் மட்டும் போதும் சார் என்ற வாக்கியத்தைப் பலரும் பயன்படுத்துவார்கள். சரி, கிரெடிட் கார்டு வாங்கியவர்களுக்கு வங்கிகள் சொல்வது போல அதிக நன்மை இருக்கிறது தான், ஆனால் அதை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. கிரெடிட் கார்டு பாக்கெட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என்று அலட்சியம் கொள்ளாதீர்கள். உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து உங்களுக்கே தெரியாமல் பணத்தைச் சுலபமாக அபேஸ் செய்யும் ஆசாமிகள் இந்த டிஜிட்டல் உலகத்தில் பெருகிவிட்டார்கள்.

அபேஸ் ஆசாமியிடம் பணத்தை இழந்த நபர்

உங்களுடைய கூர்மையான கவனமும், வங்கிகள் கூறும் சில முக்கிய தகவல்களை உங்களுடன் மட்டும் வைத்துக்கொள்வது என்பது இது போன்ற சிக்கல்களில் இருந்து உங்களை காப்பாற்ற உதவும். இப்படி, இந்த செயல்களை செய்ய மறந்த 36 வயதான நாகராஜன் என்னும் நபர், அபேஸ் ஆசாமிகளிடம் தனது பணத்தை இழந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் ஊரில் உள்ள அக்கரகாரம் பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இவர் மொபைல் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாய்ஸ் கால் வந்துள்ளது.

போலி ஆர்.பி.எல் வங்கி கிரெடிட் கார்டு தலைமை அதிகாரி

நாகராஜன் ஆர்.பி.எல் மற்றும் எஸ்.பி. ஆகிய இரண்டு வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். நாகராஜனின் மொபைலுக்கு அழைப்பு விடுத்த நபர் தான் ஒரு ஆர்.பி.எல் வங்கி கிரெடிட் கார்டு தலைமை அதிகாரி என்று கூறி, நகராஜனிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அவரின் பெயர் முருகன் என்று கூறி, நாகராஜனின் கிரெடிட் கார்டில் க்ளைம் செய்யப்படாமல் அதிகளவில் ரிவார்டு புள்ளிகள் இருப்பதாகக் கூறி, அவரை நம்ப வைத்துள்ளார் அந்த மோசடி ஆசாமி.

ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றி தருகிறோம்

அதுமட்டுமில்லாமல், ரிவார்டு புள்ளிகளின் காலக்கெடு முடிவடையும் தறுவாயில் இருக்கிறது, அதை நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பணமாக மாற்றம் செய்து தருகிறோம் என்று கூறியுள்ளார். ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றுவதற்கான சலுகையை ஆர்.பி.எல் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது என்றும் அவர் பொய்யாக கூறியுள்ளார். அடுக்கடுக்காக பல பொய்களை கூறி, உண்மையிலேயே வங்கி அதிகாரி தான் பேசுகிறார் என்று நாகராஜனை அந்த நபர் நம்ப வைத்துள்ளார்.

அடிச்சு கேட்டாலும் சொல்லக்கூடாத 'OTP' எண்

நாகராஜனின் ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றுவதற்கு சில விதிமுறைகள் இருப்பதாகவும், அதைச் சரியாகச் செய்து முடிக்க கிரேடு கார்டு விபரம் மற்றும் வங்கி விபரம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். நடராஜனும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரின் கிரெடிட் கார்டு விவரங்களை முருகனிடம் கூறியுள்ளார். அவர் இப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும், அதை கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

நொடியில் போன் கால் மூலம் ரூ. 32,932 பணம் அபேஸ்

நாகராஜனும் யோசிக்காமல் தனது மொபைல் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணை அவரிடம் கூடியுள்ளார். நாகராஜன் அந்த நபரிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் போதே, நாகராஜனின் ஆர்.பி.எல். வங்கி கணக்கில் இருந்து ரூ. 26,882 மற்றும் ரூ. 6,050 என இரண்டு பரிவர்த்தனை மூலம் மொத்தம் ரூ. 32,932 பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. நாகராஜன் பதறிப்போய் ஹலோ..ஹலோ.. என்று சொல்ல முருகன் அழைப்பை துண்டித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

மக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி

தன்னை நம்ப வைத்து மோசக்காரர்கள் தனது பணத்தை திருடிவிட்டனர் என்ற அதிர்ச்சியில் நாகராஜன் மனம் உடைத்துவிட்டார். நாகராஜன் உடனே நடந்த சம்பவம் குறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை மக்களின் அலட்சியத்தால் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.

இதை மட்டும் எப்போதும் மறக்காதீர்கள்

OTP எண்ணை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என்று எத்தனை முறை மக்களுக்குச் சொன்னாலும் யாரும் அதைக் கேட்பதில்லை. நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், உங்களின் ஆசையைக் கிளப்பி, உங்களையே ஏமாற்றும் மோசக்காரர்களுக்கு முடிவு என்பது இருக்கவே இருக்காது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். எப்போதும் உங்களின் OTP எண்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். வங்கிகள் எப்போதும் உங்களை போன் கால் மூலம் தொடர்புகொள்ளாது என்பதையும் மறக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக