தமிழகம்
முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் அட்டைகள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இவர்கள் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்று கொள்கின்றனர். கொரோனா நெருக்கடி காலத்தில் ரேஷன் அட்டைகளை
அடிப்படையாக வைத்து பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள திமுக, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000
வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில்
தெரிவித்திருந்தது. இதுவும் ரேஷன் அட்டைகளை அடிப்படையாக வைத்து வழங்கவே
திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காட்டுத்தீ போல பரவிக்
கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, போதிய சரீர இடைவெளியை
கடைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள்
வாங்கும் முன்பு பாதுகாப்பற்ற முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. இதன்மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே
பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உரிய நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், ரேஷன் கடைகளில் பொருட்கள்
வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சம்பந்தப்பட்ட கருவியில்
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்கின்றனர். அதில் கிருமி நாசினி கூட தெளிப்பதில்லை. ஒரு நாளைக்கு
சுமார் 2,000 பேர் ரேஷன் கடைக்கு வருகின்றனர்.
இவர்களில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலும் கைரேகை பதிவு இயந்திரம் மூலம்
மற்றவர்களுக்கும் வைரஸ் பரவிவிடும். எனவே கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை
கைரேகை பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ச்சியாக கிருமி நாசினி
பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக