வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31வது திவ்ய தேசமாகும்.
மாவட்டம் :
அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில், விஷ்ணுகாஞ்சி, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
எப்படி செல்வது?
இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும், ரயில்களும் உள்ளன.
கோயில் சிறப்பு :
திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
உற்சவருக்கு, 'அழைத்து வாழ வைத்த பெருமாள்" என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு 'அத்திகிரி" என்றும் பெயர் உண்டு.
அத்திவரதர் :
மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் திருக்குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
கோயில் திருவிழா :
வைகாசி பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, புது வருடப் பிறப்பு, தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
பிரார்த்தனை :
இங்குள்ள பெருமாளை வணங்கினால் கல்வியில் சிறந்த ஞானம், குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும். திருமணத்தடை, வழக்குகளில் வெற்றி, வாழ்வில் வளமும், நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள்.
தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் தீர்கின்றன. குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்.
இவ்விடத்தில் தங்க பல்லி, வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன், சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்களும், கிரகண தோஷங்களும் விலகி ஷேமம் உண்டாகும்.
நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாற்றுதல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.
பிரசாதம் :
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் இட்லி பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக