மின் வாகனங்களுக்கான பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் கட்டணங்களை ரத்து செய்வதற்கான வரைவை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மின் வாகன பயன்பாட்டின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது ஓர் புதிய அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு ஆர்சி பதிவு கட்டணம் மற்றும் ஆர்சி புதுப்பித்தல் கட்டணம் விலக்கு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கான முன்மொழியும் பிரமாணத்தையே அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த வரைவை வெளியிட்ட கையோடு, பொதுமக்கள் இதுகுறித்த கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் அது கூறியுள்ளது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானவை என்பதால் அவற்றை அதிகளவில் பயன்பாட்டில் கொண்டு வருவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மானியம், வரி தள்ளுபடி உள்ளிட்ட சிறப்பு தள்ளுபடிகள் கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் கூடுதல் வரவேற்பை மின் வாகனங்களுக்கு உருவாக்கி கொடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த கட்டண விலக்கு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இதுபோன்று மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் விதமாக சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்களினால் ஏற்படும் மாசு மற்றும் சுற்றச்சூழல் சீர்கேட்டை குறைக்கும் பொருட்டே மின் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நாட்டில் அதிகரிக்கச் செய்யும் முயற்சியிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
தொடர்ந்து, பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை அழிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. 10 ஆண்டுகள் பழைய வர்த்தக மற்றும் 15 ஆண்டுகள் பழைய தனி நபர் வாகனங்களை சாலையில் இருந்து வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக