ஜிஎஸ்டி வரி நடைமுறையில் உள்ள 5 விழுக்காடு வரியை 8 விழுக்காடாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் விதத்தில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது.
5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என மொத்தம் நான்கு அடுக்குகளின் கீழ் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வருவாயை பெருக்குவது தொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் தலைமையிலான குழு தனது அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
அதில், 5 சதவீத வரி அடுக்கை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வரி உயர்வின் மூலம் ஆண்டுக்கு ஒன்றறை லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரி அடுக்கு முறையை 8 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு என மூன்று அடுக்குகளாக குறைக்கவும் மாநில நிதியமைச்சர்கள் குழு பரிசீலித்து வருகிறது.
இந்த வரி சீரமைப்பு முறை அமலுக்கு வரும்பட்சத்தில் 12 விழுக்காடு வரி அடுக்கில் உள்ள பொருட்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் வரி விதிப்பது குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக