இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத
இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும்
பெயர்போன காலனித்துவ ஆட்சியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை
வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய
இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள். உலக வரலாறு மஹாத்மா என்ற பட்டத்தை
வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர்.
பிறப்பு - வரலாறு
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி இந்தியாவின்
குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி. அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர்.
தாயார் பெயர் புத்திலிபாய்.
வாழ்க்கை சரித்திரம்
சிறுவயதில் 'அரிச்சந்திரா' நாடகம் பார்க்கும்
வாய்ப்பு கிட்டியது காந்திக்கு. அந்தப் பிஞ்சு வயதிலேயே அரிச்சந்திரன்
கதாபாத்திரம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் உண்மையையே
பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் அவருக்குள் விதைத்தது. காந்தி தொடக்கப்பள்ளியில்
பயின்றபோது ஒருமுறை சோதனை அதிகாரி வந்தார் சில சொற்களைச் சொல்லி எல்லா
மாணவர்களையும் எழுதச் சொன்னார். காந்தி ஒரு வார்த்தையை தவறாக எழுதியிருந்ததைப்
பார்த்து அவருடைய ஆசிரியர் காந்தியின் காலை மிதித்துப் பக்கத்து மாணவனைப் பார்த்து
எழுதும்படி சைகைக் காட்டினாராம். ஆனால் ஆசிரியரே தவறான வழிகாட்டிய போதிலும்
அவ்வாறு செய்ய மறுத்து விட்டாராம் காந்தி. தொடக்கப்பள்ளியில்கூட அவர் காட்டிய
நேர்மை வியப்பைத் தருகிறதல்லவா.
அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம்
செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே காந்திக்கு திருமணம்
நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார்.
கல்வி
கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த
காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் தன்மகன்
கெட்டுப்போய் விடுவான் என்று அஞ்சிய தாயார் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி
மறுத்தார். மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம்
செய்துதந்த பிறகே காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதித்தார் தாய். செளகரியத்திற்காக
சத்தியம் செய்யும் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். ஆனால் சத்தியம் காப்பதற்காகவே
பிறந்தவர் என்பதை அந்த இளம் வயதிலேயே வாழ்ந்து காட்டினார் காந்தி. தான் தாய்க்குக்
கொடுத்த வாக்கை மீறாமல் ஒரு முழுமையான மனிதனாக 1891 ஆம் ஆண்டு சட்டத்துறையில்
பட்டம் பெற்றார்.
மீண்டும் இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழில்
செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல்
போனது.
சத்தியாக்கிரகம்
ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா செல்ல
வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. 1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு
திருப்பு முனையாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நிறவெறிக் கொள்கையும்,
இனஒதுக்கல் கொள்கையும் தலை விரித்தாடியது. அங்கு இந்தியர்கள் அவமானப்படுத்தப்
படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த
அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார். நம்மில் பெரும்பாலோர் அநீதிகளை கண்டு
கலங்குவதோடு நின்று விடுவோம் ஆனால் காந்தி அதனை எதிர்க்க முற்பட்டார்.
தென்னாப்பிரிக்கவிலேயே தங்கி இந்தியர்களின் சம உரிமைக்காகப் போராட முடிவெடுத்தார்.
டர்பன் நகரில் நாட்டல் என்ற பகுதியில் ஒன்றல்ல
இரண்டல்ல 21 ஆண்டுகள் தங்கி பல சமூக அரசியல் பரிசோதனைகளைச் செய்துப் பார்த்தார்.
அந்த முயற்சிகளின் மூலம் அவர் உலகுக்குத் தந்த பெரும்கொடைதான் 'சத்தியாக்கிரகம்'
என்ற அகிம்சை அறவழிப் போராட்டம். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் பயணம்
செய்யும்போது ஒரு பெட்டியில் ஒரு வெள்ளையர் இருந்தாலும் அந்தப்பெட்டியில்
கருப்பரோ, இந்தியரோ ஏறக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருமுறை ஆங்கிலேயர் இருந்த
ஒரு பெட்டியில் காந்தி ஏறினார். உடனடியாக இறங்குமாறு அந்த ஆங்கிலேயர் சொன்னதுக்கு
மறுப்புத் தெரிவித்த காந்தியை உதைத்து வெளியில் தள்ளினார் அந்த வெள்ளைக்காரர்.
இந்த மாதிரி பல அவமானங்கள் ஏற்பட்டபோதும் அகிம்சை வழியில் உலகை வெல்லலாம் என்ற
அவரது மன உறுதி சற்றும் குலையவில்லை. இறுதியில் காந்தியம்தான் வென்றிருக்கிறது.
ஏனெனில் எந்த புகை வண்டி நிலையத்தில் அவர் உதைத்துத் தள்ளப்பட்டாரோ அதே
நிலையத்தில் இன்று காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
சுதந்திர தாகம்
21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை
முடித்துக்கொண்டு 1915 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தி சபர்மதி
நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழத் தொடங்கினார். காந்தியை இந்திய
அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர். முதலாம்
உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக
செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி. அதற்குக் காரணம் போர்
முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து
வைக்கும் என்று அவர் நம்பியதுதான். ஆனால் பிரிட்டிஷ் அரசோ போர் முடிந்த பிறகு
ரெவ்ளட் என்ற சட்டம் மூலம் இந்தியர்களின் சுதந்திர உணர்வையும், எதிர்பார்ப்பையும்
நசுக்கியது. அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதிய காந்தி வெகுண்டெழுந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு
வேண்டுகோள் விடுத்தார்.
பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்குமாறு
மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை
பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில்
இருந்தபோது காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த
ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப்பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர்
சி.எப்.ஆண்ட்ரூஸ் அந்தத் துணிகளை எரிப்பதற்கு பதில் ஏன் அவற்றை ஏழைகளுக்கு
கொடுக்கக்கூடாது? என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில் ஏழைகளுக்குக்கூட
தன்மானம் உண்டு. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பூர்னஸ்வரஜ் அதாவது
முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அதற்கு அடுத்த
ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி. அப்போது
உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி. வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது
வெகுவாக பாதித்தது. எனவே அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை'
மேற்கொண்டார் காந்தி.
தண்டியாத்திரை
அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன்
புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை
அடைந்தார். அங்கு சட்டத்தை மீறி அவர் கடற்கரையிலிருந்து சிறிதளவு உப்பைச்
சேகரித்தார் முன் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் அவர் அந்த உப்பு சத்தியாகிரகத்தை
நடத்தினார். அவருடைய மனோதிடத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி சற்று தடுமாறிப் போனது
உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அவரை சிறையில் அடைத்தது. அவரை மட்டுமல்ல
அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட
உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர். பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம்
காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது. இரண்டு
ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காந்திக்கும் ஓர் உடன்படிக்கை
ஏற்படவே ஒத்துழையாமை இயக்கத்தை மீட்டுக்கொண்டார் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம்
கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டில்
கலந்துகொண்டார் ஆனால் ஏமாற்றத்தோடு திரும்பினார்.
வெள்ளையனே வெளியேறு
பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி
1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி
உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ்
அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும்
காட்டுத்தீப்போல் பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு 1945 ஆம்
ஆண்டு லண்டனில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை வன்மையாக
எதிர்த்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆட்சி பதவி இழந்தது. தொழிற்கட்சி ஆட்சிக்கு
வந்தது. தொழிற்கட்சியின் தலைவர் கிளமெண்ட் அட்லி இந்தியர்களின் சுதந்திர
போராட்டத்தைக் கண்டு மனமிறங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடுவெடுத்தார்.
ஆனால் எல்லாம் கைகூடி வந்த நேரம் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்றப்
பிரிவினைவாதக் கோரிக்கை தலையெடுத்தது.
இந்தியா - பாகிஸ்தான்
இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும்
இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும்
என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.
காந்திக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால்
நேருவும் பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில்
மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க
முடிவெடுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கொட்டையில்
பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில்
திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர். ஆனால் அந்தச்
சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு
இரண்டாகப் பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு
வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி
மூச்சுவரை அந்தப் பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள். அவர்
அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில
தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள்
பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும்
இடம்பெயர்ந்தனர். சொந்த நிலம், வீடு, சொத்து, வியாபாரம், வேலை, கல்வி, நண்பர்கள்
என அனைத்தையும் விட்டு தங்கள் எதிர்காலத்திற்கு அஞ்சி மக்கள் இந்தியா, பாகிஸ்தான்
எல்லையை கடந்தபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும் அந்த
மதக்கலவரக் கொடுமையில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர்
உயிரிழந்தனர்.
தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம்
ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள்
ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதுகூட அவர் எல்லாவற்றையும்
வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த
மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார்.
இறப்பு
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே
ஆகியிருந்த நிலையில் அதனைப் பெற்றுத் தந்தவரின் உயிருக்கு சுதந்திரம் தர
எத்தனித்தான் நாதுராம் கோட்ஸே என்ற ஒரு மதவெறியன். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி
புதுதில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார்
காந்தியடிகள். சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனைக்
கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான்.
அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி
போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பை நிராகரித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்து என்ற அந்தப் பின்னனியில்
ஜனவரி 30ந்தேதி இன்னொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக
வந்திருந்தார். அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை
செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன். அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார்
காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு
கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன். மூன்று குண்டுகள்
அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே
ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள். இந்திய
நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு பிரிந்தது அந்தத் தேசப்பிதாவின் உயிர். தன் கடைசி
மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத
கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்புக்காக
அரும்பாடுபட்டார் காந்தியடிகள். தீண்டத்தகாதவர்கள் எவரும் கிடையாது என்று கூறிய
அவர் தீண்டாமையைக் கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றும் சாடினார். ஒருமுறை தனது
ஆசிரமத்தில் தீண்டத்தகாத ஆசிரியரையும், அவரது குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டபோது
அவரது மனைவிகூட அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமையை இந்தியாவின் அவமானம்
என்று கூறிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? அவர்கள் இந்த ஆசிரமத்தில்
தங்குவதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ இந்த ஆசிரமத்தை விட்டு
வெளியேறலாம் என்று தனது மனைவியைப் பார்த்து கூறினார். கஸ்தூரிபாய் வேறு வழியின்றி
அமைதியானார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஹரிஜன்ஸ் என்று
பெயரிட்டார் காந்தியடிகள். அதன் பொருள் கடவுளின் பிள்ளைகள் என்பதாகும்.
தனது சத்திய சோதனை என்ற நூலில் காந்தியடிகள்
புகழ்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை அவர்களில் கைகளில்
படிந்திருக்கும் ரத்தக்கறையைக் கழுவுமாறு நாம் சொல்வதற்கு முன் இந்துக்களாகிய நாம்
நம் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையை கழுவ வேண்டாமா? என்று தீண்டாமைக்
குறித்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பினார் காந்தியடிகள். அவரது போராட்டங்களால்
தீண்டத்தகாதவர்களை ஒரு தனிச்சமூகமாகக் கருதி அவர்களுக்கு தனி ஓட்டுரிமை வழங்க
பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆனால் அவ்வாறு செய்வது பிரச்சினையை இன்னும்
மோசமாக்கும் என்று நம்பிய காந்தியடிகள் துணிவான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
ஹரிஜனங்கள் தனிச்சமூகம் என்ற திட்டத்தைக் கைவிடா விட்டால் சாகும் வரை உண்ணா விரதம்
இருக்கப் போவதாக பூனா சிறையிலிருந்தவாறே அறிவித்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட
பிரிட்டிஷ் அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதன்படி இனிமேல்
இந்துக்களில் பிறப்பின் காரணமாக எவரும் கீழ்சாதி என்பது கிடையாது என்று அறிவித்து
தனது உண்ணாவிரத்தை முடித்தார் காந்தியடிகள்.
காந்தியடிகள் எவ்வளவு தெளிவான சிந்தனையுடயவர்
என்பதற்கு இன்னொரு சம்பவம். தன் ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக்
கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் வேதனையைப் பார்த்து கலங்கிய அவர் அதனை கொன்று
விடுமாறு கூறினார். பசுவைக் கொல்வது பாவம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே
சில தீவிர இந்துக்கள் அவரைப் பாவி என்று வசைபாடினர். ஆனால் வேதங்களை விட ஓர்
உயிரின் வேதனைதான் அன்னலின் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. 1922 ஆம் ஆண்டு
பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபோது அவர்
பைபிள், குர்ரான் போன்ற நூல்களையும், இந்து வேதங்களையும் படித்தார். தமிழ்
மொழியைக் கற்றுக்கொண்டார். 1925ல் காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகிய
காந்தியடிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று இராட்டினம் மூலம்
சுய தொழில் செய்வதைப் பற்றியும், ஒத்துழையாமைப் பற்றியும் மக்களிடம் பேசினார்.
அவ்வாறு ஒருமுறை பேசியபோது கிராம மக்கள்
சேர்ந்து காந்தியடிகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அப்போது அவர்களைப்பார்த்து இந்த
மலர்மாலைக்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் 16 பேர்களுக்கு ஒருவேளை உணவு
வாங்கி தர உதவும் என்று கூறினார். கட்டாயத்தின் பேரில் தான் பால்ய விவாகம் செய்து
கொண்டாலும் அதனை வன்மையாக எதிர்த்தார் காந்தியடிகள். பிள்ளைகளின் வாழ்க்கையை
குலைக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விதவைகளைப்
பார்த்து மறுமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும்
மறுமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று முழங்கினார். உலகிலேயே
பயங்கரமான ஆயுதம் நாக்கு என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவரும்
நாக்கைக் கட்டுப்படுத்தினால் உலகில் பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்று நம்பிய
காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் திங்கள் கிழமைகளில்
மவுன விரதம் இருந்தார். ஒரு மணிநேரம்கூட மவுனமாக இருப்பது நம்மில் பலருக்கு
முடியாத காரியம். ஆனால் அரசியலில் ஈடுபட்டிருந்தபோதுகூட, எவ்வளவு பெரிய நபர்களை
சந்திக்க வேண்டியிருந்தபோதும்கூட திங்கள் கிழமை மவுன விரதத்தைக் கைவிட்டதில்லை
காந்தியடிகள்.
மஹாத்மா
நாடு முழுவதும் இரயில் பயணம் மேற்கொண்ட
போதெல்லாம் காந்தியடிகள் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தார். சாதரண மக்கள்
சிரமப்படும்போது தனக்கு செளகரியங்கள் தேவையில்லை என்பதுதான் அவரது எண்ணம். அதே
எண்ணம் அவரது ஆடையிலும் பிரதிபலித்தது. இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து
மனம் வெம்பியதால்தான் காந்தியடிகள் நான்கு முழத் துண்டை மட்டும் ஆடையாக அணியத்
தொடங்கினார். இப்படி தன் மக்களுக்காக துயருற்று அவர்கள் அனுபவித்த வேதனைகளை தானும்
அனுபவித்து மக்கள் நலனை மட்டுமே குறியாக கொண்டு செயலாற்றிய வேறு ஒரு தலைவர் உலக
வரலாற்றில் இருந்திப்பாரா என்பது சந்தேகமே. உண்மை பேசுவதைவிட ஒரு சிறந்த பண்பு
இருக்க முடியாது என்று உளமாற நம்பிய காந்தியடிகள் My Experiments with Truth என்ற
புகழ்பெற்ற சுயசரிதையையும் எழுதினார். முழுமையாகத் தெரிந்துகொள்ள 'சத்திய சோதனை'
என்ற அந்த நூலை படித்துப் பாருங்கள்.
உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஓர்
உண்மை புலப்படும். உலகில் ஏற்பட்ட எந்த புரட்சியும் ஆயுதம் ஏந்தாமல், இரத்தம்
சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. அந்த விதியை மாற்றி அமைத்தவர்
அன்னல் காந்தியடிகள். கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம், வரிகொடா
இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு
இயக்கம் என அகிம்சை வழியிலேயே ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்
காந்தியடிகள். அதனால்தான் அன்னல் காந்தியடிகளைப் பற்றி சிங்கப்பூரின் மதியுரை
அமைச்சர் லீ குவான் யூ ஒருமுறை உரையாற்றும்போது நான் ஒரு இந்திய போப்பாக
இருந்திருந்தால் மஹாத்மா காந்திக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியிருப்பேன் என்று
கூறினார். இப்படி உலக தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அனுகுலமும் காந்தியடிகளை
போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணம் அவர் உலகுக்குத் தந்த இரண்டு
மாபெரும் கொடைகளான அகிம்சை, வாய்மை.
இந்த அவசர உலகில் அகிம்சைக்கும், வாய்மைக்கும்
இடம் உண்டு என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் உலகம் அவரை மட்டும் 'மஹாத்மா'
என்றழைக்கிறது. அந்த ஒப்பற்ற ஜீவன் பின்பற்றிய அகிம்சையையும், வாய்மையையும்
பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக