Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் கவனத்திற்கு - மாநில அரசுகளின் திட்டம் இதுதான்!



நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநில அரசுகள் முடிவு குறித்து இங்கே காணலாம்.

 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் நாடு முழுவதும் வைரஸ் தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அனைவரும் கொரோனா உடன் வாழப் பழகிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறித்த செய்திகளை சாதாரணமாக கடந்து போகும் நிலைக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது.

நான்காம் கட்ட தளர்வுகளின் படி வரும் 21ஆம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியுடன் பள்ளிக்குச் செல்லலாம். அங்கு ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளிகளைத் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

தங்கள் பகுதியில் நோய்ப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய சரீர இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையிலும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவும் வகையிலும், பள்ளி வளாகத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுடன் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகளில் விளையாட்டு நிகழ்வுகள், கூட்டம் நடத்துதல், கேண்டீன் திறப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மாநிலங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் நிலைப்பாடு என்னவென்று இங்கே காணலாம்.

குஜராத் - வரும் 21ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கும் முடிவில் இல்லை

உத்தரப் பிரதேசம் - நடப்பு மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழல் நிலவுவதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா - வரும் 21ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு கோவிட்-19 பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளா - செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகளைத் திறக்கும் திட்டமில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் - வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி - செப்டம்பர் 20ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மாணவர்கள் வர அனுமதியில்லை. அதன்பிறகு ஆசிரியர்களிடம் ஆலோசனைப் பெறுவதற்கு பள்ளிக்கு வரலாம். வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளில் வழக்கமாக பாடம் நடத்தும் சூழல் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு - பெற்றோர்கள், மாணவர்கள் மனநிலை மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!