உங்கள் பாக்கெட்டுகளை பதம் பார்க்கும் விதமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பு செய்ய ஆரம்பித்துள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே, ரீசார்ஜ் திட்டங்களில் கட்டண அதிகரிப்பை விரைவில் காணலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வோடபோன் நிறுவனம் தனது இரு திட்டங்களில் கட்டண அதிகரிப்பினை செய்துள்ளது.
சரி எந்தெந்த திட்டத்தில் கட்டண அதிகரிப்பு? வாருங்கள் பார்க்கலாம்
கட்டண அதிகரிப்பு
வோடபோன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் பெரும் நஷ்டத்தினை கண்டு வருகின்றது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா என்ற தனது பெயரினை கூட வீ என்று மாற்றியமைத்தது. இதற்கிடையில் தற்போது அதன் கட்டண விகிதங்களையும் மாற்றியமைக்க தொடங்கியுள்ளது.
எந்தெந்த திட்டங்களில் மாற்றம்?
வோடபோனின் 598 மற்றும் 749 ரூபாய் பேமிலி போஸ்ட் பெய்டு திட்டங்கள் தான் தற்போது மாற்றம் கண்டுள்ளன. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிக்கும் 50 ரூபாயினை அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரிலேயே வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர், முதல் நிறுவனமாக Vi கட்டணங்களை உயர்த்துவதில் வெட்கம் கொள்ளாது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் கட்டண விகிதங்கள் மேலும் நீடிக்காது என்றும் தெளிபடக் கூறியிருந்தார்
ஏன் கட்டணம் அதிகரிப்பு?
அது மட்டும் அல்ல, வோடபோன் ஐடியா தங்களது திட்டங்களுக்கான கட்டணங்களை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உயர்த்தக் கூடும் என்றும் ரவீந்தர் கூறியிருந்தார். மேலும் இந்த கட்டண உயர்வு 15% முதல் 20% வரை இருக்க கூடும் என்று கூறப்பட்டது. இந்த கட்டண உயர்வானது நிதி மீட்பு, வாடிக்கையாளர்களால் ஏற்படும் இழப்புகளை சரி செய்தல், சமநிலையினை தக்க வைத்து கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.598 திட்டத்தில் என்னென்ன மாற்றம்?
598 ரூபாய் மதிப்பிலான போஸ்ட் பெய்டு திட்டத்தினை தற்போது 649 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 80 ஜிபி டேட்டா கிடைக்கும். இதே 749 ரூபாய் திட்டத்தில் 799 ரூபாயாக மாற்றியுள்ளது. இந்த திட்டத்தில் 90 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டங்கள் வோடபோன் ஐடியாவின் ரெட் பேமிலி திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
வாடிக்கையாளர் இழப்பு ஏற்படலாம்
ஏற்கனவே மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ள வோடபோன் நிறுவனம், அடுத்த ஒரு வருடத்தில் 50 - 70 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கலாம் என்றும் பிட்ச் ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.
வோடபோன் நிறுவனத்தினை அடுத்து, பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனமும் கட்டண அதிகரிப்பை கையில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக