கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அலோபதியைத் தவிர, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், கைவைத்தியம் என்று மக்கள் மாற்று மருத்துவத்தையும் பயன்படுத்துகின்றனர்.
இதைப் பயன்படுத்தி வருமானம் பார்த்து கல்லா கட்டும் சம்பவஙக்ளும் அதிகரித்துவிட்டன. இதை தின்றால் பித்தம் தெளியும் என்று, நம்பி ஏமாறும் அப்பாவி மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.
இதில் ஒருபகுதியாக, கொரோனாவை குணப்படுத்த கத்தரிக்காய் சொட்டு மருந்து என்ற ஆயுர்வேத மருந்தை தயாரித்து அமோகமாக விற்பனை செய்துவருகிறார் ஆந்திர மாநில நாட்டு வைத்தியர் ஒருவர்.
அவர் தயாரித்து விற்பனை செய்யும் கத்தரிக்காய் கண்சொட்டு மருந்தை வாங்க மக்கள் கூட்டம் படையெடுக்கிறார்களாம்! கேட்கவே அச்சமாக இருக்கிறதா? இந்த உண்மை சம்பவம் நடைபெற்றுள்ளது ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தின் முத்துக்கூறு கிராமத்தில் தான்.
இந்த கிராமத்தில் வசிக்கும் போனஜி ஆனந்தய்யா (Bonigi Anandaiah) என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து பிரபலமானவர்.
கொரோனா பரவியதை அடுத்து, இவர், தேன், மிளகு, கத்திரிக்காய் போன்ற பொருட்கள் கொண்டு கண்ணுக்கு விடும் சொட்டுமருந்து ஒன்றை தயாரித்தார். இந்த விஷயம் தீ போல் பரவ, கத்தரிக்காய் சொட்டு மருந்தை வாங்க மக்கள் குவிந்தனர்.
இந்த விஷயம் பரவியதும், தகவலறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் கத்தரிக்காய் சொட்டு மருந்து உண்மையில் கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் (IMCR) குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆய்வுகள் முடியும்வரை மருந்து விற்பனையை நிறுத்துமாறு ஆனந்தய்யாவுக்கு கடுமையான உத்தரவு இடப்பட்டுள்ளது
ஆனால், நெல்லூரில் ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது..
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோட்டையா, கத்தரிக்காய் சொட்டு மருந்தைப் பற்றி கேள்விப்பட்டு அதை பயன்படுத்தியிருக்கிறார். தற்போது அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் அளவு தோராயமாக 85 என்ற அளவில் இருக்கிறதாம்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கோட்டையாவுக்கு ரசாயன வெண்படல நோய் (chemical conjunctivitis) இருந்ததாக மருத்துவர் கூறினார். அனந்தையாவின் கத்தரிக்காய் சொட்டு மருந்தை பயன்படுத்திய சுமார் 24 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர்களில் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய உடன் சிலருக்கு அது ஆசுவாசம் அளித்ததாக தெரிகிறது. ஆனால் ரசாயன வெண்படல நோய் (chemical conjunctivitis) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, இருப்பினும் ஆளுக்கு ஆள் எதிர்வினைகள் மாறுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அனந்தையா ஒரு நாட்டு மருத்துவர் என ஆரம்பத்தில் கூறப்பட்டது, அவர் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர் என்று ஆயுஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக