Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 22 ஜூலை, 2021

ஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஊழியர்கள் குத்தாட்டம்..!

 ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

உலகளவில் பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கொரோனா தொற்றுக்குப் பின்பு ஆட்டோமேஷன் சேவையை அதிகப்படுத்தத் துவங்கிய காரணத்தால் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தக்க வைக்கும் விதமாகச் சிறப்புமிக்கப் பரிசுகளையும், ஊக்கத்தொகையும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றால் கட்டாயம் 20 சதவீதம் அதிகத் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதைக் குறைக்கும் வகையில் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தக்க வைக்கச் சிறப்புமிக்கப் பரிசுகளையும், ஊக்கத்தொகையும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பென்ஸ் கார் பரிசு

இதன் படி ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் திறன் மிக்க அதிகாரிகள் தங்கள் வீட்டிற்குப் பென்ஸ் காரை பரிசாகப் ஓட்டி செல்லும் வாய்ப்பு உள்ளது என்று இந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவி அப்பாராவ்

இதுகுறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவர் விவி அப்பாராவ் கூறுகையில், ஊழியர்களுக்கான சிறப்புப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை குறித்த முடிவுகளும், திட்டத்தையும் நிர்வாகத்தில் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்க நடைமுறைப்படுத்த அதிகளவிலான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரோஷினி நாடார் நிர்வாகம்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 2013ல் திறன் மிக்க உயர் அதிகாரிகளுக்குப் பென்ஸ் காரை பரிசாக அளித்து ஒட்டுமொத்த இந்திய ஐடி நிறுவனங்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இதற்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கையை எடுக்காத ஹெச்சிஎல் தற்போது ரோஷினி நாடார் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் மீண்டும் ஊழியர்களுக்குப் பென்ஸ் கார் அளிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

வெளியேறும் ஊழியர்கள்

பொதுவாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் பதவியில் புதிய ஆட்களை நியமிக்கும் போது 15 முதல் 20 சதவீதம் தொகையைக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டி வரும். உதாரணமாகத் தற்போது ஜாவா டெவலப்பர் தேவை என்றால் அதே சம்பளத்தில் ஊழியர்களை எடுக்க முடியும், அதுவே கிளவுட், பிக் டேட்டா போன்ற முக்கியத் தொழில்நுட்பத்தில் இதைச் செய்ய முடியாது.

ஊழியர்கள் தட்டுப்பாடு

இதேவேளையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டைப் போக்க ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 22000 பிரஷ்ஷர்களைப் பணியில் நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 15,600 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

கடுமையான போட்டி

மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 9.9 சதவீதத்தில் இருந்து 11.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தையில் டாப் ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஊழியர்களைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கச் சந்தையில் போட்டித்தன்மை அதிகரிக்க வேண்டும் என வங்கி சேவைத் துறை முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளார்.

5 வருட ராஜ வளர்ச்சி

இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்காவின் அனைத்துத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களும் டெக் சேவைத் துறையில் அதிகளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்

தற்போது கிடைத்துள்ள வர்த்தகத்தையும், அடுத்த சில வருடத்தில் கிடைக்கும் வர்த்தகத்தைத் திறம்பட முடிக்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை அனைத்து மட்டத்திலும் சேர்க்க முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!