நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான ET செய்தியில், இவ்விஷயத்தினை அறிந்த இருவர் இதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2018 முதல் 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் நிதி பொறுப்பில் ஜெயின் இருந்து வந்தார்.
யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனத்தில் நிலவி வரும் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்னும் பிரச்சனையானது பெரிதாகிக் கொண்டே தான் உள்ளது. உண்மையில் பாரத் பேவில் அப்படி என்ன தான் பிரச்சனை? பின்னணி என்ன வாருங்கள் பார்க்கலாம்
நிதி மோசடி உண்மையே
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாரத் பே நிறுவனத்தின் சர்ச்சையில் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர், இயக்குனர் குழுவுக்கு நிபந்தனை விதித்திருந்தார். அதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் நிதி மோசடி நடந்திருப்பது தணிக்கை அறிக்கையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தான் அஷ்னீரை இயக்குனர் குழுவில் இருந்து வெளியேற்ற நிர்வாக குழு தீவிரமாக இருப்பதாக கூறப்பட்டது.
பாரத் பே
அதேசமயம் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள அஷ்னீர் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. பாரத் பே நிறுவனம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இது பேமெண்ட் சேவைகளை சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தினை பவிக் கொலாடியா மற்றும் ஷஸ்வத் நகர்னி தொடங்கினர். அதன் பின்னரே அஷ்னீர் இணை நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இணைந்தார்.
இதனிடையே அஷ்னீவரின் மனைவி மாதுரியும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் பிரிவுத் தலைவராக இணைந்தார். நல்ல வளர்ச்சியினை கண்டு வந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவுக்கும், அஷ்னீவருக்கும் இடையே பிரச்சனை எழ ஆரம்பித்தது. இந்த நிலையில் தான் அஷ்னீர் தாமாக விடுப்பில் செல்ல இருப்பதாக நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ரியாலிட்டி ஷோவான ஷார்க் டாங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனியார் வங்கி ஊழியர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.
விடுப்பு
அந்த சமயம் அஷ்னீர் பேசியதாக கூறிய ஆடியோவும் வெளியானது. ஆரம்பத்தில் இது போலியானது என கூறியவர், இதனை சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் கூறினார். அஷ்னீரை தொடர்ந்து அவரது மனைவி மாதுரியும் விடுப்பில் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
உரிமைக்காக போராடுவேன்
இதற்கிடையில் தான் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி மோசடிகள் குறித்து தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து முதல் கட்ட விசாரணையில் நிதி மோசடி நடந்திருப்பது உண்மை எனவும் கூறப்பட்டது. இதனிடையில் அஷ்னீர் தான் நிறுவனத்தினை விட்டு வெளியேற முடியாது என்று கூறியிருந்தார். மேலும் எனது உரிமைகளுக்காக நான் போராடுவேன் என கூறியிருந்தார். மேலும் எந்த வித இழப்பீடும் இன்றி வெளியேறத் தயாராக இல்லை. இதற்காக சட்ட ஆலோசனைகளையும் மேற்கோண்டு வருவதாகவும், இது போன்ற சர்ச்சைகளுக்கு பயப்பட மாட்டேன் என்றும் அஷ்னீர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின
நிதி மோசடிகள் அம்பலம்
இதற்கிடையில் தான் நிறுவனத்தில் சில நிதி மோசடிகளை கண்டறிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிறுவனத்தின் நிதியினை தவறாக பயன்படுத்தியதாகவும், இதற்கு வலுவான ஆதாரம் உள்ளதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது குறித்து தணிக்கை நடந்து கொண்டு இருப்பதால், முழுமையான அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய அதிகாரியே கிடையாது?
இந்த நிலையில் மாதுரியினை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாதுரியை ஒரு முக்கிய அதிகாரியாகவே கருத்தில் கொள்ளவில்லை. ஆக முழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பே, இந்த பணி நீக்கமானது உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பாரத் பே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டால் மட்டுமே முழுமையாக தெரியவரும்.
தற்போது மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், விடுப்பில் சென்றுள்ள அஷ்னீர் திரும்ப வந்தால் தான் முழு பிரச்சனையும் வெளி வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக