Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 13 மே, 2018

முனிவர்களும், சீடர்களும்..!

இவரைப் போல நீங்களும் வாழ்ந்து பாருங்கள்..!
முனிவர்களும், சீடர்களும்..! 
ஒருநாள் முனிவர் ஒருவர் தம் சீடர்களுடன் நகரத்தில் உள்ள தெருக்கள் வழியாக நடந்து சென்றார். அவர் ஒரு சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். முனிவரின் சீடர்களும் அவரைத் தொடர்ந்து சென்றனர். ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்து சென்றனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து முனிவரிடம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. 
மலர்கள் என்றால் மணம் தரும் பொருட்கள், அதனால் முனிவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக்கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களும் தலைக்கு இரண்டு மூன்றாக மலரை அள்ளிக் கொண்டனர். மலர்களை அர்ப்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் சென்றது. சீடர்கள் புடை சூழ முனிவரின் உலா தொடங்கியது. பிறகு ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டிற்குள் வரவேற்றார். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். முனிவர் அதில், ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்துப் பார்த்தார். பழம் மிகவும் சுவையாக இருந்ததால், அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.
சீடர்களும் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை. செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம் வந்தது. அது நகரத்தின் ஒதுக்குப் புறமான பகுதி. அங்கு ஏழை பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டிற்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் முனிவர் ஏற்றுக்கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
அந்தப் பெண் முனிவரிடம்! ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும் என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள். அந்த தட்டில் திராட்சைப் பழங்கள் இருப்பதைப் பார்த்த முனிவர், அதில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டு சுவைத்து உண்டார். அவரை சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர். மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர். திராட்சைப் பழம் வழங்கிய ஏழை பெண்ணுக்கு நன்றி கூறி விடை பெற்றனர். 
பின்னர் வெளியே வந்ததும் சீடர்களின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய் தானே உண்டது ஏன்? என்று எல்லோருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது. அதனால், சீடர்களில் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழம்கூட தரவில்லையே? என்றார். அதற்கு முனிவர், அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றை சாப்பிட்டேன் என்றார்.
உங்களுடைய சுகத்திலும், துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்ற பழத்தை ஏன் நீங்கள் தனியாக உண்ண வேண்டும். சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா? என்று கேட்டனர். என்னுடைய சுகத்திலும், துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், அங்கு ஓர் ஏழைப் பெண் இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், இந்தப் பழம் புளிக்கிறது என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்தி விடுவீர்கள். 
அவளது மனது மிகவும் நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை என்று முனிவர் கூறினார். எவருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது என்ற நல்ல குணம் கொண்ட தங்கள் குருவை நினைத்து சீடர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.
இவரைப் போல நீங்களும் வாழ்ந்து பாருங்கள்..!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக