தமிழகம் என்னதான் பெரியார் மண் என்று அழைக்கப்பட்டாலும், ஆன்மீகமும் அதிகம் நிறைந்த இடமாகும். வட இந்தியாவைப் போல, இல்லாமல், இங்கு மக்கள் எல்லா மதத்தினரோடும் இயல்பாக பழகும் தன்மை கொண்டவர்கள். இங்கு இருக்கும் ஆன்மீகத் தலங்களும் அப்படித்தான். ஒரு சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, எல்லா மதத்தினரும் எல்லா ஆன்மீகத் தலங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த பூமி இன்னமும் அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது. நீங்கள் தமிழகத்தின் முக்கியமான ஐந்து கோயில்களுக்கு செல்ல இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
அருள்மிகு கும்பேசுவரர் ஆலயம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள அருள்மிகு கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே. இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒரு அரிசி வியாபாரியின் கனவில்வந்த அம்மனின் விருப்பத்தை ஏற்று இக்கோவில் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
நரசிம்மர் கோவில்
நாமக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள நரசிம்மர் கோவில் இந்த பகுதியிலேயே மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது. அதியமானின் வம்சத்தைச் சேர்ந்த குணசீலரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் நரசிம்மரின் உருவம் பாறைகளில் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரான நரசிம்மரைப் பார்க்க எண்ணற்ற பக்தர்கள் தினம் தினம் வந்து செல்லும் இடமாக இந்த நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. புகழ் பெற்ற வைணவ தலமாகவும், வைணவர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியாகவும் இருக்கும் நாமக்கல் நகரில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் சிவன் கோவில்கள் பார்வைக்குத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்த நரசிம்மர் கோவில் மலையின் அடிவாரத்தில், ஆஞ்சநேயருக்கு நேர் எதிரில் காட்சியளிக்கும் படி அமைந்துள்ள இந்த கோவிலைச் சுற்றி கமலாலயம் குளம் மற்றும் ஒரு அம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இங்கு கொண்டாடப்படும் நரசிம்ம சுவாமி தேர்த்திருவிழா இந்த கோவிலுக்கு பெருமை சேர்க்கும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நகர சிவன் கோயில்
நகர சிவன் கோயில், தேவகோட்டையிலுள்ள மிக அழகான கோயில்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலை, தேவகோட்டையின் செட்டியார் பிரிவைச் சேர்ந்த நாட்டுக்கொட்டைச் செட்டியார்கள் கட்டியுள்ளனர். அதனால், இது செட்டியார்களின் பாரம்பரிய கட்டுமான பாணியில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டதாகும். சிவபெருமான், ஒரு தங்கக் குதிரையில் இங்கு வந்து, தன் பக்தர்களை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாக்ஷி ஆகியோர் இங்கு வழிபடப்படும் பிற முக்கிய தெய்வங்களாவர். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள நகரத்தார்கள், இங்கு ஒன்றாகக் கூடி நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்குப் பின், ஸ்கந்தர் சஷ்டி விழா, சுமார் ஏழு நாட்களுக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்களுக்கான இவ்விழா, முழுக்க முழுக்க ஆடம்பரமாகவும், பகட்டுடனும் கொண்டாடப்படுகின்றது. இங்கு கடந்த 60 வருடங்களாக, ஒவ்வொரு வாரமும், பக்தி சிரத்தையோடு நடத்தப்பட்டு வரும் வார வழிபாடு, இக்கோயிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் ஆகும்.
நவ திருப்பதி கோயில்கள்
நவ திருப்பதி கோயில்கள் என்பவை 9 கோயில்கள். இவை விஷ்னு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும். இக்கோயில்கள் தாமிரபரணி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன. இந்த கோயில்கள் 108 திவ்ய தேசங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த 9 கோவில்களுக்கான பயணம் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து ஆழ்வார்திரு நகரில் நிறைவு பெறுகிறது. இந்த ஒன்பது கோயில்களின் பெயர்களாவன. ஸ்ரீ வைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, துளைவில்லி மங்களம், திருகுழந்தை, தென் திருப்பதி, திருக்கோலூர்-வித்தம்மானிதி மற்றும் ஆழ்வார் திரு நகரி - நம்மாழ்வார். சமீபத்தில் டிவிஎஸ் குழுமம் இக்கோயில்களின் மராமத்தி பணிகளுக்கு நிதி உதவி செய்ததின மூலம் இக்கோயில்கள் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக