திருப்பூர் : திருப்பூர், பழைய பஸ் நிலையம் முன்பு புதியதாக திறந்துள்ள மேம்பாலத்தில் ஏற்படுள்ள விரிசலுக்கு தெர்மோகோல்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரின், மையப்பகுதியான பழைய பஸ் நிலையம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கடந்த 2015ம் ஆண்டு புதிய மேம்பாலம் கட்ட ரூ.47 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இப்பாலம் வேலை முழுமையாக நிறைவடையாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் இரண்டு புறமும் வாகனங்கள் செல்ல போதுமான வழியில்லாமல், வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவசர கதியில் நேற்று பாலம் திறக்கப்பட்டது. மேலும் பாலத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த மாதம் திறப்பு விழா செய்ய வேண்டும் என்பதற்காக உடைந்த இடத்தில் தெர்மாகோல்களை வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதனால், 47 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் எப்பொழுது வேண்டுமாலும் இடிந்து விழும் சூழலில் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, பாலம் வேலைகளை விரைவில் சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளானர்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டு வந்த பாலம் துவக்கத்தில் ஒரு திட்டம் போடப்பட்டு பின்பு நாளடைவில் திட்டம் மட்டுமில்லாமல் பாலத்தையே சுருக்கினர். இதனை உணர்த்தும் வகையில் ஆசியாவிலேயே பஸ் நிலையத்திற்கு ஸ்பீடு பிரேக்கர் போட்ட அரசு தான் தமிழக அரசு என அந்த பாலத்தின் படத்தோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக