Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 மே, 2019

அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கோயம்புத்தூர் க்கான பட முடிவு    
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


மூலவர் : காரண கரிவரதராஜப் பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி பூதேவி
தல விருட்சம் : காரை மரம்
தீர்த்தம் : புஷ்கரணி
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : வேங்கடபுரம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமைகளில் மூலவருக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நன்னாளை பெரிய திருவோணம் என பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் பிரியாவிடை விண்ணப்பத் திருநாள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம் மற்றும் புரட்டாசி மாதத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் திருக்கல்யாண மகோற்சவம் ஆகியவை இத்தலத்தின் முக்கிய பெருவிழாக்கள்.

தல சிறப்பு:

இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கின்றார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம், கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்: +91 422 2626266, 9843026262

பொது தகவல்:

கோயில், கிழக்கு நோக்கி உள்ளது. நுழைவு வாயிலில் கோபுரம் இல்லாத ராஜ மண்டபம், கோஷ்டத்தில் சங்கு, சக்கரத்துடன் பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடியுடன் அமைந்துள்ளது. துவஜஸ்தம்பம் கடந்து உட்பிராகாரத்தை அடைந்தால் கருட மண்டபத்தில் மூலவருக்கு எதிராக சேவை சாதிக்கும் பெரிய திருவடியைச் சேவிக்கலாம். மகா மண்டப நுழைவாயிலின் இருபுறமும் கம்பீர தோற்றத்தில் துவார பாலகர்களான ஜெயன், விஜயனைக் காணலாம். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி தனி ஆஸ்தானமாக சேவை சாதிக்கும் உற்சவ மூர்த்தியாகிய பெருமாளையும், எதிரே கருடாழ்வாரையும் தரிசிக்கலாம். மூலவருக்கும் உற்சவருக்கும் தனித்தனி பெரிய திருவடிகள் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பு.


பிரார்த்தனை:

பல காரணங்களால் திருமணம் தடைபட்டோர், குழந்தைப்பேறு கிட்ட, உடல்நல பாதிப்புகள் தீர்வதற்கு பக்தர்கள் இத்தலத்தில் நடைபெறும் புரட்டாசி திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு, பெருமாளையும் தாயாரையும் வழிபட்டால் உடனே நிறைவேறும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை:


பொதுவாக நிலைப்படியின் மேற்புறம் தாயாரின் திருவுருவம் வடிக்கப்பட்டிருக்கும். இத் தலத்தில் உற்சவர் கொலுவிருக்கும் மண்டபத்தில் தெற்குப் பகுதியில் அமைந்த நிலைப்படியில் தாயார் மேற்குப்புறமாக ஒதுங்கி இருக்கின்றார். தாயார் சிற்பத்திற்கு மேலே, புருஷகார பூதையையும் எதிர் நோக்காமல் மிகச் சுலபமாக சேவை சாதித்தருளும் காரணராஜர் என்ற வாசகம் காணப்படுகிறது. புருஷ என்றால் ஆத்மா. அதைச் சரியான இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பவள் தாயார். பெருமாளை நேரே சென்று சேவிப்பது முறையன்று. தாயாரை முதலில் சேவித்து, அவர் சிபாரிசின் பேரில் பெருமாளை சேவிப்பது என்பது வைணவ சம்பிரதாயம். உற்சவர் வீற்றிருக்கும் சன்னதியின் தென் திருவாசல் பக்கம் அமைந்துள்ள நிலைப்படியில் தாயார் மேற்குப் பக்கமாக ஒதுங்கி இருப்பது, தாயாரின் சிபாரிசையும் எதிர்நோக்காமல் பக்தர்களுக்கு மிகச் சுலபமாக பெருமாள் அனுகிரஹம் செய்யக் காத்திருப்பதை உணர்த்துவதாகக் கூறுகிறார்கள். அர்த்த மண்டபத்தில் குறள் காவலப்பர் என்ற சின்னப்பெருமாளும், திருமங்கை ஆழ்வாரும் அருள்புரிகின்றனர். கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத காரண கரிவரத ராஜப் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். உள் பிராகாரத்தில் சக்கரத் தாழ்வாருடனான யோக நரசிம்மர் சன்னதியும், தன்வந்திரி பகவான் சன்னதியும் உள்ளன. கருவறைக்குநேர் பின்புறமுள்ள இச் சன்னதிகளுக்கு நடுவே இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கின்றார். இவ்விரு காரை மரங்களும் திருக்குடையாக அமைந்து சேவை புரிகின்றன. இவ்விரு விருட்சங்களும் பருவகாலத்தே பூத்து குலுங்குமேயன்றி காய்ப்பதில்லை. வடக்குப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் துளசி மாடம் உள்ளன. வெளிச்சுற்று பிராகார பாதையின் இருபுறமும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் மிளிர்கின்றது. எம் பெருமானுக்கும் பிற உபதெய்வங்களுக்கும் இம்மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளே சாத்தப்படுகின்றன. ஆராதனைகள் கண்களையும் மனதையும் விட்டகலாத ஒன்றாகும்.

இது ஒரு கிராமக் கோயில்தான். ஆனால் இங்கு நடைபெறும் வைபவங்கள் மற்றும் கார்யக்கிரமங்கள் அனைத்தும் ஒரு திவ்ய தேசத்திற்கு ஈடானவை. பெருமாள் திருவீதி புறப்பாட்டின்போது பாதம் தாங்கிகள் பெருமாளைத் தாங்கி நடந்து வரும் பாங்கை கதி எனக் கூறுவர். சுவாமி சன்னதி புறப்பாடு மற்றும் திருவீதி புறப்பாடு ஆகிய வைபவங்களில் பல்லக்கு, கருடவாகனம், சேஷவாகனம் ஆகிய வாகனங்களில் உலா வரும் போது நிகழ்த்தப்படும் ஸிம்மகதி, சிப்பாரித்த ஸிம்மகதி, கஜகதி, லகுகதி, தத்தித்தகதி, வேககதி, தாஸத்வகதி, ஹம்ஸகதி போன்ற மாறுபட்ட நடை அழகுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவற்றை ஒருமுறையேனும் வந்து சேவித்து அனுபவித்தால் மட்டுமே அந்த உன்னதத்தை உணரமுடியும். பாதம் தாங்கிகள் பெருமாளைத் தாங்கி ஒரே சீருடையுடன் ஒரே சீராக நடந்து வரும் அழகே தனி!

தல வரலாறு:

காரை மரங்கள் பச்சைப் பசேலென்று செழிப்புடன் விளங்கிய அடர்ந்த எழில் சூழ் சோலை அது. அதைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பசுமையான புல்வெளி. இப்பகுதியில் மேயும் மாடுகள் சற்று கூடுதலாகவே பால் கறக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் மடியில் தொடர்ந்து பால் இல்லாமல் வருவதைக் கண்ட மாடு மேய்ப்பவன், காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு நாள் காலை அப்பசுவினைப் பின் தொடர்ந்து சென்றான். புல்வெளியில் வயிறார மேய்ந்த பிறகு, அப்பசு காரை மரங்கள் அடர்ந்த சோலையுள் சென்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று தானாகவே பாலைச் சொரிந்தது. இச்செயலைக்கண்டு வியப்புற்றவன், பசு அவ்விடத்தை விட்டு அகன்றதும் அங்கு சென்று அடந்த புதரை நீக்கிப் பார்த்தபோது, சிறிய லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றியிருந்த பெருமாளை கண்டார். மகிழ்ச்சிப் பெருக்கோடு தொழுதார். ஊர் மக்களையெல்லாம் அழைத்து வந்து காட்டினார். அவ்விடத்தை அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தத் தொடங்கினார். காரை வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய பெருமாள் என்பதால் காரை வனப் பெருமாள் என அழைக்கப்பட்டார். பின்னாளில் மருவி காரண கரிவரதராஜப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். சிலாரூப ஸ்ரீதேவி-பூதேவி சமேத காரண கரிவரதராஜப் பெருமாள் தனிச்சன்னதியில் அருள்பாலித்தாலும், சுயம்புவான பெருமாளை அடர்ந்த இரு காரை மரத்தடியில், பசுவின் சிலை அருகே அதே நிலையில் சேவிக்கலாம். இப்பெருமாள் குடிகொண்டுள்ள ஊர், வேங்கடபுரம் (வேம்-பாவங்கள், கட-அழித்தல். பாவங்களை அழிக்கக்கூடிய ஊர்) பின்னாளில் திரிந்து வெங்கிட்டாபுரம் என ஆகிவிட்டது.



சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கின்றார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!