இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அனைவருக்கும்
எனது அன்பு வணக்கங்கள்...!
நமது கடந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்த ஒரு அமானுஷ்ய மனிதரைப் பற்றி இப்பதிவில் காண்போம். அம்மனிதர், தென்னமெரிக்காவிலுள்ள பிரேசிலில் அமைந்துள்ள காங்கோனாய் டு காம்போ / காங்கோன்ஹாஸ் (Congonhas) எனும் சிற்றூரில் அன்டோனியோ டி ஃபிரைடாஸுக்கு (Antonio de Freitas) எட்டு குழந்தைகளில் ஒருவராக 1918-ல் அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த, "ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ்" (José Pedro de Freitas). ஜோஸுடன் பிறந்த ஏழு பேரும் வழக்கறிஞர், பேராசிரியர், பாதிரியார் என சமுதாயத்தில் பிறர் மதிக்கும் பதவிகளிலும், பலவாறான பணிகளிலும் இருந்தனர். ஆனால், ஜோஸுக்கு படிப்பில் பிடிப்பில்லாததால் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர் வயல் வேலைக்குச் சென்றார். அதன்பின் அவ்வூருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த இரும்புச் சுரங்கத்தில், படிக்காத சிறுவர்களோடு சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். ஜோஸ் பார்ப்பதற்கு சற்று குண்டாகவும், பலசாலியாகவும் தோற்றமளித்ததால் 'பூசணிக்காய்' எனப் பொருள் படுமாறு "அரிகோ" (Arigo) என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில் ஜோஸுமே தனது உண்மையான பெயரை மறக்குமளவிற்கு, 'அரிகோ' என்கிற பெயரே நிலைத்தது. (பட்டப்பேரு-னு வச்சாலே அப்டித்தானே...) அரிகோ பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் அவரது மனக்கண்ணில் தோன்றியது. (சத்தியமா, அது பறக்கும் தட்டு இல்ல மக்களே..!) அத்துடன் அவருக்குப் புரியாத மொழியில் ஒரு அசிரீரியும் கேட்டது. இவ்விஷயத்தை தனது நண்பர்களிடம் பலமுறை அரிகோ வியப்புடன் கூறியதுண்டு. இவ்வாறான சம்பவங்கள் அவரது வாழ்வில் அவ்வப்போது நடந்தேறின. சிலநாட்கள் அவை அரிகோவின் மனதில் நிழலாடும், பின்னர் மறந்து போகும். அச்சமயம் சுரங்கத்தொழிற்சங்கத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றிருந்த அரிகோ, 1943-ம் ஆண்டு "அர்லடே அண்ட்ரோ" (Ar-lade And-roe) என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இந்நிலையில் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு போராட்டம் காரணமாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஒரு உணவகத்துடன் கூடிய விடுதியைத் துவங்கினார். பிரேசிலின் அலயாடினோ சிற்பங்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள், அவ்விடுதியில் தங்க ஆரம்பித்தனர். வியாபாரம் ஓரளவிற்கு பரவாயில்லை என சொல்லுமளவிற்கு சென்றது. அக்காலகட்டத்தில் கனவுத்தொல்லை மீண்டும் பாடாய்ப்படுத்தியது. அந்த புரியாத பாஷை, ஜெர்மன் மொழி என்பதைக் கண்டறிந்தார்; ஆனால், அது என்ன சொல்கிறது என்பது மட்டும் விளங்கவே இல்லை.
நமது கடந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்த ஒரு அமானுஷ்ய மனிதரைப் பற்றி இப்பதிவில் காண்போம். அம்மனிதர், தென்னமெரிக்காவிலுள்ள பிரேசிலில் அமைந்துள்ள காங்கோனாய் டு காம்போ / காங்கோன்ஹாஸ் (Congonhas) எனும் சிற்றூரில் அன்டோனியோ டி ஃபிரைடாஸுக்கு (Antonio de Freitas) எட்டு குழந்தைகளில் ஒருவராக 1918-ல் அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த, "ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ்" (José Pedro de Freitas). ஜோஸுடன் பிறந்த ஏழு பேரும் வழக்கறிஞர், பேராசிரியர், பாதிரியார் என சமுதாயத்தில் பிறர் மதிக்கும் பதவிகளிலும், பலவாறான பணிகளிலும் இருந்தனர். ஆனால், ஜோஸுக்கு படிப்பில் பிடிப்பில்லாததால் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர் வயல் வேலைக்குச் சென்றார். அதன்பின் அவ்வூருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த இரும்புச் சுரங்கத்தில், படிக்காத சிறுவர்களோடு சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். ஜோஸ் பார்ப்பதற்கு சற்று குண்டாகவும், பலசாலியாகவும் தோற்றமளித்ததால் 'பூசணிக்காய்' எனப் பொருள் படுமாறு "அரிகோ" (Arigo) என செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில் ஜோஸுமே தனது உண்மையான பெயரை மறக்குமளவிற்கு, 'அரிகோ' என்கிற பெயரே நிலைத்தது. (பட்டப்பேரு-னு வச்சாலே அப்டித்தானே...) அரிகோ பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் அவரது மனக்கண்ணில் தோன்றியது. (சத்தியமா, அது பறக்கும் தட்டு இல்ல மக்களே..!) அத்துடன் அவருக்குப் புரியாத மொழியில் ஒரு அசிரீரியும் கேட்டது. இவ்விஷயத்தை தனது நண்பர்களிடம் பலமுறை அரிகோ வியப்புடன் கூறியதுண்டு. இவ்வாறான சம்பவங்கள் அவரது வாழ்வில் அவ்வப்போது நடந்தேறின. சிலநாட்கள் அவை அரிகோவின் மனதில் நிழலாடும், பின்னர் மறந்து போகும். அச்சமயம் சுரங்கத்தொழிற்சங்கத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றிருந்த அரிகோ, 1943-ம் ஆண்டு "அர்லடே அண்ட்ரோ" (Ar-lade And-roe) என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இந்நிலையில் சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு போராட்டம் காரணமாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஒரு உணவகத்துடன் கூடிய விடுதியைத் துவங்கினார். பிரேசிலின் அலயாடினோ சிற்பங்களைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள், அவ்விடுதியில் தங்க ஆரம்பித்தனர். வியாபாரம் ஓரளவிற்கு பரவாயில்லை என சொல்லுமளவிற்கு சென்றது. அக்காலகட்டத்தில் கனவுத்தொல்லை மீண்டும் பாடாய்ப்படுத்தியது. அந்த புரியாத பாஷை, ஜெர்மன் மொழி என்பதைக் கண்டறிந்தார்; ஆனால், அது என்ன சொல்கிறது என்பது மட்டும் விளங்கவே இல்லை.
| ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ் என்கிற அரிகோ |
இவ்வாறான தொடர்க் கனவுத்துரத்தல்,
அரிகோவிற்கு தலைவலியை உண்டாக்கியது. அதிலிருந்து தப்புவதற்கு, இரவில் தூங்காமல்
விழித்திருக்கத் தொடங்கினார், மனைவிக்குத் தெரியாமல். அவர் மனைவி பார்க்கும்போது
கண்களை மூடி பாவனை செய்பவர், மனைவி தூங்கிய பின்னர் எழுந்து தெருவில் நடக்கத்
தொடங்கினார். அது தலைவலியை மேலும் தீவிரப்படுத்தியது. ஒரு நாள் படுக்கையில்
அமர்ந்து நள்ளிரவில் குலுங்கிக் குலுங்கி அழுவதைக் கவனித்த அரிகோவின் மனைவி
அர்லடே, விவரங்களனைத்தையும் கேட்டறிந்தார்; ஆறுதல் கூறினார். (வேற என்ன பண்ண முடியும்..!) ஆனால்,
அன்று அவர் கண்ட கனவானது, கனவு என்று அவர் நம்ப முடியாத அளவிற்குத் தத்ரூபமாக
இருந்தது. அதில், அரிகோ ஒரு மருத்துவமனையின் அறுவைசிகிச்சைக்கான அறையினுள்
நுழைகிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கான மேடையில் ஒருவர் படுத்துக்கிடக்க, அவரைச்
சுற்றிலும் வெள்ளை உடை தரித்த மருத்துவர்களும் செவிலியர்களும் பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருக்க, அவர்களுள் சற்றுக் கொழு கொழுவென வழுக்கைத்தலையுடன் புரியாத
ஏதோ ஒரு மொழியில் மற்ற மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த, தலைமை
மருத்துவரையொத்த ஒரு மருத்துவரின் குரலானது, அரிகோ தன் கனவில் வழக்கமாகக் கேட்கும்
அசிரீரியின் குரல் போன்றே இருந்தது; அத்தோடு அவர் பேசிய புரியாத மொழியும்.
அப்படியானால், இத்தனை நாட்கள் அரிகோவை படுத்தியெடுத்த 'கனவு நாயகன்', அந்த
மருத்துவர் தானா? 'ஆம்' எனில், அவர் யார்? ஏன் அரிகோவைத் துரத்த வேண்டும்? அதற்கான
பதிலும் அரிகோவிற்கு சில நாட்கள் கழித்து வந்த கனவில் கிடைத்தது.
![]() |
| அரிகோ கனவில் கண்ட காட்சியின் கற்பனை ஓவியம் |
அன்றொரு நாள் கனவில் வந்த அதே மருத்துவர், தனது பெயர் "அடால்ஃபோ
ஃபிரிட்ஸ்" (Adolfo Fritz) என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் தான்
முதல் உலகப்போரின்போது பணியாற்றிய ஜெர்மானிய அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும்,
அப்போரில் தான் அகால மரணமடைந்ததால், தனது மருத்துவ சேவையை தொடரமுடியாமல்
போனதாகவும், தான் அரிகோவின் நல்ல உள்ளத்தையும், பிறருக்கு உதவும் பரந்த
மனப்பான்மையையும் பல வருடங்களாகக் கவனித்து வருவதாகவும், தனது மருத்துவ சேவையை
மேலும் தொடர அரிகோவின் உடலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். (என்னப்பா இப்டி கெளம்பிட்டீங்க..?!) இதற்கு
முன்னர் இன்னொருவரின் உடலை, தான் பயன்படுத்தியதாகவும், ஆனால், அவர் அதைத் தனது
சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அதன்பின்
வேறொருவரைத் தேடி அலைந்தபோது அரிகோவைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். (பிரமாதம்-ல...!) இவ்வாறு
ஃபிரிட்ஸ், அரிகோவின் கனவில் இவ்விவரங்களைத் தெரிவிப்பதற்கு முன்னர், அரிகோ தனது
நண்பர்களிடம் யோசனை கேட்டிருந்தார். அவர்கள், 'இது ஏதோ ஆவிகளின் செயல்பாடு போல்
இருக்கிறது, பேயோட்டும் ஆலிவராவைப் (Olivera) போய்ப்
பார்' என அறிவுறுத்த, அங்கே சென்று ஆலிவராவிடம் விஷயத்தைக்கூறினார்.
கண்களைத்திறக்காமலேயே, 'அது ஒரு மருத்துவரின் ஆவி. அது உன் உடலில் புக
முயற்சிக்கிறது. அதற்கு நீ உடன்படும் வரை, அது உன்னைப் படுத்தியெடுக்கும்.' என
முடித்தார் ஆலிவரா. உள்ளூர உதறல் இருந்தாலும் அதுநாள்வரையிலான குழப்பத்தின் தீர்வு
ஒருவழியாகக் கிடைத்திருந்தது. காரணம், அதற்கு முன் அவர் சந்தித்த பாதிரியார்களோ,
"கர்த்தர் உனக்குத்துணையிருப்பார், கலங்காதே" என்றே சொல்லி
அனுப்பினர். சமீபத்தியக் கனவு, ஆலிவராவின் சொல்லை மெய்ப்பித்தது. அரிகோவிற்கு
மனதுள் பயம் இருந்தாலும், மக்களுக்கு நன்மை பயக்கும் சேவை என்பதால், சற்று
யோசித்தார்; குறிப்பாக நிராகரிக்க மனம் வரவில்லை. அதுகுறித்து அரிகோ திடமான முடிவு
எடுக்கும் முன் ஃபிரிட்ஸ் முந்திக்கொண்டார்.
அவ்வூரில் கால் ஊனமான ஒருவன், கைத்தடி உதவியுடன் நடந்து வருவான். இது
அவ்வூரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு ஒருநாள் அவன் நடந்து வருவதை
பார்த்த அரிகோ, அவர் உடலில் ஏதோ ஒருவித மர்மமான மாற்றத்தை உணர்ந்தவராய் நேரே அவனை
நோக்கி நடந்தார். அவனது கைப்பிடியைப் பிடுங்கித் தூரமாக எறிந்தார். "இதுநாள்வரை
நீ விந்தி விந்தி நடந்தது போதும், எல்லோரையும் போல சாதாரணமாக நட" என்றார்,
சற்று மூர்க்கமான குரலில். ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித பயத்துடன், எதிர்த்துப்
பேசக்கூட நா எழாதவனாய் நடக்க ஆரம்பித்தான். ஆச்சர்யம்! அவனது நடை எல்லோரையும் போல
சாதாரணமாக மாறியிருந்தது. அரிகோவே இதைக்கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனார். இங்கு
அரிகோவே ஆச்சரியப்படக் காரணம், இதை அவராகவே செய்யவில்லை என்பதால். இதுவே அரிகோவைப்
பயன்படுத்தி, ஃபிரிட்ஸ் நிகழ்த்திய முதல் அதிசயம் அல்லது அமானுஷ்யம். இதன்பின் ஊர்
முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட அரிகோவை மேலும் புகழடைய வைத்தது ஒரு சம்பவம்.
அவரது உறவுக்காரப் பெண்ணொருவர், கர்ப்பப்பைப் புற்றுநோயினால்
பாதிக்கப்பட்டு, மரணத்தருவாயிலிருந்தார். உறவினர்கள் அவரது வீட்டிற்குச் சென்று
ஆறுதல் சொல்வதும் வருவதுமாய் இருந்தனர்; அவர்களைப்போலவே அரிகோவும் தன் மனைவியுடன்
சென்றார். அங்கே ஒரு பாதிரியார் அப்பெண்ணுக்கான இறுதிநேர சடங்குகளில்
ஈடுபட்டிருக்க, சுற்றிலும் சிலர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன்
ஜெபித்துக்கொண்டிருந்த அரிகோவிற்கு உடலில் ஏதோ ஓர் மாற்றம். ஒரு அதிசய
உணர்வலைகளால் தாக்கப்பட்டவராய், சட்டென எழுந்து அவ்வீட்டின் சமையலறையினுள் நுழைந்த
அரிகோ, கையில் சமையலறையிலிருந்த சிறு கத்தியுடன் வெளியில் வந்து அப்பெண்ணை
நெருங்கினார். சுற்றியிருந்தவர்கள் ஒரு மிரட்சியுடன் அரிகோவை நோக்க, அப்பெண்ணின்
துணியை விலக்கி, பிறப்புறுப்பில் கத்தியை நுழைத்தார்; கத்தி உள்ளே நுழைய ஏதுவாக சுற்றியிருந்த
சதைப்பகுதிகளை வெட்டி நீக்கி பாதைகளை அகலப்படுத்தியவாறு கைகளை
முன்னேற்றிக்கொண்டிருந்தார். அரிகோவின் இம்முரட்டுத்தனமான செய்கையைப் பார்த்த
சுற்றியிருந்தவர்கள் கதிகலங்கிப் போயினர்; சிலர் பரபரப்பாகக் கத்தத் தொடங்கினர்;
ஒரு பெண் இதைக் காண சகிக்காமல் அழுது அரற்றியவாறு தெருவிற்கு ஓடினார். ஆனால்,
அரிகோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை, தனது செயலில் மும்முரமாக இருந்தார். சில
நொடிகளில் கத்தியை வெளியே எடுத்து, கைகளை உள்ளே விட்டு முரட்டுத்தனமாக ஏதோ
துழாவினார். உள்ளிருந்து ரத்தம் சொட்ட சொட்ட (புற்றுநோய்க்) கட்டி ஒன்றை எடுத்து
சமையலறை சாக்கடையில் கொண்டுபோய்ப் போட்டார். பின்னர் அங்கிருந்த நாற்காலியில்
சோர்ந்து போய், தன்னிலை இழந்தவராய் அமர்ந்தார். இத்தனைக்கும் அப்பெண்மணி அழவோ,
முகம் சுழிக்கவோ இல்லை; சுயநினைவுடன் இருந்தார் என்பது சுற்றியிருந்தவர்களுக்கு
ஆச்சர்யமாக இருந்தது. மேலும், கட்டியை எடுத்தபோது சிறிதாக வந்த ரத்தத்தைத் தவிர
வேறு ரத்தக்கசிவும் வரவில்லை. இவை அனைத்தும் சில வினாடிகளில் முடிந்து விட்டது.
கூட்டத்திலிருந்த உறவுக்காரப் பையன் ஒருவன் பயந்து போய் மருத்துவர் ஒருவரை அழைத்து
வந்தான். அப்பெண்ணின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், அப்பெண்ணிற்கு இப்போது
பிரச்சனை ஏதும் இல்லை என்றும், வழக்கமான சினிமா மருத்துவரைப் போல, 'தனது
அனுபவத்தில் இப்படி ஒரு அதிசயத்தைக் கண்டதில்லை' என்றும் கூறினார். காரணம்
அவ்வாறான கட்டியை அறுவைசிகிச்சை மூலமாக மட்டுமே எடுக்க முடியும், அரிகோ செய்ததைப்போல
செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அரிகோ அப்போதும் சுயநினைவிற்குத் திரும்பவில்லை.
அருகில் அவரது மனைவி அர்லடே தேம்பிக்கொண்டிருந்தார். சமையலறை சாக்கடைக்குச்
சென்று அங்கு கிடந்த புற்றுநோய்க் கட்டியை ஒரு காகிதத்தில் சுற்றி
எடுத்துக்கொண்டார், பரிசோதனைக்காக. சில தினங்களில் அப்பெண்ணும் பூரண குணமடைந்து
விட்டார், அரிகோவின் புகழும் பரவத்தொடங்கியது.
அச்சம்பவத்தின் மறுநாள், காலை வீட்டு வாசலைத்திறந்தபோது அரிகோவின் வீட்டு
முன் நீ...ண்...ட வரிசை. (ஒரு படத்துல, கவுண்டமணி
சார் வீட்டு முன்னாடி பேர் வைக்க சொல்லி ஒரு வரிசை நிக்குமே, அந்த மாதிரி..!)
விவரத்தைக் கேட்டார் அரிகோ. "எங்கள் நோயை நீங்கள்தான்
குணப்படுத்தவேண்டும்" என்றனர் ஒருமித்த குரலில். அதன்பின் நடந்த எதுவும்
அரிகோவிற்குத் தெரியாது. முழுவதுமாக ஃபிரிட்சின் கட்டுப்பாட்டில் வந்திருந்தார்
அரிகோ. ஒவ்வொருவரையும் வரிசையாக வரச் சொன்னார். யாரிடமும் என்ன நோய் என்பது
குறித்து விசாரிக்கவே இல்லை. சமையலறைக் கத்தியையும். கத்தரிக்கோலையும் வைத்து
ஓரிரு வினாடிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அனாவசிய ரத்தப்
போக்குகள் இல்லை, கத்தி நோயாளிகளின் உடலைத் துளைக்கும்போது அவர்களுக்கு வலிக்கவும்
இல்லை, அறுவை சிகிச்சை செய்த கத்திகளை அவர் வெந்நீரில் சுத்தம் செய்யவும் இல்லை.
ஆனால் நோய் மட்டும் அனைவருக்கும் குணமாகிக் கொண்டிருந்தது. மின்னல் வேகத்தில்
மருந்துகளை சீட்டில் எழுதிக்கொடுத்த அரிகோ, தன் வாழ்நாளில் ஒருவரிடமும் மருத்துவத்திற்காக
பணம் வாங்கியதில்லை. (பொருளாகவும் வாங்கியதில்லை.) இவ்வாறான இவரது இலவச,
வலியில்லா, உடனடி மருத்துவம் அவ்வூரின் பிற மருத்துவர்களிடத்தில் எரிச்சலை
வரவழைத்தது.
![]() |
| அறுவை சிகிச்சை செய்யும் அரிகோ |
அச்சமயம் இவரால் நிகழ்ந்த ஒரு
அற்புதம், ஊரளவில் புகழ் பெற்றிருந்த அரிகோவை, நாடு முழுவதும் பிரபலமாக்கியது.
சுமார் 5 ஆண்டுகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த பிரேசில், 1950-ம்
ஆண்டில் ஜனநாயக முறைக்குத் திரும்பியிருந்தது. தேர்தல் காய்ச்சல் பரவியிருந்த
சமயத்தில், பிரேசிலின் நாடாளுமன்ற உறுப்பினரான லூசியோ
பிட்டன் கோர்ட் (Lucio Bitten Court) , மீண்டும் நாடாளுமன்றத்
தேர்தலில் போட்டியிட ஆயத்தமாயிருந்தார். அதேசமயம், நாட்டின் அதிபர் பதவிக்கு ஜெடுலியோ வர்காஸ் (Getulio Vargas) என்பவரும் போட்டியிட்டார். இருவரும் ஒரே அணிக்காக. எனவே,
இருவரது சார்பிலும் தேர்தலின் பொருட்டு வாக்கு சேகரிக்க ஒவ்வொரு ஊராக சென்றபோது,
அரிகோவின் ஊரையும் அடைந்தார். அவ்வூரில் சுரங்கத் தொழிலாளர்கள் அதிகமென்பதால்,
தொழிற்சங்கத் தலைவரின் ஆதரவு அரசியலில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத்தரும் என்கிற
அரசியல் யுக்தியோடு அரிகோவைப் பார்க்கச் சென்றார். அத்தோடு அரிகோவின்
புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரையும் நேரில் சென்று சந்தித்து, ஆதரவு
வேண்டினார். அரிகோவும் அதற்கு சம்மதிக்க, பக்கத்து நகரமான ஹாரிசாண்டேவில் (Horizonte)
பெரிய பேரணி நடத்த ஏற்பாடானது. அரிகோவும், அப்பேரணியில் பங்கேற்க
பெரும் தொழிலாளர் படையுடன் அந்நகரை அடைந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அப்பேரணி
மறுநாள் நடத்தப்படுமெனத் தீர்மானிக்கப் பட்டதால், அந்நகரின் அபோன்சா பெனா (Afonso Pena) எனும்
தெருவிலிருந்த பலமாடிகள் கொண்ட விடுதி ஒன்றின், ஐந்தாவது மாடியில் பிட்டன்
கோர்ட்டுக்கும், அரிகோவிற்கும் அறை ஒதுக்கப்பட்டது. அவ்விடுதியில் மின்னுயர்த்தி
(Lift) வசதிகள் இருந்தன. அரிகோவிற்கு மின்னுயர்த்திகள் என்றாலே ஒருவித
ஒவ்வாமை. ("தி டாவின்சி கோட்" படத்தில், அப்படத்தின் கதாநாயகனான ராபர்ட்
லேங்க்டனுக்கு ஏற்படும் ஏறத்தாழ அதே வகையான உணர்வு. இதுவும் ஒருவகை 'க்ளஸ்ட்ரோஃபோபியா'வா (Claustrophobia*) எனத்
தெரியவில்லை.) எனவே அரிகோ தரைத்தளத்திலேயே அறையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
பிட்டன் கோர்ட் தனது அறையில் அலைச்சலின் விளைவாய் கண்ணயர்ந்தார்.
தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்,
பிட்டன் கோர்ட், தனது சொந்த ஊரான ரியோ-டி-ஜெனிரோ-வில்
(Rio de Janeiro) தனது
குடும்ப மருத்துவரை அணுகி, முழு உடல் பரிசோதனை செய்ததில், நுரையீரல் புற்றுநோய்
இருப்பதாக அறிந்தார். இருப்பினும், தேர்தல் சமயத்தில் வைத்தியத்திற்கு நேரம்
ஒதுக்கினால் வெற்றி கைநழுவிவிடுமென உணர்ந்த பிட்டன் கோர்ட், 'இவ்வலட்சியம்
உயிருக்கே ஆபத்தாக முடியலாம்' என்ற மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி பிரச்சாரத்தில்
ஈடுபட்டிருந்தார். இருப்பினும், இதுகுறித்து அரிகோவிடம், பிட்டன் கோர்ட் மூச்சு
விடவில்லை; தேர்தல் வேலைகளிலேயே மும்முரமாயிருந்தார். (அப்புறம்
அரிகோ, அவர்பாட்டுக்கு கத்திய விட்டு கிண்டிட்டார்னா...! தேர்தல் நேரம் வேற...) அவ்வாறு
அலைந்த களைப்பினில், படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிட்டார்.
திடீரென பிட்டன் கோர்ட்டின் அறைக்கதவை யாரோ திறந்து, மின்விளக்குகளைப் போடுவதுபோல்
இருந்தது. அரைத்தூக்கத்தில் மெல்ல கண் விழித்தார் பிட்டன் கோர்ட், அங்கே அரிகோ
கையில் சவரக்கத்தியுடன் அவரை நெருங்குவது தெரிந்தது. இருந்தாலும், தூக்கக் கலக்கம்
அவரை முழுதாகக் கண்விழிக்க முடியாமல் செய்தது; பிட்டன் கோர்ட்டும் அதைக் கனவு
என்றே நம்பினார். "பிட்டன் கோர்ட், உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை
செய்யும் நேரம் வந்துவிட்டது" என கரடுமுரடான, அதிகாரம் மிக்க
ஜெர்மானிய தொனியில் பேச, பிட்டன் கோர்ட்டுக்குக் கலக்கமாக இருந்தாலும், அதெல்லாம்
கனவு என்றே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார். இருப்பினும், அரிகோவின் கண்களில்
பிட்டன் கோர்ட் கண்ட பளபளப்பும், தீவிரமும் பிட்டன் கோர்ட்டை சிந்திக்க வைத்தது. 'அரிகோ
நம் அறைக்கு ஏன் வந்தார், அதுவும் இந்நேரத்தில், நம் அனுமதியின்றி?' என
பலவாறாகக் குழம்ப, மயக்கமுற்றார் பிட்டன் கோர்ட். விடிந்தது. கண்விழித்த பிட்டன்
கோர்ட் தன் அறையில் மின்விளக்குகள் எரிவதைக் கண்டார். இரவில் அவற்றை
அணைத்துவிட்டுப் படுத்தது நன்கு நினைவிருந்தது. அரிகோ கனவு நினைவில் வர, கண்ணாடியின்
முன்னால் சென்று சட்டையைக் கழற்றினார். அதில் சிறிதாக ரத்தக்கறை படிந்திருந்ததைக்
கண்டு திடுக்கிட்டார். (ஆஹா... நம்பி
படுத்தேனே... நெனச்ச மாதிரியே உள்ள கத்திய விட்டு கிண்டிட்டனே...!) மேலும்
நன்றாகப் பார்த்தபோது அவரின் விலாவைச் சுற்றிலும் கிழிக்கப்பட்டிருப்பதும்,
அதிலிருந்து கசிந்த ரத்தம் காய்ந்திருப்பதும் தெரிந்தது. (இது அவனேதான் பா... எங்க அவன்..?!) வேறு சட்டையை
மாட்டிக்கொண்டு தரைத்தளத்தை அடைந்து அரிகோவின் அறைக்கதவைத் தட்டினார். ஒன்றுமே
தெரியாதவராய் கதவைத் திறந்த அரிகோவிடம், நடந்ததை விவரிக்க, சத்தியம் செய்யாத
குறையாக மறுத்தார் அரிகோ. பொறுமையிழந்த பிட்டன்கோர்ட் நம்பிக்கையற்றவராய்
விமானத்தில் தனது குடும்ப மருத்துவரை சந்திக்க ரியோவிற்குப் பறந்தார். (உள்ளுக்குள்ள என்னென்ன கேபிள கட் பண்ணிருக்கான்னு
தெரியலியே..!) அவர் சென்றதும் அரிகோ தனது பெட்டியிலிருந்த சவரக்
கத்தியை எடுத்துப் பார்த்தார்; அதில் ரத்தக்கறை எதுவும் இல்லை. பின்னர் ஏன்
பிட்டன் கோர்ட் அவ்வாறு கூறினார் என விடைதெரியாதவராய் தனது வீட்டிற்குத்
திரும்பினார். வீட்டிற்கு வந்தபின்பும் பிட்டன் கோர்ட்டின் பயம் அரிகோவின் மனதில்
எதிரொலித்தது. 'அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு தன்னால் ஏதும்
ஏடாகூடமாகிவிட்டால்?' உடம்பு உதறல் எடுத்தது.
அங்கே, பிட்டன் கோர்ட்டின் எக்ஸ்ரே (X-Ray) முடிவுகளைப் பார்த்த மருத்துவர் அசந்து போனார். அதுவரை
பிரேசிலில் அறிமுகப்படுத்தப்படாத ஒரு புதிய முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு பிட்டன் கோர்ட்டின் நுரையீரல் புற்றுநோயும் முற்றிலும் நீங்கியிருந்தது;
இனி பிட்டன் கோர்ட் நீடூழி வாழலாம். சந்தோஷத்தின் உச்சத்தைத் தொட்ட பிட்டன்
கோர்ட், முதல் வேலையாக அரிகோவிற்கு நடந்தவற்றை தந்தி அனுப்பினார். பின் அரிகோவின்
இச்சாதனையை பத்திரிக்கைகளிலும், தான் செல்லும் இடங்களனைத்திலும் புகழ்ந்து தள்ளி
அரிகோவை அண்டை நாடுவரை பிரபலமாக்கினார். விளைவு, வெளிநாட்டிலிருந்தும் நோயாளிகள்
அரிகோவின் வீட்டை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். தினமும் குறைந்தது நூறு
நோயாளிகளையாவது அரிகோ கையாளவேண்டியிருந்தது.
வழக்கமான அதே வேகமான சேவைகள். யாரிடமும் என்ன நோய் என்று கேட்பதில்லை, அறுவை
சிகிச்சைக்கு உட்படும் யாரும் வலியை உணர்வதில்லை, அதிக ரத்தப்போக்கு இல்லை. ஆனால்
இது அனைத்தையும் தாண்டிய ஒரு விந்தை என்னவெனில், அவர் செய்யும் சிகிச்சைக்கும்,
எழுதித்தரும் மருந்திற்கும் சம்பந்தமே இருக்காது. உதாரணத்திற்கு, கண்ணில் அறுவை
சிகிச்சை செய்யப்பட்டவருக்கு, பி-காம்ப்ளக்ஸ்
(B-Complex) மாத்திரைகளை எழுதிக்
கொடுப்பார்; சிலருக்கு அரதப் பழைய மருந்துகளை எழுதித் தருவார். இதன் காரணமாகவே,
சில மருந்துகளை பிரத்தியேகமாக இறக்குமதி செய்து விற்பனை செய்தனர், மருந்துக்
கடைக்காரர்கள். அவர் எழுதித்தந்த பெரும்பாலான மாத்திரைகள் ஜெர்மெனியில் தயாரானவை
என பின்னாளில் அறியப்பட்டது.
ஒருநாள் 'ஜோஸ் நிலோ டி அலிவைரோ' (Jose Nilo De
Aliviro) என்றழைக்கப்படும், 48 வயதான அரசாங்க எழுத்தர், தனது இடது
கண்ணில் கண்புரை போன்ற ஒருவித படலம் உருவாவதால், கண் பார்வை மங்குவதை அறிந்து
மருத்துவர்களை நாடினார். அவர்களோ அது நன்கு பழுத்த பின்னர் மட்டுமே அறுவை சிகிச்சை
செய்ய இயலும் எனக் கூறிவிட்டனர். அப்போது அரிகோவைப் பற்றிக் கேட்டறிந்த அலிவைரோ,
அவரைப் பார்க்க ஆவல் கொண்டாலும் அவரது சிகிச்சைமுறைகள் கிறிஸ்தவ சபைக்கு எதிரானதாக
உள்ளதாக பாதிரியார்கள் பலர் பகிரங்கமாக அரிகோவைப் பற்றி குற்றம் சாட்டுவதால்,
சற்றுத் தயங்கினார். இந்நிலையில், அரிகோவிடம் சில திருச்சபைப் பாதிரியார்களும் கூட
ரகசியமாக வைத்தியம் செய்துகொள்வதை அறிந்த அலிவைரோ (அடங்கோ...!), தைரியமாக அரிகோவைச் சந்தித்தார். அரிகோவைப் போன்றே,
அலிவைரோவிற்கும் பட்டப்பெயர் இருந்தது. அது 'கருப்பன்' எனப் பொருள்படும்,
"அல்டிமீரோ" (ஆனால், இவர் கறுப்பினத்தவர் இல்லை!).
மறுநாள் காலை மைல் நீள வரிசையில் வாலைப்பிடித்து நின்றவராய் மெல்ல மெல்ல
முன்னேறிக்கொண்டிருந்தார். அதுவரை அரிகோவைப் பற்றி வாய்வழியாய்க்
கேள்விப்பட்டிருந்தவர், இன்று அவரது அதிவேக செயல்களை நேரில் கண்டு
ஆச்சர்யமுற்றார். இவரது முறை வந்தது, பயில்வான் போல அமர்ந்திருந்த அரிகோவின் கை
அருகே அழைக்க, பரீட்சைப் பேப்பரை வாங்க ஆசிரியரை நெருங்கும் மாணவனைப் போல
நடுக்கத்துடன் நெருங்கினார் அல்டிமீரோ. முரட்டுத்தனமாய்ப் பிடித்து இழுத்து,
சுவற்றில் சாய வைத்து சமையலறைக் கத்தியை அல்டிமீரோவின் இடது கண்ணில் விட்டார்.
சுருக்கென குண்டூசி குத்தியதைப்போல மெலிதான வலி, ஏனோ அப்போது அல்டிமீரோ பயப்படவும்
இல்லை. அடுத்த நொடி, அரிகோவின் கையில் ஜவ்வு போன்ற ஒரு திரவம் இருந்தது.
அவ்வளவுதான், "நீங்கள் போகலாம். கடவுள் உங்களுக்கு வழிக்காட்டுவார்" என
அடுத்த நோயாளியை அருகில் அழைத்தார் அரிகோ. அல்டிமீரோவிற்கு சொல்லவியலா ஆச்சர்யம்.
அந்த ஜவ்வுப்படலம் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை; கண்ணாடி அணியத் தேவை
இல்லை; அறுவை சிகிச்சை இல்லை; வலி இல்லை; கட்டணமும் இல்லை.
![]() |
| சிகிச்சை பெறும் அல்டிமீரோ |
இதன்பின் அரிகோ மீது முழுமையான நம்பிக்கை கொண்ட அல்டிமீரோ, மருத்துவர்களால்
குணப்படுத்த இயலாது என கைவிரிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் புற்றுநோய்க்
கட்டியுடன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்த தனது மாமாவை அரிகோவிடம் அழைத்துவந்தார்.
வழக்கம்போல, வயிற்றைக் கிழித்து கட்டியை அகற்றும்போது, வழக்கத்திற்கு மாறான
ரத்தப்போக்கு ஏற்பட, அதிர்ந்துபோனார் அல்டிமீரோ. ஆனால் அரிகோ, மேற்கூரையை
நோக்கியவாறு, "ரத்தம் வரக்கூடாது என ஏசு சொல்கிறார்" என
உரக்கக் கத்த, ரத்தம் வருவது நின்றது. பின், "டாக்டர்.ஃபிரிட்ஸ், தயவு
செய்து அவரது வயிற்றை மூடிவிடுங்கள்" என அரிகோ கூற, அரிகோவினுள்
இருந்த ஃபிரிட்ஸ் தலையசைத்தவாரே பஞ்சால் கிழித்த இடத்தைத் துடைக்க அவை
ஒட்டிக்கொண்டன. தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் அரிகோவை விநோதமாகப் பார்த்துக்
கொண்டிருந்தார் அல்டிமீரோ (என்னடா நடக்குது இந்த
நாட்டுல..?!). பின் அரிகோவை நேரில்
சந்தித்து, தானும் அவரோடு இணைந்து, அவரது உதவியாளராக மக்களுக்கு (சம்பளம்
வாங்காமல்) சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவிக்க, சம்மதித்தார் அரிகோ.
வழக்கம்போல வரிசையில் ஒழுங்காக நிற்குமாறு வாசலில்
நின்றவர்களை அதட்டியவாரே சிகிச்சை செய்துகொண்டிருந்த அரிகோ, ஒரு நோயாளிக்கு
மருந்து எழுத பேனாவைக் கையில் எடுத்தபோது அது அப்படியே அந்தரத்தில் மிதக்க
ஆரம்பித்தது. இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு. சற்றே வரிசையை ஏறிட்ட அரிகோ,
அதில் ஒருவனை தனியே அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்து தாழிட்டார். "நீ
போலீஸ்காரன் தானே. நான் வைத்தியம் செய்வதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எனது மருந்துச்
சீட்டைக் கொண்டு போய் நீதிமன்றத்தில் காட்ட இருக்கிறாய். அப்படித்தானே?!"
வெலவெலத்துப் போனார் மாறுவேடத்தில் வந்திருந்த அந்த போலீஸ்காரர். அரிகோவே மேலும்
தொடர்ந்தார். "சமீப காலங்களாக நீ உனது குடும்பத்தினரை
கவனிப்பதில்லையமே? முதலில் குடும்பத்தைக் கவனி, பிறகுதான் எல்லாம்" என
மருந்துச்சீட்டில் ஏதோ ஒன்றை எழுதி அப்போலீஸ்காரரின் கையில் திணித்துவிட்டு,
அறையிலிருந்து வெளியேறினார். அதைப் பிரித்துப் பார்த்த போலீஸ்காரரின் முகம்
அவமானத்தால் சுருங்கியது. அதில், "தினசரி பைபிள் படி. காலை, பகல், மாலை 3
வேளையும் தவறாமல் படி" என எழுதியிருந்தது. (இதுதான்
அவரு எழுதித் தந்த மருந்துச்சீட்டுனு எவன்ட்ட சொன்னாலும் நம்பமாட்டானுங்களே...!) அப்போதைய சூழ்நிலையில், இவரைப் போலி மருத்துவர் என
அவ்வூர் மருத்துவர்களும், திருச்சபைக்கு எதிரானவர், துஷ்ட ஆவிகளுடன் தொடர்புடையவர்
என கிறிஸ்தவ பாதிரியார்களும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். அதன் சார்பாகவே
அப்போலீஸ்காரர் அங்கு வந்திருந்தார். இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் அரிகோவின்
புகழொளி குன்றவில்லை. அவரது புகழின் உச்சமாக, பிரேசிலில் இன்றளவும்
மதிக்கப்படும், அந்நாட்டின் அப்போதைய அதிபரான "ஜுசேலினோ
குபிட்ஷேக்" (Juscelino Kubitschek), தனது
மகளின் சிறுநீரகத்தில் இருந்த கட்டியை, பிரபல அமெரிக்க மருத்துவர்களால்
குணப்படுத்த இயலாது என்கிற நிலையில், அரிகோவிடம் அழைத்து வந்து வழக்கமான
அறுவைசிகிச்சையின் உதவியால் குணமாக்கிச் சென்றார். இது அரிகோவின் எதிரிகளின் வயிற்றில்
எரியும் நெருப்பில் பெட்ரோல் வார்த்தது. அரிகோவின் மருத்துவமனையில் (!) பாரபட்சம்
கிடையாது, யாராக இருந்தாலும் அவரின் முறை வரும்வரை வரிசையில் காத்திருக்க
வேண்டும்; குபிட்ஷேக் உட்பட!
![]() |
| ஜுசேலினோ குபிட்ஷேக் |
![]() |
| அமெரிக்க அதிபர் கென்னடியுடன், பிரேசில் அதிபர் குபிட்ஷேக் [வலது] |
| குபிட்ஷேக்கைப் பெருமைப்படுத்த பிரேசில் வெளியிட்ட ரூபாய் நோட்டு |
பின்னொருநாள், அந்நாட்டு பிரபல பத்திரிக்கையான 'காப்ரியேல்
காட்டர்' (Gabriel Catter)-ன் நிருபர் அரிகோவைப் பேட்டியெடுக்க
வந்திருந்தார். ஆனால், அன்று அரிகோவின் முகம் சற்று வாட்டமாயிருப்பதையறிந்த
நிருபர், காரணம் கேட்டார். அதற்கு அரிகோ, தனது மனக்கண்ணில் கருப்பு சிலுவை
தெரிவதாகவும், அது அவ்வாறு தோன்றும்போதெல்லாம், தனக்கு நெருக்கமானவர்கள்
உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்தார். மறுநாள் காலை, தினசரிகளில்
தலைப்புச்செய்தியாக வந்திருந்தது, அரிகோவை உலகறியச் செய்தவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான பிட்டன் கோர்ட்டின் மரணம். நொறுங்கிப் போனார் அரிகோ, இருந்தாலும்,
மருத்துவச் சேவையை விடவில்லை.
| அரிகோவின் மனக்கண்ணில் தோன்றிய, கருப்பு சிலுவையின் கற்பனை உருவகம் |
இருக்கிற
பிரச்சனைகள் போதாதென்று, இன்னொரு பிரச்சனையும் வந்தது. அதாவது, அரிகோவின் அதிசய
அறுவை சிகிச்சையை ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டுமென மருத்துவ விஞ்ஞானிகள் பலர்
தீர்மானித்து, அரிகோ நிச்சயம் நோயாளிகளை, "ஹிப்னாட்டிசம்"
(Hypnotism) எனப்படும் மனோவசியம் மூலம் வசியம் செய்தபின்னரே
அறுவை சிகிச்சை செய்கிறார்; அதனால்தான் நோயாளிகள் வலியை உணர்வதில்லை
என முடிவெடுத்தவர்களாய், "ஆரா" (Aura) என்றொரு ஆய்வுக்குழு அமைப்பை நாடினர். மனித
உடலைச்சுற்றி 'ஆரா' எனப்படும் கண்களுக்குப் புலப்படா ஒளிவட்டம் இருப்பதாக நம்பும்
இவர்கள், அதன் மின்சக்தியைக் கண்டறியும் நுண்ணிய கருவியை உருவாக்கும் முயற்சியில்
மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். (இது குறித்த விரிவான பதிவுகள் விரைவில்)
ஒரு கண்புரை நோயாளியை மனோவசியப்படுத்தி, அவரது கண்களுக்குள் கத்தியை நுழைக்க முயல,
அந்த நபர் "ஐயோ அம்மா" என விழுந்தடித்து ஓடினார்.
கடைசியில், மனோவசியம்தான் அந்த அதிசயங்களுக்குக் காரணம் என முடிவெடுத்தவர்களுக்கு,
முடிவில் ஒரு முடி கூட கிடைக்கவில்லை. அதன்பின் இப்பிரச்சனை ஓய்ந்தது.
பின்னர், டாக்டர்.ஜோஸ்
ஹார்டன்சியா டி மடியராஸ், (Jose Hardensia de Madiaross) (ப்பா...எத்தன
ஜோஸு...!!!) என்கிற இதயநோய் வல்லுநர், தனது நண்பரின் மனைவிக்கு,
குடலில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டிருந்தது. அதன்பின் எடுக்கப்பட்ட
சோதனை முடிவுகளில், அப்பெண்ணுக்கு இருந்தது புற்றுநோய்க் கட்டி என்றும், அது அவரது
குடல் முழுவதும் பரவ ஆரம்பித்திருந்தது. மருத்துவர்களும், இனி எவ்வளவு உயரிய
சிகிச்சை அளித்தாலும், பிழைக்க வைக்க இயலாது என கை விரித்து விட்டனர்.
அப்பெண்மணியை, அரிகோவின் புகழைப் பற்றி அறிந்து, அரிகோவிடம் தனி விமானம் மூலம்
அழைத்து வந்தார், மடியராஸ். அப்பெண்மணியின் கணவனான, மடியராசின் நண்பர் ஆஸ்திரியா
நாட்டைச் சேர்ந்தவராதலால், ஜெர்மானிய மொழியில் சந்தேகங்களைக் கேட்க, அரிகோவும்
அதற்கு ஜெர்மானிய மொழியிலேயே பதிலளித்தார். இதைக்கண்ட மடியராஸுக்கு உள்ளூர
வியப்பு. மின்னல் வேகத்தில் அரிகோவின் கண்கள் இயங்கின. விறுவிறுவென அவரது விரல்கள்
மருந்துச்சீட்டில் சில மருந்துகளை எழுதின. (இப்பெண்மணிக்கு, அரிகோ அறுவை
சிகிச்சை செய்யவில்லை) "இந்த மருந்துகளை வாங்கிச்
சாப்பிடு. குணமாகிவிடும்" என்று கூறிவிட்டு அடுத்த நோயாளியைக்
கவனிக்க ஆரம்பித்தார். 'அம்மருந்துச் சீட்டை அல்டிமீரோவிடம் காட்டுங்கள்' என
யாரோ கூற, அவர்களும் அவ்வாறே தந்ததும், அல்டிமீரோ அம்மருந்துகளை அழகாகத் தட்டச்சு
செய்து, சாப்பிடும் முறையை விளக்கி அனுப்பினார்.
விமானத்தில் இருப்பிடத்திற்குத் திரும்பிக்
கொண்டிருக்கும்போது மடியராஸ், அரிகோவின் மருந்துச்சீட்டைப் பார்வையிட்டார்;
குழம்பிப்போனார், ஒரு மருத்துவராக. காரணம், அதில் எழுதப்பட்டிருந்த மருந்துகள்.
அவை,
- நியூரோபின்,
1.
இது
பிரேசிலில் தயாரிக்கப் படுகிறது.
2.
இது
ஒரு வைட்டமின் பி-12 மாத்திரை.
- கானாமைசின்,
1.
இது
ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.
2.
ரியோவில்
(சிறப்பு அனுமதியோடு) தயாரிக்கப்படுகிறது.
3.
உடலில்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், குடல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகவும்
பயன்படுகிறது.
- ஓலோபின்டின்,
1.
இது
ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது; ரியோவில் தயாரிக்கப்படுகிறது.
2.
ஊசிமூலம்
ஏற்றக்கூடிய மருந்து.
3.
துர்நாற்றம்
சம்பந்தப்பட்ட சுவாசப் பிரச்சனைகளுக்கும், நுரையீரல் அழுகல் போன்ற
கோளாறுகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
4.
நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- டெக்ஸ்டாசைன்,
இம்மருந்துகுறித்து மடியராஸுக்கு எந்த ஒரு அபிப்ராயமும் இல்லை. ஏனெனில்,
இப்படி ஒரு மருந்தை அவர் கேள்விப்பட்டதும் இல்லை; அதன் பயன்கள் என்னவென்றும்
தெரியாது. இத்தகைய சாதாரண மருந்துகள் பரவிக்கிடக்கும் புற்றுநோயை குணமாக்கும் என
அவருக்குத் துளியும் நம்பிக்கையில்லை. (இத சாப்பிட்டா எப்டிடா
புற்றுநோய் குணமாகும்.?! என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு...!!!) பின்குறிப்பில்,
மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளவேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இது
மடியராஸுக்கு மேலும் அதிருப்தியைத் தந்தது. இருந்தாலும், 'எத்தனையோ செலவு
செய்தாகிவிட்டது, இந்த சாதாரண மருந்துகள் வாங்கியா குடி முழுகிவிடும்!'
என்கிற நம்பிக்கையில், அரிகோ மருந்துச்சீட்டில் பின்குறிப்பிட்டிருந்தவாறே
செய்தனர். ஆனால், ஒருவாரத்திலேயே அப்பெண், ஆச்சர்யப்படத்தக்கவகையில் நடமாடத்
தொடங்கினார்; எடையும் கணிசமாக அதிகரித்திருந்தது, இத்தகைய அசாத்தியங்களை நேரில்
கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார் மடியராஸ். அடுத்த முறை பரிசோதனைக்கு அப்பெண்ணை
அழைத்துச்செல்லும்போது, மடியராஸும் அரிகோவின் அடுத்த கட்ட சோதனைகளை அறியும்
ஆவலுடன், வலிய உடன்வந்தார். அப்பெண்மணி உடலில் தனியாக பை ஒன்று, மலம்
வெளியேறுவதற்காக இணைக்கப்பட்டிருந்தது. அவற்றை அகற்றலாமா என்பது குறித்து வினவ,
அரிகோ பதில் ஏதும் கூறாமல், "இப்பெண்ணின் கண்டம் தீர்ந்து போயிற்று"
என்றவாறு, சிறுநீரகக் கோளாறுக்கான மருந்தை எழுதிக் கொடுத்தார். மூன்றாவது முறை
வரும்போது, தனது சந்தேகத்தை மடியராஸ் முன்வைக்க, அகற்றலாம் என்றார் அரிகோ. அதற்கான
அறுவை சிகிச்சையை சாவ்-பாவ்லோ (Sao-Paulo) நகரின் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது.
(இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். ஏன், இந்த அறுவை சிகிச்சையையும்
அரிகோவே செய்திருக்கலாமே என்று. அதற்குக் காரணம், ஒன்று, அரிகோ மற்ற அபாய
கட்டத்திலுள்ள பல நோயாளிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு, அப்பெண்மணி
அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார். இனி அவருக்கு அரிகோதான் சிகிச்சை அளிக்க வேண்டும்
என்கிற கட்டாயம் இல்லை.) பிரேசிலின் தலைசிறந்த மருத்துவர் ஒருவர் அப்பெண்ணுக்கு அறுவை
சிகிச்சை செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அந்த விபரீத எண்ணம் தோன்றியது.
அவர்கள் அரிகோவிடம் சிகிச்சை பெற்றதை அறிந்திருந்த மருத்துவர், அப்பெண்ணின் குடல்
பகுதியில் அப்புற்றுநோயின் தற்சமய நிலையை அறிய விரல்களை அத்திசையில் திருப்பினார்;
ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோனார். உள்ளே புற்றுநோயின் அறிகுறியே இல்லை; தொல்லை தராத
தசைநார்க் குவியல்கள் மட்டுமே காணப்பட்டன. ஏறத்தாழ 11 மாதங்களுக்குப் பின்,
அப்பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என சொல்லமுடியாத அளவிற்கு, உடல் நலம்
தேறியிருந்தார்.
அரிகோவின் அறுவை சிகிச்சை மர்மத்தைக் கண்டறிய அடுத்ததாக
(ஆகஸ்ட் மாதம் 1963-ல்) மூவர் குழுவுடன் அமெரிக்காவிலிருந்து
வந்திறங்கியவர், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு முடித்த, அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் விஷயங்களில் (Parapsychology)
ஆர்வமுடைய, "ஆண்ட்ரிஜா புகாரிச்" (Andrija
Puharich). அரிகோவும் அவரது ஆய்வுக்கு
சம்மதிக்க, தினமும் புகைப்படங்களும் காணோளிகளுமாக எடுத்துத் தள்ளினர். ம்ஹும்,
ஏமாற்றுவேலை என எதையும் கண்டுபிக்க இயலவில்லை. இறுதியில், புகாரிச் தன்னையே பணயம்
வைக்கத் துணிந்தார். தனது வலது முழங்கையின் அருகே இருந்த ஒரு கட்டியை அரிகோவிடம்
காட்ட, அங்கிருந்தவர்களுள் ஒருவரிடம் பேனாகத்தி ஒன்றை வாங்கி, சட்டைக் கையை
மடக்கிவிடச் சொல்லி, கத்தியை நுழைத்தார். சிறு பதட்டத்துடன், வலிக்குமோ என்கிற
சந்தேகத்தோடு கண்களை மூடிய புகாரிச், வலி துளியும் இல்லாததால் கண் திறந்தார்.
கட்டி நீக்கப்பட்டிருந்தது, அவ்விடத்தில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டிருந்தார்
அரிகோ. புகாரிச்சுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. காணோளிகளுடனும்,
புகைப்படங்களுடனும் அமெரிக்காவிற்குச் சென்று பத்திரிகைகளில் அரிகோவைப் புகழ்ந்து
தள்ளினார். பின்னாளில், இவரது தகவல்களின் அடிப்படையில், ஜான் ஃபுல்லர் (John Fuller) என்பவர், "அரிகோ: துருப்பிடித்த கத்தி அறுவை சிகிச்சையாளர்"
(Arigo: Surgeon of the rusty knife) என்கிற புத்தகத்தை எழுதி
வெளியிட்டார்.
![]() |
| அரிகோ குறித்த புத்தகம் |
அரிகோவின் செல்வாக்கு
அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு பிரச்சனைகளும் அதிகரித்தது. மருத்துவ சங்கங்கள்,
கிறிஸ்தவ சபை, அரிகோவின் புகழை வெறுப்பவர்கள் என்ற பட்டியலில் புதியதாய் வந்தது
ஒரு தலைவலி. 'எனக்குள்ளேயும் ஒரு மருத்துவர் புகுந்துவிட்டார், என்னிடம்
சிகிச்சைக்கு வாருங்கள்' என ஒரு கும்பல், இது அரிகோ அண்ணனின் ஆசிபெற்ற
வைத்திய சாலை (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது) என்கிற பாணியில் ஒரு கும்பல் என அவ்வூர் ஆவியுலக
நம்பிக்கையாளர்கள் கையில் கத்தியை எடுக்க, ஊரார் ஓட்டம் பிடித்தனர். (உன் ஜாலிக்கு, நாங்க கோலியா...?! நீ ஆபரேஷன் பண்ணிப்
பழகுறதுக்கு நாங்களா கெடச்சோம்…!) எல்லாவற்றுக்கும்
மேல், பிரேசில் நாட்டுக் குற்றவியல் சட்டம் 284-ம் பிரிவின்படி, 'ஆவிகள்
மூலம் வைத்தியம் செய்வது குற்றம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அரிகோ மீது
(நோயாளிகளாக, மருத்துவர்களாகவோ வியாபாரிகளாகவோ அல்ல) பாதிக்கப்பட்டவர்கள் என்று
யாரும் வழக்கு தொடராததால் இதை அரசு பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இவ்வாறான
விபரீதங்கள் சமூக அமைதியைக் குலைக்கவும், இறுதியில், 'இவரால்தான்
எல்லாம் விளைந்தது' என அரிகோ மீது பழி போட்டு, குற்றவாளிக் கூண்டில்
ஏற்றினர். இதற்கு முன்னரும் ஒருமுறை (1956-ல்) நீதிமன்றத்தில் 'இவர் போலி
மருத்துவர்' எனக் குற்றம் சாட்டப்பட்டபோது, தானாக எதுவும் செய்யவில்லை என்றும்,
ஃபிரிட்ஸ் என்பவரின் ஆவிதான் தன்னை இவ்வாறு செய்விப்பதாகவும் தெரிவிக்க, அது
நம்பும்படி இல்லை என நீதிபதி தரப்பு மறுத்தது. ('சார்.
நீங்க பெரிய மனுஷன். நீங்களே இங்க வந்து உங்க கையக் குடுங்க, நான் ஆபரேஷன் பண்ணிக்
காட்டுறேன், அப்பறம் நீங்களே சொல்லுங்க'-னு அப்போ அரிகோ சொல்லாமப் போயிட்டாரு...!) 15 மாத சிறையும், 5000 பிரேசிலிய
பணம் அபராதமும் விதித்தது. ஆனால், அப்போது, அப்போதைய அதிபர் குபிட்ஷேக்கின்
தலையீட்டாலும், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் அழுத்தத்தாலும்
8 மாத தண்டனையாகக் குறைத்ததுடன், அரிகோ தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு ஆலோசனை
சொல்லலாமேயன்றி, அறுவை சிகிச்சை செய்யக்கூடாது; அதன்படி ஒருவருட காலம்
நடந்துகொண்டால், தண்டனை ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்து
அனுப்பபட்டிருந்தார். சில காலம், கத்தியைத் தொடாமல் இருந்த அரிகோவை ஃபிரிட்சின்
குரலும், நோயாளிகளின் துயரமும் துரத்த, கத்தியை மீண்டும் கையிலெடுத்தார். விளைவு,
இப்போது மீண்டும் அதே கூண்டில்.
இம்முறை
குபிட்ஷேக்கின் செல்வாக்கு, பலதரப்பட்ட நெருக்கடியின் காரணமாக எடுபடாமல் போனது.
பில்லி சூனியம், செய்வினை போன்ற சட்ட விரோத செயல்கள் செய்ததாகக் கூறி 16 மாதங்கள்
சிறை தண்டனை விதித்தனர். ஊரே திரண்டு நின்று நீதிமன்ற வளாகத்திலும், அரிகோவின்
வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தினர். "அவர் எங்ககிட்ட காசே
வாங்குனது இல்ல. அவரு போலி மருத்துவரா?", "எங்களுக்கு எந்த கஷ்டமும்
இல்லாம வைத்தியம் பாத்தது பில்லி சூனியமா?" மக்களின் நியாயமான
கேள்விகளுக்கு பதில் இல்லை. போராட்டத்தின் விளைவால், அரிகோவை சிறைக்கு அழைத்துச்
செல்ல காவல்துறை தயங்கியது. நிலைமையை உணர்ந்த அரிகோ, தானாகவே காவல்துறையினரின்
வாகனத்தில் ஏறி, சிறைக்குச் செல்ல பணித்தார் அரிகோ. சிறையின் தலைமைக் காவலர்,
அரிகோவின் புகழை உணர்ந்தவராய், பாழடைந்த சிறையில் இருக்கவேண்டாம் எனவும், சிறைக்கு
மிக அருகாமையிலுள்ள விடுதியில், காவல்துறையின் கண்காணிப்பில் தங்கியிருக்குமாறும்
கேட்டுக்கொண்டார். அதனை மறுத்த அரிகோ, தானாகவே சிறைக்குள் சென்றார். அரிகோவை
சிறைப்படுத்தியத்தில் மக்களுக்கு மட்டுமல்ல, சிறைக்காவலர்களுக்கும் மனமில்லை.
வெளியில் நடக்கும் பிரச்சனைகளைக் கவனித்த சில கைதிகள், 'சாப்பாடு சரியில்லை' எனக்
கலவரம் செய்தனர்; அதில் சிலர் சிறையிலிருந்தும் தப்பினர். ஆனால் அரிகோவோ, சாப்பாடு
நன்றாக இருப்பதாகக்கூறி சிறைக்கைதிகளை சமாதானப்படுத்தினார். கலவரத்தில் சேதமான
பொருட்களை, பலகைகளை வரவழைத்தும், வர்ணங்கள் பூசியும் புதுப்பித்தார்.
அரிகோவைப்பார்த்து சிறைக்கைதிகளும் மேம்பாட்டிற்கு உதவினர்.
அதுவரை சுமூகமாகவே இருந்தது, அரிகோவின் வாழ்க்கை. கைதி
ஒருவர் தனது முதுகில் ஒரு கட்டி இருப்பதாகவும், அதை அனுமதி அளித்தால் அரிகோவிடம்
சென்று காட்டி சிகிச்சை பெறுவதாகவும், சிறைக்காவலாளியிடம் மன்றாடினார்.
வேறுவழியின்றி அனுமதிக்க, வரிசை கட்ட ஆரம்பித்தது சிறையினுள் கைதிகளின் வரிசை.
உள்ளே இருக்கும் கூட்டம் போதாதென்று, சிறைக்கு வெளியில் மக்கள் வேறு வரிசை கட்டினர்.
(சுகர் வந்தவன், பிபி வந்தவன், பக்கவாதம் வந்தவன்,
இவங்க எல்லாம் கைதிங்க... இவங்கள வச்சு ஜெய்லருங்க சண்ட செய்ய....!!!) கூட்டம்
கூடிய செய்தி கேட்டு பத்திரிக்கையாளர்கள் படையெடுத்தனர். நிர்வாக இடைஞ்சலையும்,
சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு, நன்னடத்தையின் அடிப்படையில்
விடுதலை செய்வதாக 1965-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள், நீதிமன்றம்
அரிகொவை விடுதலை செய்தது.
இதற்கிடையில் 1965-ல் மீண்டும் அரிகோவை
சந்திக்க வந்த புகாரிச், மேலும் சில ஆவணகளைத் திரட்டி அமெரிக்காவிலுள்ள மனோதத்துவ
ஆராய்ச்சியாளர்களிடமும், மனநல நிபுணர்களிடமும், ஆவியுலக தொடர்பாளர்களிடமும்
போட்டுக்காட்டினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின்
மிகபெரிய மருத்துவமனையான ரூஸ்வெல்டின்,
உளவியல் துறை இயக்குனராகப் பணியாற்றிய ராபர்ட்
லெயிட்லா (Robert Laidlaw), அரிகோவின் அறுவைசிகிச்சையின்போது எடுக்கப்பட்ட
வண்ணப்படங்களையும், காணோளிகளையும் நுணுக்கமாக ஆராய்ந்ததன் அடிப்படையில், ஒரு நீண்ட
ஆய்வறிக்கை தயாரித்திருந்தார். அதில், அரிகோ அறுவை சிகிச்சை செய்யும்போது அவரது
முகம் ஏதோ ஒருவித மந்திரக்கட்டுக்கு உட்பட்டவாறு மாறுவதாகவும், அவரது கைகள்
அசாத்திய வேகத்துடனும், அவரது விரல்கள் நம்பவியலாத அளவிற்கு இலகுவாகவும்,
தீர்க்கமாகவும் இயங்குவதாகத் தெரிவித்தார். இது அனுபவம் வாய்ந்த
மருத்துவர்களுக்கும் அப்பாற்ப்பட்ட திறன் என்பது ராபர்டின் கருத்து. மேலும்,
ரத்தம் வழியாதது, காயம் விரைவில் குணமாவது, கழுவாத கத்திகள் மனித உடலை புண்ணாகாமல்
விட்டுவிடும் அதிசயம் போன்ற இயற்கைக்கு முரணான விஷயங்கள் மேலும்
வியப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மொத்தத்தில் அரிகோ ஒரு மர்மமான, சக்தி நிரம்பிய
மனிதர் என முடித்தார். அரிகோவை வைத்து, புகாரிச் செய்த சோதனைகளும் இதே முடிவையே
தந்தன.
இரண்டாவதாக நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தபின், அமெரிக்காவில்
குடும்பத்துடன் தங்கியிருந்த குபிட்ஷேக், இன்னொரு தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது
சொந்த நாடான பிரேசிலுக்குத் திரும்பியிருந்தார். அரிகோ தற்போது அவரது வீட்டில் இருப்பதை
அறிந்து, அங்கே சென்று அரிகோவைச் சந்தித்தார். நீண்டநேரம் உரையாடல்கள் தொடர்ந்தன. இரவு
நெருங்கியதும், அரிகோவுடன் மேலும் நிறைய பேச ஆசை இருந்தாலும், அரிகோவின் மருத்துவப்
பணிகளுக்கு இடையூறாக இருக்க விரும்பாததால், கிளம்பினார். ஆனால் அரிகோ, குபிட்ஷேக்கைப்
பிரிய மனமின்றி இருந்தார். அவரின் முகத்தில் இனம்புரியாக் கவலை வேர்விட்டிருப்பதையுணர்ந்த
குபிட்ஷேக் காரணம் கேட்டார். சற்றே தயக்கத்துடன், தனக்கு விரைவில் ஒரு விபத்தின்மூலம்
மரணம் எற்படப்போவதாகத் தெரிவித்தார் அரிகோ. அதிர்ந்து போனார் அரிகோ. குபிட்ஷேக்
"என்ன சொல்கிறீர்கள் அரிகோ?" என்றார் அச்சத்துடன். "ஆம்.
எனது கனவில் கருப்பு சிலுவை ஒன்று அடிக்கடி வருகிறது. அது என்னைசுற்றி நடக்கவிருக்கும்
துர்சம்பவத்தின் அறிகுறி. என் கனவில், எனது நண்பர் ஒருவர் எனது காரை (இரவல்) வாங்கிச்
செல்கிறார். அக்கார் ஒரு பெரும் பள்ளத்தில் தலைகீழாய் உருண்டு விழுந்து பெரும் விபத்துக்குள்ளாகிறது.
ஆனால் அக்காரை ஓட்டிச்சென்ற நண்பர் எவ்வித காயமுமின்றி தப்பிவிட்டார்"
என்றார் அரிகோ. இவற்றையெல்லாம் கேட்டு உறைந்துபோய் நின்றிருந்த குபிட்ஷேக், "இது
எதைக் குறிக்கிறது?" என்றார் தழுதழுத்தக் குரலில். "நிச்சயம்
எனது முடிவைத்தான்" என்றார் அரிகோ, அமைதியாக. அவரின் இந்த தீர்க்கதரிசனமும்
விரைவில் உண்மையாய் அமைந்தது என்பது மேலும் ஆச்சர்யம்.
1971-ம் ஆண்டு, ஜனவரி 11-ம் நாள், வழக்கம்போல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அரிகோவின் அபிமானிகள், நாடுமுழுவதும் நிதி திரட்டி அதில் அவருக்காக ஒரு மருத்துவமனை கட்டியிருந்தனர். மாலை 3 மணிக்கு திறப்புவிழா. அங்கு புதிய காரில் செல்லவேண்டுமெனவும், அதற்கு முன் தனது அன்றாடப் பணிகளை முடிக்கவேண்டுமெனவும் தனது சகாக்களிடம் தெரிவித்தார். மதிய உணவை முடிக்க வீட்டிற்கு சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. நண்பகலுக்குப் பின்னரே மழை ஓய்ந்தது. தனது மனைவி அர்லடேயிடம் விடைபெற்றுக்கொண்டு, தனது 20 வயது மகனான ரிபெரியோவை (Reberio) உச்சி முகர்ந்து, புதிய கார் வாங்குவதற்காக, பக்கத்துக்கு ஊரான லஃபாய்டே-க்கு, தன் நண்பனுடன் தனது ஒபெல் (Opel) காரில் ஊருக்கு வெளிப்புறமான பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, பி.ஆர்.135 தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தார். (ஒத்துக்குறேன்...பெரிய வாக்கியம் தான்..!) மழை மீண்டும் பிடித்திருந்தது. சுமார் 3 கி.மீ. தூரம் கடந்தபோது வரும் ஒரு மறைவான அபாய திருப்பத்தில், வழக்கமாக வண்டியின் வேகத்தைக் குறைப்பார் அரிகோ. ஆனால் அன்று மாலை 3 மணிக்குள் காரை வாங்கிவிட்டு திரும்பவேண்டுமென்பதால் (கட்டிடத் திறப்புவிழா, நோயாளிகள் காத்துக்கொண்டிருப்பார்கள்), வேகத்தைக் குறைக்கவில்லை. அப்போது எதிரே வந்த ஒரு டிரக்கை முதலில் அரிகோ கவனிக்கவில்லை. பின்னர் கவனித்து பிரேக்கை அழுத்தியபோது, சாலையில் தேங்கியிருந்த நீரில் அவரது கார் பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது. இரண்டும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டுப்பாட்டை இழந்து, மோதிய வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. கார் கதவுகள் திறந்துகொண்டதால், அரிகோவின் பாதி உடல் உள்ளேயும், பாதி உடல் வெளியேயுமாய் மாட்டிக்கொள்ள, கார் உருண்ட சாலையில், அரிகோவின் சதைகள் உரசிச் சென்றிருந்தன; கால்கள் காரினுள் முறுகிய நிலையில் காணப்பட்டன; எஃகுக் கம்பியொன்று ஈட்டியைப் போல் மார்பைத் துளைத்திருக்க, மார்பிலும் தலையிலும் நிறைய காயங்களோடு, கதவுகள் திறந்த நிலையில் இருந்த காரில் , பாதி உடல் உள்ளேயும், பாதி உடல் வெளியேயுமாய் ரத்தவெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார். (அவரின் நண்பரும் இறந்திருந்தார் என்றே தெரிகிறது.) எந்தவொரு நோயாளிக்கும் வலியைக் காட்டாதவர், பயங்கர வேதனைகளை அனுபவித்தவராய் இறந்து கிடந்தார்.
"அய்யய்யோ....அரிகோ செத்துப் போயிட்டாராம்...!!!" என தகவலைக் கேள்வியுற்ற மக்கள், தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினர். அரசு அன்று பொதுவிடுமுறை அறிவித்தது; 2 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் தெரிவித்தது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குழுமினர். சுமார் 20,000 பேர் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்றனர். பிரேசிலின் அழுகை காதில் விழாதவராய், டாக்டர்.ஃபிரிட்சின் கனவுத் தொல்லையின்றி, நிம்மதியாகக் கல்லறையில் உறங்கிக் கொண்டிருந்தார், 'அரிகோ' என்கிற 'ஜோஸ் பெட்ரோ டி ஃபிரைடாஸ்'. 'இத்தனைக்கும் காரணமான அந்த டாக்டர்.ஃபிரிட்ஸ் யார்?', 'அரிகோ இறந்த பின், ஃபிரிட்சின் ஆவி எங்கு போனது?' இன்னும் அதிக கேள்விகளோடு காத்திருங்கள் அடுத்த பதிவு வரை.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக