Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 18 டிசம்பர், 2019

தூக்கு உறுதி - நிர்பயா குற்றவாளியின் சீராய்வு மனு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

நிர்பயா வழக்கில் அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி 23 வயது மருத்துவ மாணவி இரவில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசினர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவி 12 நாள் போராட்டத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு நிர்பயா என்று அழைக்கப்படுகிறது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால் தனியாக பிரித்து விசாரிக்கப்பட்டது.
 
இந்த சூழலில் 2013ஆம் ஆண்டு குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இளம் குற்றவாளிக்கு அதே ஆண்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

எஞ்சிய முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய மூவரும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அக்‌ஷய் குமார் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பயங்கரவாதம் என நிரூபிக்க அரசு மக்களை தூக்கில் போடுகிறது.

மாற்றத்தை கொண்டு வர முறையான சீர்திருத்தங்களை நோக்கி அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும். தூக்கில் போட்டால் குற்றவாளியை மட்டுமே தண்டிக்க முடியும். குற்றத்தை அல்ல என்று கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்மூலம் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!