ஒரு ஊரில் ஒரு கருமி(கஞ்சன்) வாழ்ந்து வந்தான். அவன் மிகப்பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் அவன் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. பிறகு ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, அவனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அந்த பெரியவர் அவனை நரகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால், ஒரு பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அதனால் அனைத்து தட்டுக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியினால் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தனர். அதன்பின், அந்தப் பெரியவர் அந்த கருமியை சொர்க்கத்துக்கு அழைத்து சென்றார். அங்கும் அதேபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் அப்போது புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதையும் உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் பல உதவிகள் புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக