Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

மன்னிப்பு கேட்டாலும் இதை மட்டும் மறக்க முடியாது !!


 Image result for மன்னிப்பு கேட்டாலும் இதை மட்டும் மறக்க முடியாது !!
 பூஞ்சோலை என்ற பச்சை பசுமையான புல்வெளிகள் மிகுந்த கிராமத்தில் சிலம்பரசன் என்ற இளைஞன் தன் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான்.

 அதை பெற்றுக்கொண்ட சிலம்பரசனிடம், அவனது நண்பன்.. நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்தச் சுவரில் அடி என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறுநாள் 30 ஆணிகளையும், அதற்கு அடுத்த நாள் 25 ஆணிகளையும் அடித்து படிப்படியாக அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

 சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப்பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட நண்பன் அவனிடம் அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னான். இளைஞனும், அப்படியே செய்தான். அதைப்பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

 என் நண்பனே... நீ, நான் சொன்னபடியே அனைத்து வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டுவிட்டன. ஆனால், ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார். இந்தச் சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

 என் நண்பனே... உண்மையைச் சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர உன்னைத் தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதைக் காது கொடுத்து கேட்பார்கள். நீ நல்ல நிலைக்கு வரும் போது உன்னைப் புகழ்வார்கள். அதையும் இதயப் பூர்வமாகச் செய்வார்கள். அதைத்தான் நான் இப்போது செய்தேன்.

தத்துவம் :

நாம் கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நாம் என்னதான், செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக