Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஏப்ரல், 2020

சீதையின் கோபம்!

இராவணன் பேசியதை கேட்ட சீதை, அற்பனே! நீ உண்மையான வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னை கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும், அவரின் தம்பி இலட்சுமணரும் இல்லாத நேரத்தில் ஓர் சந்நியாசியாக வந்து என்னை கவர்ந்து சென்ற நீ ஒரு வீரனா? உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை மறந்து விடாதே. 

என் கணவரின் அம்பு வானத்தையும் கிழிக்கச் செய்யும் வல்லமை உடையது. ஜடாயுவிடம் போரிட்டு தரையில் வீழ்ந்து தோற்றவன் தானே. அதனால் ஜடாயுவை சிவன் கொடுத்த வாளால் வெட்டி வீழ்த்தி விட்டாய். அந்த வாள் உன்னிடம் இல்லையென்றால் அன்றே நீ மாண்டு இருப்பாய்.

காட்டில் உயர்ந்து நின்ற கார்த்தவீரியார்சுனனை, பரசுராமன் வென்று ஒடுக்கினான். அந்த பரசுராமனை கணப் பொழுதில் வென்றவர் இராமர் என்பதையும் தெரிந்து கொள். தாடகை, விராதன், கரன், தூஷணன், திரிசிரன் முதலிய அரக்கர்களை அழித்தவர் இராமர் என்பது உனக்கு தெரியாதா? நீ என்னை விரும்புவது உனக்கு அழிவை தேடித் தரும். 

உன் சக்தியோ அல்லது செல்வமோ என்னை பணிய வைக்க முடியாது. நான் ஒரு போதும் உன்னை மனதால் நினைக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள். ஒப்பற்ற உனது செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ என் கணவரால் இழக்கப் போகிறாய்.

இராம இலட்சுமணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் எண்ணாதே. அவர்கள் இருவரும் இரு புலிகள். அந்த இரு புலிகளையும் எதிர்க்கும் சக்தியும், வலிமையும் உன்னிடம் உள்ளதா? இராம இலட்சுமணரின் சக்தியும், வலிமையும் நீ போர் புரியும் போது புரிந்து கொள்வாய் என்று கோபமாக அவன் மீது சீறினாள் சீதை. 

சீதை பேசியதை கேட்ட இராவணன், பெருங்கோபம் கொண்டான். நான் உன்னிடம் அமைதியாக பேசுகிறேன் என்று நீ என்னை அவமதிக்கின்றாய். என்னால் முடியாது என்பது எதுவும் இல்லை. நான் இராமனை கொன்று உன்னை கவர்ந்து வந்திருந்தால் நீயும் உயிரை மாய்த்துக் கொள்வாய்.

ஆதலால் தான் உன்னை வஞ்சனை செய்து கவர்ந்து வந்தேனே தவிர போருக்கு பயந்து அல்ல. நான் நினைத்தால் இராம இலட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்ததால் அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். 

நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை கொல்லாமல் விடுகிறேன். நான் உனக்கு பன்னிரெண்டு மாதம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் நீ எனக்கு இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. பன்னிரெண்டு மாதங்கள் முடிய இன்னும் இரண்டே மாதங்கள் உள்ளது. அதற்குள் நீ என்னுடையவளாக மாறிவிட வேண்டும்.

அப்படி இல்லையேல் உன்னை கொன்று இங்குள்ள அரக்கர்களுக்கு இரையாக்கி விடுவேன் என கோபத்துடன் கூறினான். பிறகு இராவணன் அங்கிருந்த அரக்கியர்களை பார்த்து, இவள் என் வசம் ஆகும்படி செய்யுங்கள். அவளிடம் நல்ல வார்த்தை கூறி பேசி பாருங்கள். 

அப்படி அவள் இணங்க வில்லை என்றால் கடுமையாக பேசி எப்படியேனும் இணங்கச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான். இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன், இராவணனை கொன்று இப்பொழுதே சீதையை மீட்டு செல்வேன் என மனதில் எண்ணினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக