Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூன், 2020

பணக்காரர்கள் மீது வரி உயர்வு.. ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவு..!

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும், அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பொருளாதாரம் சரிவை மீட்டு எடுக்கப் பல நாடுகள் பல முயற்சிகளைச் செய்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து ரஷ்யா பொருளாதாரம் மீண்டு வர ரஷ்யாவில் அதிகம் சம்பாதிக்கும் பணக்காரர்களின் மீதான வருமானத்திற்குக் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது ரஷ்ய பணக்காரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், சாமானிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரி உயர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 50 லட்சம் ரூபிள்-க்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்குத் தற்போது இருக்கும் 13 சதவீத வரியை 15 சதவீத வரியாக ஜனவரி 2021 முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

சொல்லப்போனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்-ம் இந்தக் கூடுதல் வரியைச் செலுத்தியாக வேண்டும். 2018ல் கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின் படி விளாடிமிர் புடின் அவர்களின் ஒரு வருட வருமானம் 86 லட்சம் ரூபிள்.

வரி விதிப்பு முறை

விளாடிமிர் புடின் முதல் முறையாக ரஷ்ய அதிபராகப் பதவியேற்றிய 2001ஆம் ஆண்டில் அனைவருக்கும் ஓரே வரி என்கிற முறையை நடைமுறைப்படுத்தினார். இதன் பின்பு கொரோனா வந்த பின்பு, அதாவது கிட்டதட்ட 19 வருடத்திற்குப் பின் ரஷ்ய வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்திவிட்ட நிலையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பல இடங்களில் வர்த்தகச் சந்தை மீண்டு வந்தாலும், 2009ஆம் ஆண்டின் சர்வதேச நிதிநெருக்கடியை விடவும் பெரிய அதிகளவிலான வேலைவாய்ப்பு இழப்பு, வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்பை ரஷ்யா எதிர்கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம்

கொரோனாவால் ரஷ்யா ரீடைல் சந்தை ஏப்ரல் மாதத்தில் கிட்டதட்ட 23. 4 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டது, வேலைவாய்ப்பின்மை 5.8 சதவீதமாக அதிகரித்தது, ஜிடிபி 12 சதவீதம் சரிந்ததது.

தற்போது விதிக்கப்பட்ட வரி விதிப்பின் மூலம் ரஷ்ய அரசுக்கு 60 பில்லியன் ரூபிள் கூடுதல் வருமானம் பெற முடியும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்தியா

கொரோனாவால் இந்தியாவிலும் அதிகளவிலான பாதிப்பை மக்களும், பொருளாதாரமும் சந்திதுள்ளத நிலையில், இந்திய அரசு சாமானியர்களைப் பாதிக்காத வகையில் பணக்காரர்களுக்கு மீதான வரியை உயர்த்துமா..?

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சாமானிய மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் மத்திய அரசு ரஷ்ய அதிபரின் முடிவை வரவேற்குமா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!