மின்சார வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், அதிரடி வரிச் சலுகை திட்டத்தை டெல்லி அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
வாகனங்களிலிருந்து வெளியேரும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரு நகரங்களில் வாகனப் பெருக்கத்தால் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டி உள்ளதன் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இதனால், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய எரிபொருள் வாகனங்களை
பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் டெல்லி அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த
வகையில், மின்சார கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல அதிரடி சலுகைகளை டெல்லி
அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை மின்சார வாகனங்களுக்கான அரசின் புதிய கொள்கையை டெல்லி
துணை நிலை ஆளுனர் அனில் பாலாஜி வெளியிட்டார்.
அதில், பேட்டரியில் இயங்கும் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரியில்
இருந்து முழு விலக்கு அளிப்பதாக அறிவப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக
அமலுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கை முடிவு குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
கூறுகையில்,"டெல்லியில் தற்போது 0.29 சதவீதம் அளவுக்கே மின்சார வாகனங்கள்
உள்ளன. வரும் 2024ம் ஆண்டுக்குள் டெல்லியில் 25 சதவீதம் மின்சார வாகனங்கள்
பயன்பாட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்கு இந்த புதிய கொள்கை வலு
சேர்க்கும். அதேபோன்று, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை
உருவாக்கவும் துணைபுரியும்," என்று தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களுக்கான புதிய சலுகை அறிவிப்பு குறித்து டெல்லி போக்குவரத்து
அமைச்சர் கைலாஷ் கெலான் ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு
வாழ்த்துகள். முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே கொடுத்த உறுதிமொழியின்படி,
பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகள் மூலமாக நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்களை எடுத்து வருகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அரசின் இந்த சிறப்பு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மின்சார வாகன உற்பத்தி
நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆம்பியர் நிறுவனத்தின் உயர் அதிகாரி சஞ்சீவ்
கூறுகையில்,"மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் டெல்லி அரசு
சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டிப்பதால், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
ஏற்படும். இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் குறித்த
அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த
புதிய நடைமுறையின் மூலமாக மின்சார வாகனங்கள் வாங்குவோர் அதிகபட்சமாக ரூ.1.50
லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக மின்சார
கார்களுக்குத்தான் ரூ.1.50 லட்சம் வரை சேமிப்பு பெறுவதற்கான வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக