சீனாவின் டிஜிட்டல் வர்த்தகத்தை மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்று எப்படி அலிபாபாவும், டென்சென்ட் நிறுவனமும் பங்குபோட்டுக்கொண்டதோ, அதேபோல் தற்போது இந்தியாவில் புதிய டிஜிட்டல் புரட்சியுடன் மாபெரும் போட்டி உருவாகியுள்ளது.
இந்தியாவின் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதிலும், டிஜிட்டல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதிலும் டாடா மற்றும் அம்பானி குழுமங்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
ஏற்கனவே அம்பானி இதற்கான திட்டத்தில் இறங்கி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், டாடா பெரும் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி அம்பானி குழுமத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
டாடா குழுமம்
152 வருட வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் பேஷன், லைப்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், ரீடைல், உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், இன்சூரன்ஸ், நிதியியல் சேவை, டிஜிட்டல் கன்டென்ட், கல்வி என அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சூப்பர் ஆப் உருவாக்கும் பணியில் உள்ளது.
ஜியோவின் பலம்
ரிலையன்ஸ் ஜியோவும் டாடா குழுமத்தைப் போலவே சூப்பர் ஆப் உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் வேளையில், இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ஜியோவின் 40 கோடி டெலிகாம் வாடிக்கையாளர்கள் தான். இது டிஜிட்டல் வாடிக்கையாளர் எண்ணிக்கை டாடா குழுமத்திடம் இல்லை.
வால்மார்ட்
சூப்பர் ஆப்-க்கு அடிப்படைத் தேவையே வாடிக்கையாளர்கள் தான், இது இல்லாத நிலையில் டாடா குழுமம் இந்தியாவில் பிளிப்கார்ட் முதலீட்டின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் வால்மார்ட் உடன் 25 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது டாடா குழுமம்.
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் பிளிப்கார்ட்-ன் வாடிக்கையாளர்கள், போன்பே போன்ற டிஜிட்டல் பேமென்ட் வாடிக்கையாளர்கள், வர்த்தகத் தளம் போன்ற அனைத்தும் டாடா குழுமம் பெறும்.
டாடா - அலிபாபா
டாடா குழுமம் தற்போது டீ முதல் ஜாகுவார் கார் வரையில் 100க்கும் அதிகமாக வர்த்தகங்களைப் பல்வேறு நாடுகளில் சப்ளை செயின் உடன் வைத்துள்ளது. இந்நிலையில் டாடா தனது விற்பனையாளர்களுக்கு ஒரு தளத்தை அமைத்தால் B2B, C2C, B2C, C2B என அனைத்து விதமான பிரிவிற்கும், அனைத்து விதமான வர்த்தகத்திற்கும் சேவை அளிக்க முடியும்.
நிதி தேவை மற்றும் கடன் சுமை
டாடா குழுமத்திற்குத் தற்போது ஏர்ஏசியா பங்குகளை வாங்கவும், பலோஜி குடும்பம் வைத்திருக்கும் 18 சதவீத டாடா சன்ஸ் பங்குகளை வாங்கவும் அதிகளவிலான நிதி தேவை உள்ளது. மேலும் டாடாவின் ஆட்டோமொபைல் மற்றும் ஸ்டீல் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான கடன் உள்ளது இதுவே அம்பானி குழுமத்தில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த அளவு கடந்த நிதி உள்ளது.
சீனா சந்தை
சீனாவின் அலிபாபா-வாக டாடா குழுமம், டிஜிட்டல் வர்த்தகத்தில் மட்டும் கொடிகட்டிப் பறக்கும் சீனாவின் டென்சென்ட் போல ரிலையன்ஸ் ஜியோவும் இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தைச் சூப்பர் ஆப் மூலம் பங்குபோட்டுக்கொள்ள உள்ளது.
இவ்விரு நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் போட்டிகள் தான் இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையின் வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக