
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பெரும்பாலானோர் இனி அதைப் பயன்படுத்தவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். காரணம், அதில் அதிக வட்டி, அபராதம் செலுத்த வேண்டியிருப்பதுதான். கிரெடிட் கார்டுகளை முறையாகப் பயன்படுத்தினால் அவை நமக்கு மிகச் சிறந்த உதவியாக இருக்கும். கிரெடிட் கார்டுகள் மூலமாக அதிக நஷ்டம் ஏற்படாமல் இருப்பது எப்படி என்றும் அதை எவ்வாறு சரியாகக் கையாள்வது எப்படி என்றும் இங்கே பார்க்கலாம்..
பேலன்ஸ் டிரான்ஸ்பர் வசதி!
ஒரு கிரெடிட் கார்டில் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கிவிட்டு அதற்கு அதிக வட்டியும் அபராதமும் செலுத்த வேண்டியிருந்தால், நீங்கள் அந்த கார்டில் உள்ள கடன் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டுக்கு மாற்றும் வசதி உள்ளது. இதனால் உங்களது வட்டிச் சுமை கணிசமான அளவில் குறையும். அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் இந்த பேலன்ஸ் டிரான்ஸ்பர் வசதியை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் பலர் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு வட்டி வசூலிக்கப்பட்டாலும் முன்னர் வசூலிக்கப்பட்ட வட்டியுடன் ஒப்பிடும்போது சுமை குறைவாகவே இருக்கும்.
மினிமம் டியூ!
உங்களது கிரெடிட் கார்டில் நீங்கள் அதிகக் கடன் வாங்கியிருந்தால் குறைந்தது நீங்கள் மினிமம் தொகையையாவது ஒவ்வொரு மாதமும் கட்டிவிடுவது நல்லது. இல்லையென்றால் வட்டிக்கே வட்டி, அபராதம் என நீங்கள் அளவுக்கு அதிகமான கடன் வலையில் சிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தால் அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் உண்டான மினிமம் தொகையைத் தவறாமல் செலுத்திவிட வேண்டும். நீங்கள் ஈஎம்ஐ முறைக்கு மாற்றி கிரெடிட் கார்டு பாக்கியைச் செலுத்தலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் மிகப் பெரிய அபராதம் செலுத்துவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். அசல் தொகையை விட அதிகமான அபராதம், வட்டி செலுத்த வேண்டி வரலாம்.
தனிநபர் கடனுக்கு மாற்றலாம்!
வங்கிகளில் வழக்கமான வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டியை விட கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதற்குச் செலுத்தும் வட்டி அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். கிரெடிட் கார்டு பாக்கியை நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரியாகச் செலுத்தாவிட்டால் மொத்தமாக ஒரு பெரும் தொகையை நீங்கள் இழக்க நேரிடும். எனவே நீங்கள் அதிக வட்டிக்கு கிரெடிட் கார்டு பாக்கியைச் செலுத்துவதை விட, அதை விடக் குறைந்த வட்டியில் வங்கியில் தனிநபர் கடன் வாங்கிவிடலாம். தனிநபர் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்பட்டாலும் அது கிரெடிட் கார்டு வட்டிச் சுமையை விடக் குறைவாகவே இருக்கும். எனவே நீங்கள் வங்கியில் தனிநபர் கடன் வாங்கிக்கூட அதை வைத்து கிரெடிட் கார்டு பாக்கியை முழுவதுமாகச் செலுத்திவிடலாம்.
தேவையற்ற செலவுகள்!
கொரோனா போன்ற நெருக்கடியான சமயத்தில் வேலையையும் சம்பளத்தையும் இழந்தவர்கள் பண நெருக்கடிக்கு ஆளாகி வேறு வழியில்லாமல் தங்களிடம் உள்ள கிரெடிட் கார்டுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சூழலில்தான் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது உண்மையிலேயே அது அத்தியாவசியமான செலவுதானா என்பதைப் பல முறை சிந்திக்க வேண்டும். கையில் கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக் கூடாது. ஒரு மாதம் முடிந்ததும் அந்தத் தொகை முழுவதையும் செலுத்தியாக வேண்டும். அதற்கு வேலையும் வருமானமும் இருக்க வேண்டும். எனவே கொரோனா போன்ற நெருக்கடியான சமயங்களில் மிகவும் சிக்கனமாகச் செலவிட வேண்டும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக