இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அமெரிக்க ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிர்வாகத்தின் கீழ் பெரிய அளவில் வர்த்தகம் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 3,150.6 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் முயற்சியில் பல தள்ளுபடிகளையும், புதிய வியாபார உக்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேவேளையில் பிளிப்கார்ட் ஏற்கனவே அமேசான் ஆதிக்கத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த வருடம் ஈகாமர்ஸ் சந்தையில் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கத்தைச் செய்துள்ளது. இது பிளிப்கார்ட் வர்த்தகத்தை 2020-21ஆம் நிதியாண்டில் அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட் நஷ்டம்
பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதியாண்டில் 3,836.8 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், மார்ச் 31, 2020 உடன் முடிந்த நிதியாண்டில் 3,150.6 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை மட்டுமே அடைந்துள்ளது.
இதன் மூலம் நஷ்டத்தின் அளவு சுமார் 686.2 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
வருமானம்
இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மார்ச் 31,2020 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 34,610.1 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 30,934.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருமானம் கடந்த 2 வருடத்தில் சுமார் 11.88 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதேவேளையில் நஷ்டத்தின் அளவும் 17.88 சதவீதம் சரிந்துள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2 வருடமாகப் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்பே வாயிலாகப் பிளிப்கார்ட் இந்தியாவின் டவுன் மற்றும் கிராமப்புறத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வர்த்தகப் பொருட்கள்
பிளிப்கார்ட் தற்போது மொபைல், டிவி, லேப்டாப், லேட்டெல், மொபைல் ஆக்ஸசரிஸ், புட்வேர், ஆடை இன்னும் இதர பொருட்களை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் பணிகளையும் துவங்கியுள்ளது. இதனால் பிளிப்கார்ட்-ல் B2B வர்த்தகமும் சிறப்பான முறையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
லாக்டவுன் முன்பு வரையில் ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் - அமேசான் என இருமுனை போட்டியாக மட்டுமே இருந்த நிலையில் லாக்டவுன் அறிவிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோமார்ட் இவ்விரு நிறுவனங்களுக்கும் பெரும் போட்டியை அளித்துள்ளது.
இந்த லாக்டவுன் காலத்தில் ஜியோ பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈட்டியது போல் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தைப் பல மடங்கு விரிவாக்கம் செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஜியோமார்ட்
ஜியோமார்ட் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 200க்கும் அதிகமான நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் முறையாக வெற்றிகண்டுள்ளது.
ஜியோமார்ட் வருகைக்குப் பின் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பல வர்த்தகங்களை விரிவாக்கம் செய்தும், வர்த்தக மேம்பாட்டிற்காக அதிகளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2020-21 நிதியாண்டு
இருமுனை போட்டியாக இருந்து ஈகாமர்ஸ் சந்தை தற்போது மும்முனை போட்டியாக (அமேசான் - பிளிப்கார்ட் - ஜியோமார்ட்) மாறியுள்ளது. இதனால் 2020-21 நிதியாண்டில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தற்போதைய அளவை விடவும் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக