பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின் படி 58 சீன செயலிகள் மீது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் நிரந்தரத் தடை விதித்தது. இந்த 58 செயலிகளில் அதிக வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஷாட் வீடியோ செயலியான டிக்டாக் மற்றும் ஹலோ ஆகியவற்றின் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.
பையிட் டான்ஸ் நிறுவனத்தின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியான வெனேசா பாப்பாஸ் மற்றும் துணைத் தலைவரான ப்ளேக் சந்தலி ஆகியோர் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த முடிவைப் புதன்கிழமை வெளியிட்ட நிலையில், இந்திய வர்த்தகத்தில் இருந்து பெருமளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளில் பணியாற்றி வரும் இந்திய ஊழியர்களுக்குப் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
58 செயலிகள் மீது நிரந்தரத் தடை
மத்திய அரசு 2020ல் இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுமார் 59 சீன செயலிகளைத் தற்காலிகமாகத் தடை செய்த நிலையில், தற்போது சுமார் 58 செயலிகள் மீது நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த 58 செயலிகளுக்கு இந்தியாவில் எவ்விதமான வர்த்தகமும், சேவையும் அளிக்கத் துளியும் வாய்ப்பு இல்லை என்பதால் பையிட் டான்ஸ் தனது இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
டிக்டாக் மற்றும் ஹலோ
பையிட் டான்ஸ்-ன் டிக்டாக் மற்றும் ஹலோ செயலி மீது தடை விதிக்கப்பட்டு சுமார் 6 மாதம் 2000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் வைத்திருந்த நிலையிலும், தற்போது நிரந்தரத் தடையின் காரணமாக அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2000 ஊழியர்கள்
இந்த அறிவிப்பின் மூலம் டிக்டாக் மற்றும் ஹலோ செயலியில் பணியாற்றிய 2000 ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு வருகிற ஜனவரி 29ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் இந்தியாவில் தற்போது 20,000க்கு அதிகமான ஊழியர்கள் சீன நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
சீன பின்டெக் நிறுவனங்கள்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு இந்தியாவில் செயல்படும் சீன பின்டெக் நிறுவனங்களை தனது கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளது. தனிநபர் கடன் சேவைகளை அளிக்கும் செயலிகளான ஸ்னாப்இட், ப்பிள் லோன், கோ கேஷ், பிளிப் கேஷ் போன்ற 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை மற்றும் குற்றவியல் புலனாய்வு பிரிவு ஆகியவை விசாரணை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிறுவனங்களுக்கு வேறு எந்த நிறுவனமும் நிதி பரிமாற்ற சேவை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.\
எல்லை பிரச்சனை
இந்திய சீன எல்லை பிரச்சனை காரணமாக, இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த 200க்கும் மேற்பட்ட செயலிகளை இந்திய அரசு தடை செய்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பாகச் சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மத்தியில் நடந்த மோதலால் இரு நாடுகளுக்கு மத்தியில் மீண்டும் பிரச்சனை பெரியதாக வெடிக்கத் துவங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக