தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பிறகு, பல மாற்றங்கள் நடந்தது என்னவோ உண்மை தான். குறிப்பாக டேட்டா விலை, எஸ்.எம்.எஸ், கால் கட்டணங்கள் என பலவும் குறைந்துள்ளன.
இப்படி ஒரு நிலைக்கு மத்தியில் ஜியோவின் வருகை பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்தது எனலாம். ஏனெனில் ஆரம்பமே, இலவசம் என அசத்தலாக தொலை தொடர்பு துறைக்குள் நுழைந்தது.
குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கைக்குள் வைத்துக்கொள்ள, ஜியோவின் முக்கிய அஸ்திரமாக டேட்டா சலுகைகளாக பயன்பட்டது எனலாம். இதுவே ஜியோ சீக்கிரமே சந்தையில் பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர காரணமாக அமைந்தது என்றும் கூறலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஏர்டெல் பெரிய அளவிலான போட்டிகள் எதுவும் இன்றி, மிகவும் சிறப்பானதொரு நெட்வொர்க்காக தொலை தொடர்பு துறையில் இருந்து வந்தது. ஆனால் ஜியோவின் வருகைக்குப் பின்னர், அது தலைகீழாக மாறிபோனது. ஏனெனில் ஜியோவின் முதல் அடியே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு மீளாத அளவுக்கு நஷ்டத்தினை கொடுத்தது.
மாதம் 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, இடையில் டாப் அப் செய்து, ரேட் கட்டர் போட்டு அதற்கு தனியாக ரீசார்ஜ் என மாதம் 500 - 600 ரூபாயினை தாண்டி விடும். ஆனால் அப்படி ரீசார்ஜ் செய்தாலும் இன்று நாம் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் இணைய சேவையை, அன்று மாதம் முழுக்க பயன்படுத்தினோம். ஆனால் ஜியோவில் அப்படியில்லை. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை கவர, மாத கணக்கில் இலவச டேட்டா, இலவச கால்கள் என வாரி இறைத்தது ஜியோ.
ஜியோவின் இந்த செயலால் அந்த சமயத்தில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்தனர். இதனால் அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள, கண் முன் இருக்கும் லாபத்தினை மறந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி தெளித்தன.
ஒரு காலகட்டத்தில் இன்கமிங் வசதிக்காக ஏர்டெல், வோடபோனை பயன்படுத்திக் கொண்டு, டேட்டாவுக்காக ஜியோவினை பயன்படுத்தியவர்கள் ஏராளம். இப்படி பலத்த பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தான், இந்திய அரசின் ஏஜிஆர் கட்டண விகிதம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பும் வெளிவந்தது. இது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மற்றொரு பேரிடியாய் வந்தது.
ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், ஏஜிஆர் நிலுவை தொகையினால் இன்னும் பின்னடைவை சந்தித்தன. ஒரு கட்டத்தில் கடைக்கு பூட்டுபோடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினர். அந்தளவுக்கு பெரும் நஷ்டத்தையும், கடனையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கண்டன. ஏன் இந்த காலகட்டத்தில் சில தொலைதொடர்பு நிறுவனங்கள் சந்தையை விட்டே விலகியது குறிப்பிடத்தக்கது.
எப்படியிருப்பினும் பல போராட்டமான காலகட்டத்திற்கு பிறகு, ஏஜிஆர் நிலுவையை செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தப்பித்தோம், பிழைத்தோம் என ஏற்கனவே சமீபத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒரு முறை கட்டணங்களை உயர்த்தியுள்ளன. தற்போதும் இந்த கட்டணத்தினை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ள நிலையில், இதன் மூலம் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் அர்பு விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் ப்ரீபெய்டு கட்டணங்களை அதிகரித்த நிலையில், அதனை தொடர்ந்து வோடபோன் கட்டணமும் அதிகரித்துள்ளது. இது நவம்பர் 25 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த நிறுவனங்களும் கட்டத்திணை தொடர்ந்து சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வரும் ஜியோவும் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முந்தைய நேரங்களில் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் அதிகரித்த சமயத்தில், ஜியோவும் கட்டணத்தினை அதிகரித்தது. ஆக அதுபோல இந்த முறையும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ள நிலையில், லாபத்திற்கு திரும்ப முயற்சித்து வருகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் ஏற்கனவே லாபத்தில் தான் உள்ளது. இதனால் ஜியோ கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனினும் இது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை. வரும் வாரத்தில் கூட இது குறித்த அறிவிப்பினை வெளியிடலாம். எனினும் ஜியோவுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமையும். ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு டிராய் வெளியிட்ட அறிக்கையின் படி, ஏர்டெல் நிறுவனம் மட்டுமே 2.74 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முறையே 1.9 கோடி மற்றும் 10.77 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் வயர்லெஸ் வாடிக்கையாளர்களையும் கணிசமாக இணைத்துள்ளது. அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ 4.29% சரிவினைக் கண்டுள்ளது.
அப்படியே ஜியோ கட்டணத்தினை அதிகரிக்க முற்பட்டாலும், ஏர்டெல், வோடபோனை விட குறைவாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோவின் கட்டணங்கள் குறைவாகத் தான் உள்ளன. ஆக அடுத்து வரும் சில தினங்களில் ஜியோவின் அறிவிப்பு வந்தாலும் வரலாம். எனினும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள கட்டணத்தினை உயர்த்தாமல் அப்படியேவும் வைத்திருக்கலாம். இது இழந்த வாடிக்கையாளர்களை மீட்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எப்படியிருப்பும் அம்பானியின் மாஸ்டர் பிளான் என்னவென்று இன்னும் சில தினங்களில் தெரியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக