Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஆகஸ்ட், 2018

குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப்ஸ் !

 

Image result for kids playing with mobile

பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.
எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.
“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் ! அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
இருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.
உண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா ? குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா ?
நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.
சில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
இவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.
ஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.
பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் ? என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்தை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.
5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக