இன்று ஆசிரியர் தினம் : மாணவர்களை செதுக்கும் சிற்பிகள் !!
முத்தான சிந்தனை துளிகள் !
'எந்தவித கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்." உலக கருணை தினம்

உலக கருணை தினம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும் இத்தினம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது.
டாக்டர் ராதாகிருஷ்ணன்

நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.
இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம், காந்தி.
இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது இவருக்கு 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 86வது வயதில் (1975) மறைந்தார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. அக்டோபர் 1906ஆம் ஆண்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரை தேவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
முக்கிய நிகழ்வுகள்
1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசா மறைந்தார்.
1980ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1903ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தமிழறிஞர் ஒளவை துரைசாமி விழுப்புரத்தில் பிறந்தார்.