எழுத்தாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர், கம்யூனிச சித்தாந்தவாதி, மக்கள் போர்க்குழு என்ற நக்சல் அமைப்பைத் தோற்றுவித்தவர் எனப் பன்முகம்கொண்ட கொண்டபல்லி கோடேஸ்வரம்மா, தனது 100-வது வயதில் இன்று காலமானார். இவர், தன் பேத்தியுடன் விசாகப்பட்டினத்தில் வசித்துவந்தார்.
ஆந்திரப்பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் பம்மாரு என்ற கிராமத்தில் பிறந்தவர். 4 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கணவனை இழந்து, மிக இளம் வயதிலேயே குழந்தை விதவையாக ஆக்கப்பட்டவர். அதன்பின், பல்வேறு சமூக எதிர்ப்புகளுக்கிடையே கொண்டபல்லி சித்தராமையா என்பவரைத் தன் பதினெட்டாவது வயதில் திருமணம் செய்துகொண்டார். இவருடனான திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. கணவருடனான பிரிவிற்குப் பின், தன் மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்துவந்தவர், தன் 35 வயதில் ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ச்சிபெற்றார்.
தன்னை கம்யூனிசக் கட்சியுடன் இணைத்துக்கொண்டு, பெண் விடுதலை, அடித்தள மக்கள் பிரச்னைகள் தொடர்பாக மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். தெலங்கானா மாநிலம் உருவாவதற்காக மிகத் தீவரமாகச் செயல்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கட்டுரைகள் மற்றும் பாடல்கள்மூலம் பல்வேறு சமூகப் பிரச்னைகள் சார்ந்து தொடர்ந்து இயங்கிவந்த இவரது சுயசரிதை, 'நிர்ஜன வாரிதி' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இதைத் தமிழில் கெளரி கிருபானந்தன் 'ஆளற்ற பாலம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் மூலம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்னும் நான்கு நூல்களும் பல கட்டுரைகளும் தெலுங்கில் எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக