Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 ஏப்ரல், 2019

ஆலமரத்தடியில் அலறும் ஆவி!



ஆவி! க்கான பட முடிவு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் சோழமாதேவி அருகேயுள்ள கிராமம். நள்ளிரவு 12.30 மணி. செகண்ட் ஷோ முடிந்து டூவீலர், சைக்கிளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஆர்க்கெஸ்ட்ராவை ரசித்த பின், தோழிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறாள் 18 வயது இளம்பெண். திடீரென பாதத்தில் முள் குத்திய உணர்வு. குனிந்து ஒற்றைக் காலை தூக்கி ஒன்றுமில்லை என்று ஊர்ஜிதப்படுத்துவதற்குள் தோழிகளிடம் இருந்து சில அடி தொலைவு பின்தங்குகிறாள். ஏதோ சத்தம் கேட்டு ரோட்டோர ஆலமரத்தை திரும்பிப் பார்க்கிறாள். அத்துவான காட்டுக்குள் தலைவிரி கோலத்தில் சொட்டுநீல வெள்ளை உடையில் பெண் கதறிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும். பார்த்த பதற்றத்தில் இளம்பெண் பேதலித்து நின்றிருக்க.. திடீரென மின்னல் வெட்டியதுபோல உடல் அதிர்கிறது. அடுத்த கணம்.. ஆலமரத்தடியில் சிரித்துக்கொண்டிருந்த சொட்டுநீல பெண் உருவம் அங்கு மறைந்துவிடுகிறது.

இடம், வலம் பார்த்து எண்ணிக்கையில் ஒன்று குறைவதை உணர்ந்த தோழிகள் திரும்பி “ஏண்டீ அங்கயே நின்னுட்ட. வா போலாம்” என்று குரல் கொடுக்கின்றனர். இளம்பெண் ஆடாமல், அசையாமல் கழுத்தை சாய்த்து வானத்தை பார்த்தபடி அதே இடத்தில் நின்றிருக்கிறாள். “என்னாச்சுடி. பேய் பிடிச்ச மாதிரி நிக்கிற” என்று தோழிகள் உலுக்கியது எடுபடவில்லை. அன்று தொடங்கியதுதான்.. தினமும் நடுராத்திரி 12 மணிக்கு ஆலமரத்தடிக்கு வந்துவிடுவாள். வெறித்து பார்த்துக்கொண்டிருப்பவள் திடீரென பெருங்குரலெடுத்து ஓலமிடுவாள். தினமும் இது தொடர்கதையானதில் பெற்றோர் பதைபதைக்கின்றனர். கருப்புக் கயிறு, வேப்பிலை அடி என ஏதேதோ செய்தும் நள்ளிரவு ஓலம் நிற்கவில்லை. பக்கத்து ஊர் பூசாரியை அழைத்து வருகின்றனர்.

***
“எண்பது, எண்பத்தஞ்சு வருஷம் இருக்கும். இந்த கிராமத்துல ஒரு வியாபாரி ரொம்ப வசதியா வாழ்ந்தாரு. கோடீஸ்வரன். அவரு பொண்டாடிக்கிட்ட தங்கம், வைரம்னு ஏகப்பட்ட நகைங்க. அவங்க வீட்டுல செல்வினு ஒரு பொண்ணு வேலை பாத்திச்சு. எஜமானியம்மா நகைகள எப்படியாச்சும் ஒரு தடவை போட்டுப் பார்த்துடணும்னு செல்விக்கு ஆச. ஆனா, அதுக்கு வாய்ப்பே கிடைக்கல.

ஒருநா. தோட்டத்து கெணத்துல துணி துவைக்க போனப்ப, தவறி விழுந்து செல்வி செத்துப்போச்சு. அதுக்கப்புறமும் நகை மேல இருந்த ஆச மறையல. அந்த ஆசையில செல்வி ஆவி சுத்தி வர்றதா பேசிக்கிட்டாங்க. கொஞ்ச நா கழிச்சு, வியாபாரி வெளியூரு போயிருந்தாரு. திடீர்னு மாமியாரு ரூபத்துல செல்வி ஆவி உருமாறி எஜமானிட்ட போச்சு. “வெளியூர் போன புள்ளைக்கு நல்ல வியாபார வாய்ப்பு வந்திருக்காம். பணம் நெறைய தேவைப்படுதாம். நகைகளை கொடுத்தனுப்பச் சொல்லி ஆள் அனுப்பியிருக்கான்”னு சொல்றா. அத்தனை நகையையும் துணியில மூட்டையா கட்டி எஜமானி கொடுத்தா. செல்வி ஆவி அதை எடுத்துட்டு ஊருக்கு வெளியே இருக்கிற ஆலமரத்துக்கு வந்திச்சு. அங்க இருந்த ராட்சத பொந்துல நகை மூட்டைய பத்திரமா வச்சுது.

ஊர்ல ஓசை அடங்கின அப்புறம், செல்வி ஆவி எல்லா நகையையும் எடுத்து போட்டுக்கும். ஆனந்தமா நடனம் ஆடும். திடீர்னு ஒருநா, நகை மூட்டை காணாப்போய்டுச்சு. எவனோ திருடிட்டு போய்ட்டான். ஆலமரம் முழுக்க செல்வி ஆவி தேடிப் பாத்துது. கெடைக்கல. அந்த வேதனையில ஒப்பாரி வச்சு அழ ஆரம்பிச்சுது. தினமும் நகை மூட்டைய தேடி அலையும். கிடைக்கலைனு அழும். நடுராத்திரியில அந்த வழியா யாராச்சும் போனா, அவங்க உடம்புல ஆவி பூந்துக்கும். இந்த பொண்ணு உடம்புலயும் அப்படித்தான் பூந்திருக்குது” என்று திகில் பிளாஷ்பேக் கதை சொல்லி முடித்தார் பூசாரி.

எலுமிச்சை, குங்குமம், வேப்பிலை, எக்ஸட்ராவுடன் ஆவி பாஷையில் ஏதோ மந்திரங்களை சொல்கிறார். தலைவிரி கோலத்துடன் ஆடும் பெண் மீது மந்திர விபூதியை வீசுகிறார். மூர்ச்சையாகி விழுந்த பெண் சிறிது நேரத்துக்கு பிறகு இயல்பாக எழுகிறார். ஆலமரத்தடியில் இப்போதும் நள்ளிரவில் திடீரென்று அழுகைச் சத்தம் கேட்பதாக சொல்கிறார்கள் மக்கள்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!