Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 மார்ச், 2020

பிஎஃப் வட்டி குறைப்பு: வாடிக்கையாளர்கள் அதிருப்தி!



பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான இந்த ஆண்டின் வட்டி விகிதம் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் நிறுவனம் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்பு செய்து சேமித்து வைக்கும் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னரோ அல்லது தொழிலாளர்களின் தேவையைப் பொறுத்தோ பின்னர் பெற்றுக் கொள்ளலாம். பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அந்த ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.

இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் தற்போது 8.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 8.65 சதவீதமாக வட்டி விகிதம் இருந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வட்டிக் குறைப்பு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வட்டி விகிதக் குறைப்புக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பின்னர் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கையால் வருங்கால வைப்பு நிதியில் கணக்கு வைத்திருக்கும் 6 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. முன்னதாக, 2016-17 ஆண்டில் 8.65 சதவீதமும், 2017-18ஆம் ஆண்டில் 8.55 சதவீதமும், 2018-19ஆம் ஆண்டில் 8.65 சதவீதமும் வட்டி விகிதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!