Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை !

இவ்வுலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சாதிக்க எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. சிலருக்கு சரியான பாதையை காட்டி சாதிக்க வழிவகுக்கிறது. ஒரு சிலருக்கு சரியான பாதை அமைந்தாலும் மேற்கொண்டு முன்னேற தடுமாறுகிறார்கள். அந்த தடுமாற்றத்தை தகர்த்தெறிய ஒரு குட்டி கதை உங்களுக்காக !

நாட்டின் மிகப்பெரிய சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு ஒருமுறை சீன தேசத்து அறிஞர் ஒருவர் வருகை தந்தார். அந்த அறிஞர் சக்கரவர்த்திக்கு தாயை இழந்த இரு பஞ்சவர்ண கிளிகளை பரிசாக கொடுத்துவிட்டுச் சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவதால் சக்கரவர்த்தி அப்பரிசை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். சீன தேசத்து அறிஞர் சென்ற பிறகு, தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து, இந்த கிளிக்குஞ்சுகளை நன்றாக பராமரித்து, பக்குவப்படுத்தி பறப்பதற்கு பயிற்சி அளியுங்கள் என்று கட்டளையிட்டார்.

சில மாதங்கள் சென்றது. சக்கரவர்த்திக்கு பறவைகள் எவ்வாறு வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்பதை தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டு பறவைகள் பயிற்சியாளரை அழைத்து விசாரித்தார். பயிற்சியாளர், அரசே! பறவைகள் இரண்டும் நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் அதில் ஒரு பறவை மட்டும் எவ்வளவு முயற்சித்தும் மரக்கிளையை விட்டு நகர மறுக்கிறது என்றான். உடனே மன்னர், நாட்டில் பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும், பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார்.

அவர்கள் பறவையை முற்றிலும் பரிசோதித்து விட்டு சக்கரவர்த்தியிடம், அரசே! இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை என்றனர். பிறகு மன்னர், அமைச்சரை பார்த்து, நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டு சென்றார். அடுத்த நாள் மன்னர் தனது மாளிகையில் வெளிப்புறத்தில் இருந்து அக்கிளியை பார்த்தார். ஆனால் கிளி மரக்கிளையை விட்டு நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தது.

மன்னர், இந்த கிளிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! விவசாயிகள் யாரையாவது அழைத்து கேட்டால் பதில் தெரியக்கூடும் என நினைத்து, காவலாளியை அழைத்து யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். விவசாயி மன்னர் முன் நிறுத்தப்பட்டார். மன்னர் விவசாயியிடம், நீங்கள் இந்த பஞ்சவர்ண கிளியை எப்படியாவது பறக்க வைக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.

அடுத்த நாள் காலை, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை மன்னர் பார்த்தார். இதைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அந்த விவசாயி மன்னர் முன்பு வந்து பணிந்து நின்றார். எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய் என்று கேட்டார். விவசாயி, அரசே! இது மிகவும் சுலபமான விஷயம். நான் மரத்தில் ஏறி கிளி அமர்ந்திருந்த மரக்கிளையை வெட்டி விட்டேன் என்றான்.

தத்துவம் :

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்கிறோம். அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை என்ன என்பதை நம்மில் பலருக்கு கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறந்து சாதனைகள் பல புரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக