Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 27 மே, 2020

குழந்தைக்கு பாதாம், பிஸ்தா, பேரீச்சை, எப்போது எப்படி கொடுக்கணும், அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!

குழந்தைக்கு பாதாம், பிஸ்தா, பேரீச்சை, எப்போது எப்படி கொடுக்கணும், அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!

ஆறுமாத குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு இணை உணவு கொடுக்கும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்டும்.பாதாம், பிஸ்தா, வால்நட், பேரீச்சை, உலர் திராட்சை போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் , ஆரோக்கியத்துக்கும் மிகவும் நன்மை செய்கிறது . இதை கொண்டு வீட்டிலேயே சத்தான..


உலர் பருப்புகள் தரும் ஊட்டச்சத்து குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. குழந்தைகளுக்கு நிறைவான் ஊட்டச்சத்தை அவர்கள் வளரும் போதே கொடுத்து பழகினால் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உடல் உறுதியாக வளர்வார்கள். குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட்ஸ் கஞ்சி, எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

குழந்தைக்கு பல் முளைப்பதற்கு முன்பு மென்மையான உணவுகளை கூட மசித்து கொடுக்க வேண்டும் என்பதால் பலரும் ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையை கொடுக்க விரும்புவதில்லை. அதற்கு மாற்றாக வெளியில் கிடைக்கும் ஊட்டச்சத்து பவுடர்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் செயற்கை சுவைகளுக்கு மயங்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகு இயற்கை தரும் சத்துள்ள உணவு வகைகளை விரும்புவதில்லை.

சிலருக்கு குழந்தைக்கு இயற்கையாக ஊட்டச்சத்து தரும் உணவு பொருள்களை கொடுக்க விரும்பினாலும் பல் இல்லாத குழந்தைக்கு எப்படி தருவது என்ற சந்தேகமும் உண்டு. இப்போது குறிப்பிடும் இந்த நட்ஸ் மசியல் ஐந்து மாதங்கள் முதலே குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் மூளை வளர்ச்சிக்கும் உதவும் என்பதால் இதை தவிர்க்காமல் கொடுக்கலாம்.

மேலும் வீட்டிலேயே அவ்வபோது தயாரித்து கொடுப்பதால் சுகாதாரம் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. மிக எளிய முறையில் இதை அரைமணி நேரத்தில் தயாரித்துவிட முடியும். எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

தேவை
பாதாம் -1
பிஸ்தா -2
வால்நட் -1
பேரீச்சை - பாதி அளவு,
கறுப்பு திராட்சை - 2,
சுக்குப்பொடி - சிட்டிகை

செய்முறை
பாதாமை மட்டும் தனியாக ஊறவைக்கவும். பேரீச்சை கொட்டை இல்லாமல், உலர் திராட்சையை இலேசாக தண்ணீரில் அலசி பேரீச்சையை நறுக்கி அதனுடன் வால்நட், பிஸ்தா பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

அரைமணி நேரம் கழித்து பாதாமை தோல் நீக்கி அதனுடன் ஊறவைத்த இதர பருப்புகளை சேர்க்கவும். அதை எடுத்து மிக்ஸியை சுத்தமாக கழுவி அதில் இட்டு மைய அரைக்கவும். நன்றாக மசிய வேண்டும். சிறு மிளகு அளவு இருந்தாலும் அவை தொண்டையில் சிக்கி கொள்ளும் வாய்ப்புண்டு. மசிய அரைத்ததும் கைகளை சுத்தம் செய்து மசியலை மேலும் கைகளால் குழைத்து பாருங்கள். பிறகு சிட்டிகை அளவு அல்லது விரல் பஞ்ச் அளவு சுக்குப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

காலை வேளையில் குழந்தைக்கு 3 டீஸ்பூன் அளவு ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக இதன் அளவை அதிகரிக்கலாம். முதலில் வாரத்துக்கு இரண்டு முறை தொடங்கி படிப்படியாக இரண்டு நாளுக்கு ஒருமுறை கொடுத்துவரலாம். எளிதில் செரிமானமாகவே சுக்குப்பொடி சேர்ப்பதால் தயக்கமின்றி கொடுக்கலாம். இவையே இனிப்பு என்பதால் இனிப்பு சேர்க்க வேண்டியதில்லை. அப்படி சேர்ப்பதாக இருந்தாலும் தேன் கொடுக்க வேண்டாம். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை தேன் சேர்க்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேரீச்சை குழந்தைக்கு போதுமான இரும்புச்சத்தை கொடுக்கும். பாதாம் ஆரோக்கியமான உடல் கொழுப்பை குழந்தைக்கு அளிக்கும். வால்நட் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வால்நட் மூளைக்கான உணவு என்றே அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை குழந்தைக்கு மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாப்பதோடு சிறுநீரகத்தின் பணியையும் சீராக்குகிறது. பிஸ்தா குழந்தையின் கண்களுக்கு நல்லது. புற்றுநோய் தடுக்ககூடியது. உடல் செல்களை புத்துணர்வாக வைத்திருக்க உதவுகிறது. இதை விட சிறந்த ஊட்டச்சத்து என்ன கொடுக்க முடியும். குழந்தைக்கு ஒரு வயதானபிறகு முந்திரியை சேர்க்கலாம். முந்திரி சில நேரங்களில் மந்தம் கொடுக்கும் என்பதால் எப்போதாவது ஒருமுறை சேர்க்கலாம்.

நல்ல நிறைவான ஊட்டச்சத்து என்பதால் குழந்தை நல்ல புஷ்டியாக ஆரோக்கியமாக வளர உதவும். இனி உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வீட்டிலேயே ஆரோக்கியமாக சுகாதாரமான முறையில் பூர்த்தி செய்யுங்கள். வளர்ந்த குழந்தைகளுக்கும் ஏற்ற ஊட்டச்சத்து மிக்க பானம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!