Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

அனுமன் இலங்கைக்கு தீ வைத்தல்!

இராவணன் விபீஷணனிடம், தம்பி! நல்லது செய்தாய். இல்லையென்றால் இக்குரங்கை கொன்று பாவம் செய்திருப்பேன் என்றான். ஆனால் இந்த வானரம் குற்றம் செய்துள்ளது. அதற்கு தண்டனை தர வேண்டும் என நினைத்தான். 

அதனால் இக்குரங்கின் வாலில் தீ மூட்டி, இலங்கை நகரை சுற்றி வந்து பிறகு இந்நகரை விட்டு விரட்டியடியுங்கள் என்றான். அப்போது இந்திரஜித், இவன் பிரம்மாஸ்திரத்தால் பிணைக்கப்பட்டுள்ளான். அப்படி இருக்க இவன் மீது தீயிடக் கூடாது என்றான். 

உடனே அரக்கர்களிடம் இவனை கனமான கயிற்றை கொண்டு கட்டுங்கள் என சொல்லி விட்டு தன்னால் பிணைக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தை அவிழ்த்துவிட்டான். அரக்கர்கள் அனுமனை கனமான கயிற்றை கொண்டு கட்டினார்கள். 

பிறகு அரக்கர்கள் இலங்கையில் அனைத்து கயிற்றையும் கொண்டு வந்து அனுமனின் வாலில் சுற்றினார்கள்.

பிறகு அனுமனை பார்த்து இப்பொழுது உன் வீரம் என்ன ஆயிற்று என கேலி செய்தனர். சிலர் அரக்கிகள் ஓடிப்போய் நடந்தவற்றை சீதையிடம் கூறினர். சீதை இதைக் கேட்டு மிகவும் வருந்தினாள். 

உடனே அவள், அக்னி தேவனே! இவ்வரக்கர்கள் அனுமனுக்கு இழைக்கும் கொடுமையைப் பார்! நான் கற்புடைய பெண் என்றால் அக்னியே! நீ அனுமனை சுடக் கூடாது என்றாள். சீதையின் துன்பத்தைக் கண்டு அக்னி தேவனும் பயந்தான். 

அங்கு அரக்கர்கள் அனுமனின் வாலில் தீயை மூட்டினர். ஆனால் அத்தீ அனுமனை சுடவில்லை. அனுமனுக்கு ஜில்லென்று இருந்தது, அப்போது அனுமன், அன்னை சீதை தான் நம்மை நெருப்பு சுடக் கூடாது என அக்னி தேவனை வேண்டியிருப்பாள் என நினைத்தான். 

பிறகு அனுமன் சீதை இருந்த திசையை பார்த்து தொழுதான். அரக்கர்கள் அனுமனை கயிற்றில் கட்டிக் கொண்டு இலங்கை முழுவதும் சுற்றினர். அப்பொழுது அனுமன் சரியான நேரம் பார்த்து வான் வெளியில் பறந்தான்.

 அரக்கர்கள் செய்வதறியாது அக்கயிற்றில் தொங்கினர். அனுமன் இராமனை நினைத்து, வீடுகள், மாளிகைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீயை வைத்தான். 

அப்பொழுது இலங்கை நகரம் தீயின் ஒளியால் பிரகாசமாக எரிந்தது. நெருப்பின் புகையால் இலங்கை நகரம் இருண்டு காணப்பட்டது. சில அரக்கர்கள் நெருப்பிற்கு பயந்து கடலில் குதித்தனர். 

தீயினால் இலங்கை நகரம் அழிந்தது. இலங்கை தீயில் எரிவதை கண்ட இராவணன், இதற்கு யார் காரணம்? எனக் கேட்டான். அங்கு உயிர் பிழைத்து வந்த அரக்கர்கள், குரங்கின் வாலில் நாம் இட்ட தீ தான். இலங்கை நகரம் எரிவதற்கு காரணம் என்றனர். 

கோபங்கொண்ட இராவணன், இலங்கை அழிவதற்கு காரணமாய் இருந்த அக்குரங்கை பிடித்து வாருங்கள் என கட்டளையிட்டான். அரக்கர்கள் குரங்கை பிடிக்கச் சென்றார்கள்.

இதை கவனித்த அனுமன், தன் பக்கத்தில் இருந்த மரத்தைப் பிடிங்கி அரக்கர்கள் மீது எறிந்தான். இதனால் அரக்கர்கள் மாண்டு போனார்கள். சில அரக்கர்கள் பயந்து ஒளிந்து கொண்டனர். 

பிறகு அனுமன் தன் வாலில் எரிந்து கொண்டிருக்கும் தீயை கடலில் தோய்த்து அணைத்தான். அப்போது அந்த இடத்தில் இருந்த சிலர், அனுமன் இட்ட தீ இலங்கை முழுவதும் எரிந்தது. ஆனால் அசோக வனத்திற்கு மட்டும் தீ பரவவில்லை என்றனர். 

இதைக் கேட்டு அனுமன், மகிழ்ந்தான். நல்ல வேளை அன்னை உள்ள இடத்திற்கு தீ பரவவில்லை என நினைத்தான். உடனே அனுமன், சீதையை காண அசோக வனத்திற்கு சென்றான். அனுமனை பார்த்த சீதை மகிழ்ந்தாள். 

பிறகு சீதை அனுமனின் வீரதீர செயல்களை பாராட்டினாள். அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக