Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

பூதம் காத்த புதையல்

பரமார்த்த குருவும் சீடர்களும் தூங்கிக்கொண்டிருந்த போது, தூக்கத்தில், ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்! என்று உளறினார், பரமார்த்தர். அதைக் கேட்ட சீடர்கள், குரு உளறுவதைக்கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.
 தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார், புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். உடனே எல்லோரும் கனவா? என்ன கனவு கண்டீர்கள்? என்று கேட்டார்கள். பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, புதையல்! புதையல்! என்று கத்தினார்.
 பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கும்படி! கனவு கண்டேன் என்றார். அடேயப்பா! பானை நிறைய தங்கமா? என்று மகிழ்ந்தான் மட்டி.
 இந்தப் புதையலை வைத்து, நம் குருவுக்கு அழகான குதிரையும், நாமும் ஆளுக்கு ஒரு குதிரை வாங்கலாம்! என்றனர். குருவும் சரி என்றார். குருவே! இந்த இடத்தை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்! என்று யோசனை சொன்னான் மூடன். இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்! என்று குதித்தான், மடையன். குருவே! இப்போதே அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம் என்றான் முட்டாள்.
 ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊருக்கு தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே! என்றான் மடையன். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்! என்று தோட்டத்துக்குப் போனார்கள். வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்கட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றான், முட்டாள்.
 பரமார்த்தர், தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் ஆனதும், கை எல்லாம் வலிக்கிறதே! என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.
 குருவே! புதையலை விடக்கூடாது! என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள். நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக்கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
 ஆ! புதையல்! புதையல்! என்றனர். உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டு உருண்டையாக ஏதோ ஒன்று எடுத்தார். எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப்பார்த்த்போது, பரமார்த்தரின் கையில் ஒரு மண்டை ஓடு! இருந்தது. அவ்வளவுதான்! ஐயோ! ஐயோ! என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக